27 April 2025

மாவீரர் வித்துடல் விதைப்பும் – துயிலும் இல்லங்களும்!

தமிழீழ விடுதலையின் அனைத்து அங்கங்களும் பலமான அத்திவாரத்திலேயே கட்டியெழுப்பப்பட்டன. அதற்கென ஆழமான பார்வையும், நீண்ட தீர்க்கமான வரைமுறையும் உண்டு என தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் தெரிவித்துள்ளார் என கனடாவில் உள்ள மூத்த அரசியல் ஆய்வாளர் நேரு குணரத்தினம் தனது கட்டுரை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவரது கட்டுரையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்படுவதாவது,
பெருமை கொள் இவ்வரலாற்றை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். அவை தீர்க்கதரிசனத்துடன் முன்கூட்டியே பதியப்பட்டுள்ளன. 2005 மாவீரர் நாளுக்கு வெளியான இப்பதிவை இன்றைய சூழலில் எடுத்து வருவதில் பெருமன நிறைவடைகின்றேன்.

தமிழரின் வீர வரலாற்றில் என்றோ மாண்டுபோன வீரமரபு, மீண்டும் மறுபிறப்பு எடுத்தது. அடிமைத்தனத்தின் அமைதியைக் குலைத்துக் கொண்டு, ஒரு புயல் எழுந்தது. சருகாக நெரிபட்ட தமிழன் மலையாக எழுந்து நிமிர்ந்தான். அடிமை விலங்குகளால் பிணைக்கப்பட்டு, நீண்ட நெடுங்காலமாகத் தூங்கிக் கொண்டிருந்த தமிழ்த்தேசம் விழித்துக் கொண்டது. இந்தத் தேசிய எழுச்சிக்கு மூச்சாக இருப்பவர்கள் எங்கள் மாவீரர்கள் என தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகள் தமது மாவீரர்களின் வித்துடல்களைப் புதைப்பதற்கு எடுத்த தீர்மானம், எமது இனத்தின் முதுபெரும் வரலாற்றை அடியொற்றியது.

புதைத்தல் என்ற சொல்லைப் பயன்படுத்தாது, விதைத்தல் என்ற சொல்லையும் உடலுக்கு வித்துடல் என்ற பதத்தையும், நாம் பயன்படுத்துகின்றோம். மாவீரர்கள் மீண்டும் எழுவார்கள், அவர்கள் சடப்பொருள் அல்லவென்ற அர்த்தத்தில் விதைத்தல் வித்துடல் என்பவை பயன்படுகின்றன.

11 மற்றும் 12 நூற்றாண்டுகளில் தோன்றிய தமிழ் வீரத்தையும், தேசியத்தையும் உணர்ந்தும் பரணி நூல்களில், களம் என்ற நெற்களத்தையும், போர்க்களத்தையும் குறிக்கும் சொல், பயன்பாட்டில் உள்ளது. ஜெயங்கொண்டார், பயிர் தொழிலையும், போர்த்தொழிலையும் கலிங்கத்துப் பரணியில் இணைத்துப் பாடியுள்ளார்.

விடுதலைப்போரின் ஆரம்பகாலகட்டத்தில், களப்பலியான புலிவீரர்களின் உடல்கள் புதைத்தல், எரித்தல் என்ற இரு வகையாகவும் சிறப்பிக்கப்பட்டன.
பெற்றாரின் மதநம்பிக்கை மற்றும் விருப்பத்திற்கு அமைவாகவும், போராளிகளின் வித்துடல்கள் எரிக்கப்பட்டும், புதைக்கப்பட்டும் வந்தன. பொது மயானங்களில் அப்போது போராளிகளின் வித்துடல்கள் தகனம் செய்யப்பட்டன. அல்லது நல்லடக்கம் செய்யப்பட்டன.

போராட்ட காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வித்துடல்களை புதைக்கவேண்டிய கட்டாய தேவை ஏற்பட்டது. இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்துடன் போரிட்ட காலத்தில், தேசியத் தலைவரும் அவருடைய புலிப்படையினரும் மணலாறுக் காடுகளில் நிலையெடுத்திருந்தனர்.
களப்பலியான வீரர்களை தகனம் செய்தால், இந்திய இராணுவத்தினர் புகை எழும் திசையையும், புலிகளின் மறைவிடங்களையும் கண்டறிந்து விடுவார்கள், என்ற காரணத்திற்காக ஆங்காங்கே காடுகள் தோறும் வித்துடல்கள் புதைக்கப்பட்டன.
இப்போது மணலாற்றில் புதைக்கப்பட்ட புலிவீரர்களின் புனித எச்சங்கள், ஒரே இடத்தில் அதாவது மணலாறு துயிலும் இல்லத்தில் உணர்வு பூர்வமாக மீண்டும் விதைக்கப்பட்டன. இத்துயிலும் இல்லத்திற்கு ஒரு தனிப்பட்ட வீரவரலாறு உண்டு என்பது வெளிப்படை.
போர் நடந்த இடங்களில் கைவிடப்பட்ட, அல்லது புதைக்கப்பட்ட வீரர்களின் எச்சங்களை, சாதகமான நிலை தோன்றிய பின்பு மீட்டெடுத்து, எடுத்துச்செல்லும் பாரம்பரியம் உலகில் உண்டு. துயிலும் இல்லம் என்ற சொற்றொடரை தமிழீழ விடுதலைப்புலிகள் உருவாக்கியுள்ளனர்.

புலிவீரர்களின் வித்துடல்கள் ஆண், பெண் வித்தியாசமின்றி இங்கு விதைக்கப்படுகின்றன. மாவீரர் பற்றிய புலிகளின் எண்ணக்கருவை இச்சொற்றொடர் உணர்த்துகிறது.

முதலாது துயிலும் இல்லம் கோப்பாயில் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் கோப்பாய் துயிலுமில்ல மண்ணில் போராளிகளின் வித்துடல்கள் புதைக்கப்பட்டதோடு எரிக்கப்பட்டும் வந்தன.

1991இல் வித்துடல்கள் எரிக்கப்டமாட்டாது, புதைக்கப்படும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது. இதுபற்றி 1991ஆம் ஆண்டின் ஐப்பசி – கார்த்திகை விடுதலைப்புலிகள் ஏடு, மாவீரர்களைத் தகனம் செய்வதற்கென்று அமைக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களில், இப்போது மாவீரர்கள் புதைக்கப்பட்டு, இங்கே கல்லறைகள் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இது என்றென்றும் தியாகத்தின் சின்னமாக, எமது மண்ணில் நிலைபெறும். என்று கூறுகிறது.

இம்முடிவானது போராளிகளுள் மிகப் பெரும்பாலானோரின் விருப்பத்திற்கிணங்கவே என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. வித்துடல்கள் புதைக்கப்படும் என்ற முடிவு எடுக்கப்பட்டபின், முதன்முதலான கப்டன் சோலையின் வித்துடல் கோப்பாய் துயிலும் இல்லத்தில், 14 ஜுலை 1991 ஆம் நாள் விதைக்கப்பட்டுள்ளது.

வித்துடல் கிடைக்காமல் போனால், நினைவுக்கற்கள் நாட்டும் வழமை, புலிகளாகிய எம்மிடம் உண்டு. அதே சமயத்தில் வித்துடல் ஒரு துயிலும் இல்லத்திலும், அவருக்கான நினைவுக்கல் இன்னுமோர் துயிலும் இல்லத்திலும், வைப்பது எமது இன்னுமொரு வழமையாகும்.
தென்தமிழீழ மாவீரர் பலரின் வித்துடல்கள் விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்திலும், முள்ளியவளை துயிலும் இல்லத்திலும், விதைக்கப்பட்டுள்ளன.
அவர்களுடைய நினைவுக்கற்கள் தென் தமிழீழ துயிலும் இல்லங்களில் நிறுவப்பட்டுள்ளன. மாவீரர்களான லெப். கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரது வித்துடல்கள் பாரிஸ் பொது மயானத்தில் விதைக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கான நினைவுக்கற்கள் விசுவமடு துயிலும் இல்லத்தில் நிறுவப்பட்டன.
எமது துயிலும் இல்லங்களின் எண்ணிக்கை 25. மாவீரரின் கல்லறை மற்றும் நினைவுக்கல் ஆகியவற்றின் மொத்த எண்ணிக்கை 20000. (2005 மாவீரர் நாள் விபரம். இதன் பின்னர் ஏற்பட்ட இறுதிப் போர்க்காலத்தில் மேலும் துயிலும் இல்லங்கள் தற்காலிகமாக அமைந்ததும் எண்ணிக்கைகள் அதிகரித்ததையும் கவனத்தில் கொள்ளவும்)

அடுத்து எமது நிகழ்ச்சிகளைப் பார்ப்போம். களப்பலியான மாவீரனின் வித்துடல் கிடைக்கப்பெற்றதும், அது ஓரிடத்திற்கு கொண்டு வரப்படுகிறது. பதனிடப்பட்ட அந்த உடலுக்கு சீருடை அணியப்படுகிறது.

அதே நேரத்தில் அந்த மாவீரனுடைய விபரங்கள் உறுதிசெய்யப்பட்டு, அவனுக்கான பதவி நிலை வழங்கப்படுகின்றது. பின்பு வித்துடல் பேழையில் வைக்கப்படுகிறது. மாவீரர் பெயரும் பதவிநிலையும் பேழையில் பொறிக்கப்படுகின்றன.

மாவட்ட அரசியல்துறையூடாக வித்துடல் அடங்கிய பேழை இராணுவ மரியாமையுடன், பெற்றார் அல்லது உறவினர் வீட்டுற்கு எடுத்துவரப்படுகிறது. வீட்டு வணக்கம் முடிந்தபின், வீரவணக்க நிகழ்விற்காக வித்துடல் ஒரு பொது மண்டபம் அல்லது மாவீரர் மண்டபத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
அதன்பின் வீரவணக்கக்கூட்டம் மண்டபத்தில் நடாத்தப்படுகிறது. முதற்கண் பொதுச்சுடர் ஏற்றப்படுகிறது. அடுத்ததாக ஈகைச்சுடர் பின்பு வித்துடலுக்கு மலர்மாலை அணிவிக்கப்படுகிறது. பெற்றார் மனைவி கணவன் பிள்ளைகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

நினைவுக்கல் நாட்டும் நிகழ்விற்கும், இதுபோன்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது. நினைவுக்கல் நிகழ்வில் மாவீரனின் படம் துயிலும் இல்லம் எடுத்துச் செல்லப்பட்டபின் உரித்தாளரிடம் கொடுக்கப்படுகிறது. வித்துடலுக்கு மலர்மாலை, மலர்வணக்கம் செலுத்தப்பட்டபின், அகவணக்கம் செலுத்தப்படுகிறது. நினைவுரைகள் அடுத்ததாக நிகழ்த்தப்படுகின்றன.

இறுதியாக இராணுவ மரியாதையுடன் வித்துடல் துயிலும் இல்லம் எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு மலர்வணக்கம் செய்யப்படுகிறது. அதன்பின் விசேட பீடத்தில் வைக்கப்பட்ட பேழையும், வித்துடலும் மேடைக்கு கொண்டு செல்லப்பட்டு அதில் வைக்கப்படுகிறது. அப்போது உறுதிமொழி வாசிக்கப்படுகிறது.

உறுதிமொழி வாசிக்கப்பட்ட பின், இராணுவ மரியாதை வேட்டு தீர்க்கப்படுகிறது. தாயகக்கனவுப் பாடல் ஒலித்தபின், அனைவரும் அகவணக்கம் செலுத்துகின்றனர்.

வித்துடல் புனித விதைகுழிக்கு இராணுவ மரியாதையுடன் எடுத்துச் செல்லப்ட்டு விதைக்கப்படுகிறது. அனைவரும் கைகளால் மண்ணெடுத்து, விதைகுழியில் போடுகின்றனர். நடுகல்லானால் மலர் வணக்கம் செய்கின்றனர்.

ஈழத்தமிழினத்தால், மாவீரர் நாளாக் கொண்டாடப்படும் நவம்பர் 27 தமிழீழ விடுதலைப்போரில் முதல் களச்சாவடைந்த, எமது இயக்க வேங்கை லெப். சங்கர் (சத்தியநாதன்) நினைவாக அமைகிறது.

1989 ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் நாட்தொட்டு, நாம் ஆண்டு தோறும் மாவீரர் நாளை கடைப்பிடித்து வருகின்றோம். முதலாவது மாவீரனின் வீரச்சாவு தான், அனைத்து மாவீரர்களின் நாளாக கொண்டாடப்படுவதால், அதற்கு மிகப்பெரிய முக்கியத்துவம் உண்டு. தமிழீழத்தின் மிகப் பெரிய நிகழ்வு என்ற சிறப்பு மாவீரர் நாளுக்கு உண்டு. 1990ஆம் ஆண்டு தொடக்கம் 1994ஆம் ஆண்டு வரை, நவம்பர் 21 தொட்டு 27 வரையிலான ஒருவாரம் மாவீரர் வாரமாக சிறப்பிக்கப்பட்டது.,1995ஆம் ஆண்டிலிருந்து, நவம்பர் 25, 26, 27 ஆம் நாட்கள் மாவீரர் எழுச்சி நாட்களாகக் கடைப்பிடிக்கப்படுகின்றன. 1994ஆம் ஆண்டு தொட்டு, மாவீரர் நாள் நள்ளிரவில் இருந்து, மாலை 6.05 மணிக்கு மாற்றப்பட்டது.

முதல் மாவீரன் லெப். சங்கர் வீரச்சாவடைந்த நேரமும் அதுவாகும். இதற்கு முன் தலைவரின் மாவீரர் நாள் உரை அமையும். மாவீரர் உரை முடிந்ததும் 6.05 மணிக்கு தமிழீழம் எங்கணும் அனைத்துத் தேவாலய மணிகளும் ஒரு நிமிடம் மணியெழுப்பும். அதன் பின் அகவணக்கம் செலுத்தப்படும். மாவீரர் துயிலும் இல்லங்கள் யாவற்றிலும் ஒவ்வொரு கல்லறைக்கும் நடுகல்லுக்கும் முன்னால் பெற்றார் உரித்தாளர்கள் போன்றோரால் சுடர் ஏற்றப்படும். துயிலும் இல்லத்தின் நடுமேடையிலும் பிரதான ஈகைச்சுடர் ஏற்றப்படும். மாவீரர் நாளின் போது அந்த நாளுக்கென்று பாடப்பட்ட மாவீரர் பாடல் துயிலும் இல்லங்களில் ஒலிக்கப்படும். முதலாவதாக இது 1991ஆம் ஆண்டு கோப்பாய் துயிலும் இல்லத்தில் ஒலித்தது. இதை எழுதியவர் கவிஞர் புதுவை இரத்தினதுரை.

மொழியாகி எங்கள் மூச்சாகி
முடிசூடும் தமிழ் மீது உறுதி
வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன்
வரலாறு மீதிலும் உறுதி
விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை
வீரர்கள் மீதிலும் உறுதி
இழிவாக வாழோம் தமிழீழப் போரில்
இனிமேலும் ஓயோம் உறுதி
தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய
சந்தனப் பேழைகளே இங்கு
கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா?
குழியினுள் வாழ்பவரே
உங்ளைப் பெற்றவர் உங்களின் தோழிகள்
உறவினர் வந்துள்ளோம் – அன்று
செங்களம் மீதிலே உங்களோடாடிய
தோழர்கள் வந்துள்ளோம்
எங்கே எங்கே ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்
வல்லமை தாருமொன்றெண்ணி
உம்வாசலில் வந்துமே வணங்குகின்றோம்
உங்கள் கல்லறை மீதிலெம் கைகளை வைத்தொரு
சத்தியம் செய்கின்றோம்
சாவரும் போதிலும் தணலிடை வேகிலும்
சந்ததி தூங்காது எங்கள்
தாயகம் வரும்வரை தாவிடும் புலிகளின்
தாகங்கள் தீராது
எங்கே எங்கே ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்
உயிர்விடும் வேளையில் உங்களின் வாயது
உரைத்தது தமிழீழம் – அதை
நிரைநிரையாகவே நின்றினி விரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம்
தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும்
தனியர(சு) என்றிடுவோம் எந்த
நிலைவரும் போதிலும் நிமிர்வோம் உங்கள்
நினைவுடன் வென்றிடுவோம்
எங்கே எங்கே ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்.

 

மாவீரர் துயிலும் இல்ல விபரம்.

  1. திருகோணமலை ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம்
  2. திருகோணமலை வெளியகுளம் மாவீரர் துயிலும்ல்லம்
  3. திருகோணமலை தியாகவனம் மாவீரர்துயிலுமில்லம்
  4. திருகோணமலை உப்பாறு மாவீரர் துயிலுமில்லம்
  5. மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலுமில்லம்
  6. மட்டக்களப்பு தாண்டியடி மாவீரர் துயிலுமில்லம்
  7. மட்டக்களப்பு வாகரை கண்டலடி மாவீரர் துயிலுமில்லம்
  8. அம்பாறை உடும்பன்குளம் மாவீரர் துயிலுமில்லம்
  9. முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லம்
  10. விசுவமடு மாவீரர் துயிலுமில்லம்
  11. துணுக்காய் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம்
  12. வன்னி விளாங்குளம் மாவீரர் துயிலுமில்லம்
  13. அளம்பில் மாவீரர் துயிலுமில்லம்
  14. மணலாறு புனிதபூமி மாவீரர் துயிலுமில்லம்
  15. மணலாறு உதயபீடம் மாவீரர் துயிலுமில்லம்
  16. களிக்காடு மாவீரர் துயிலுமில்லம்
  17. கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம்
  18. முழங்காவில் மாவீரர் துயிலுமில்லம்
  19. வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலுமில்லம்
  20. ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலுமில்லம்
  21. பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலுமில்லம்
  22. யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம்
  23. தென்மராட்சி கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம்
  24. வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லம்
  25. தீவகம் சாட்டி மாவீரர் துயிலுமில்லம்
  26. வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லம்
  27. மன்னார் முள்ளிக்குளம் மாவீரர் கல்லறைகள்

இறுதியுத்தத்தில்

1.சுதந்திரபுர மாவீரர் துயிலுமில்லம்
2.தர்மபுரம் மாவீரர் துயிலுமில்லம்
3.இரணைப்பாலை மாவீரர் துயிலுமில்லம்
4.பச்சைபுல்வெளி மாவீரர் துயிலுமில்லம்
5.முள்ளிவாய்க்கால் கிழக்கு மாவீரர் துயிலுமில்லம்
6.முள்ளிவாய்க்கால் மேற்கு மாவீரர் துயிலுமில்லம்


24 January 2014

இப்படித்தானே வாழமுடியும் - தமிழ்க்கவி

- இலங்கைப் போர்க் காட்சிகளின் சாட்சி!

ஈழ இறுதிப் போரின்போது, மக்களுக்கும் புலிகளுக்கும் வித்தியாசம் இல்லாமல் போயிற்று. அவர்களும் மக்களோடு மக்களாக நின்றார்கள். கிளிநொச்சியில் வீட்டுக்கு ஒருவரை கேட்டு வாங்கிய இயக்கம், இறுதிப் போரின்போது கட்டாய ஆள்சேர்ப்பில் ஈடுபட்டது. அதில் யாருக்கும் எந்த விதிவிலக்கும் இல்லை.

தலைவர், தன் பிள்ளைகளைக் களமுனையில் நிறுத்தினார். தளபதிகள், தங்கள் பிள்ளைகளைப் போருக்கு அனுப்பினார்கள். ஆனால், இலங்கை இராணுவம் சுற்றி வளைத்தபோது அந்தக் கட்டாய ஆள்சேர்ப்பும்கூட பயன்படவில்லை

ஈரமற்ற குரலில் உருக்கமாகப் பேசுகிறார் தமிழ்க் கவி.

இவரின் 'ஊழிக்காலம்’ நாவல், ஈழத்தில் நடந்த இறுதிப் போரின் துயரங்களை 'கண் முன் சாட்சி’யாகப் பதிவு செய்திருக்கிறது. இவர், விடுதலைப் புலிகளின் மூத்த பெண் போராளி. ஈழத்தில், இவரை 'தமிழ்க் கவி அக்கா’ என்று அழைத்தார்கள்.

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள சுகாதார நிலையத்தில் மருத்துவத் தாதியாகவும், புலிகளின் குரல் வானொலி மற்றும் தமிழ்த் தேசிய தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் பணி செய்தவர் தமிழ்க் கவி. பேட்டிக்கான வடிவமாக இல்லாமல் நினைவின்போக்கில் பேசினார்.

முள்ளிவாய்க்காலிலேயே முடிந்துபோக வேண்டிய வாழ்வு, நகர்ந்து வந்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. மாவிலாறில் தொடங்கி வட்டுவாகலில் முடிந்த பேரழிவுப் போரின் சாட்சி நான். எங்கள் பயணம், நாங்கள் கைவிட்ட நம்பிக்கைகள், மரணங்கள், கனவுகள், இழப்புகள்... என ஈழத் தமிழ் சமூகம் எப்படி இறுதிப் போரை எதிர்கொண்டது என்று நாவலில் எழுதியிருக்கிறேன். நாவலில் வரும் அந்தப் 'பார்வதி’ நான்தான்.

நான் பிறந்து வளர்ந்தது வவுனியாவில். கதை, கவிதை, நாடகங்கள் எழுதுவேன் என்பதால், புலிகள் என்னை நாடகம் போடச் சொல்வார்கள். நானும் கிராமங்களில் தமிழ்த் தேசியத்தை வலியுறுத்தி நாடகங்களை நடத்தினேன். என் கடைசி மகன் சிவகாந்தன், புலிகள் அமைப்பில் தன்னை விரும்பி இணைத்துக்கொண்டான். இயக்கம் அவனுக்கு 'சித்திரன்’ என்று பெயர் வைத்தது.

91-ம் ஆண்டு நடந்த ஆனையிறவுச் சமரில் அவன் வீரச்சாவை அடைந்தான். தம்பி, வீரச் சாவடைந்ததும் அவனது அண்ணனும் 'அமைப்புக்குச் செல்கிறேன்’ என்று சொன்னபோது, நான் தடுக்கவில்லை. அவன் புலிகள் இயக்கத்தில் பயிற்சி பெற்றுக்கொண்டிருக்கும் போதே, விமானத் தாக்குதலில் இறந்தான். என் இரு பிள்ளைகளின் உடல்களையும் நான் காணவில்லை.

குடும்பத்தைக் காப்பாற்றிக்கொள்ள வன்னிக்குச் சென்று நானே விரும்பி புலிகள் அமைப்பில் இணைந்து, ஒட்டுமொத்தமாக என் குடும்பத்தையே ஈழப் போராட்டத்துக்குக் கொடுத்தேன். காரணம், புலிகளின் கண்ணியம், நேர்மை, அர்ப்பணிப்பு. இரு மகன்களை இழந்த பின்னரும் அமைப்பின் மீதும், போராட்டத்தின் மீதும் நான் காட்டிய ஆர்வத்தைக் கண்ட தலைவர் பிரபாகரன், நேரடியாகவே என்னை அழைத்து ஊடகப் பணிகளை வழங்கி ஊக்குவித்தார்.

வாழ்க்கை எப்போதுமே எங்களுக்கு வசந்தமாக இருக்கவில்லை. ஒரு தீப்பெட்டி 10 ரூபாய், மண்ணெண்ணெய் 150 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை, பெட்ரோல் ஒரு லிட்டர் 1,500 ரூபாய். 10 தீப்பெட்டிகளின் மருந்தை எடுத்தால் ஒரு நாட்டு வெடிகுண்டைத் தயாரிக்க முடியும் என்பதால், ஏராளமான தீப்பெட்டிகள் கடத்தலில் வரும். மற்றபடி போர்க்காலமாக இருந்தாலும் சமாதானக் காலமாக இருந்தாலும், மின்சாரம், மருத்துவப் பொருள்கள் என எதுவுமே மக்களுக்கு இருந்தது இல்லை. அவர்களுக்குத் தெரிந்தது எல்லாம் விறகுக் கட்டைகளும், 'டிரெஞ்ச்’ எனப்படும் பதுங்குகுழிகளும்தான். இப்படித்தான் 2008-ம் ஆண்டு வரை வாழ்க்கை ஓடியது.

ஆனால், அப்போதெல்லாம் 'நாங்கள் விழ மாட்டோம்’ என்ற நம்பிக்கை இருந்தது. இலங்கை இராணுவம் பல வருடம் போராடிப் பிடித்த இடங்களைக் கூட, எங்கள் பொடியள் சில நாள் சண்டையில் மீட்டிருக்கிறோம் எனும்போது அந்த நம்பிக்கை இயல்புதானே! மீண்டும் இந்த நகரத்துக்குத் திரும்புவோம் என்ற நம்பிக்கையில்தான், தங்கள் வீடுகளின் கதவு ஜன்னல்களைக்கூட மக்கள் கழற்றிக்கொண்டு போனார்கள். ஆனால், 2008-க்குப் பிறகு நிலைமை தலைகீழ்!

மாவிலாறில் தொடங்கிய போர், சுமார் ஒரு வருடத்துக்கு மேலாக நடந்து முள்ளிவாய்க்காலில் முடியும் வரை எங்குமே புலிகளை இராணுவமும் பார்க்கவில்லை, இராணுவத்தைப் புலிகளும் பார்க்கவில்லை. அந்தப் போர் முறையே புதிதாக இருந்தது. நான்கைந்து மைல்களுக்கு அப்பால் இருந்து எறிகணை களை வீசி நிர்மூலமாக்கித் துடைத்து அழித்துவிட்டுத் தான் இராணுவம் வரும்.

கிளிநொச்சி இராணுவத்திடம் விழுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே, மக்கள் கிளிநொச்சியைக் காலி செய்துவிட்டு வட்டக்கச்சி, தருமபுரம் விசுவமடு நோக்கி நகர்ந்து விட்டார்கள். மக்கள் இல்லாத கிளிநொச்சியை இராணுவம் கைப்பற்றியது. பல திசைகளில் இருந்தும் வந்த மக்கள் அக்கராயன் சந்தியில் கூடியபோது சுமார் மூன்று லட்சம் மக்கள் மிகச் செறிவாக இருந்தனர்.

தேவிபுரத்தில் இருந்தபோது வீசப்படுகிற ஒவ்வொரு ஷெல்லும் பழுதில்லாமல் யாரோ ஒருவரைப் பதம் பார்த்தது. மக்கள் நம்பிக்கையோடு கொண்டுவந்த வீட்டுக் கதவுகளையும் ஜன்னல்களையும் முதலில் கைவிட்டார்கள். அது, திரும்பி வருவோம் என்ற நம்பிக்கையையும், கனவையும், ஆசைகளையும் கைவிடுவதாக இருந்தது.

பதுங்குகுழி பங்கர்களை, மூன்று அடிக்கு மேல் ஆழமாகத் தோண்ட முடியாது. கீழே தண்ணீர் வரும். தோண்டிய பங்கருக்குள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது, என் எதிர் பங்கருக்குள் அமர்ந்து பிள்ளைக்குப் பால் கொடுத்தபடியே பேசிக்கொண்டிருந்த ஓர் இளம் தாய் அப்படியே சாய்ந்தாள். இடுப்புக்குக் கீழே அவளுக்கு எதுவுமே இல்லை.

முலைக்காம்பில் வாய் வைத்தபடியே சிதறி விழுந்தது குழந்தை. பொக்கணை எனும் குறுகலான இடத்தில் நிலைமை இன்னும் மோசம். வாழ்ந்த இடம் மயானமாக மாறியது என்று சொல்வதா? அல்லது மயானத்தில் வாழ்ந்தோம் என்று சொல்வதா? அங்கேயே பல நாட்களைக் கழித்தோம்!'' - சின்ன இடைவெளி கொடுத்துத் தொடர்கிறார் தமிழ்க் கவி.

கரையான் முள்ளிவாய்க்காலில் யுத்த முனையில் பொட்டம்மானின் மகன் கயல்கண்ணன் இருந்தார். ஒரு பங்கருக்குள் இருந்தபோது ஷெல் தாக்குதலில் அப்படியே இறந்துபோனார். இறந்துபோன பிணங்களைக்கூட யாரும் எடுத்து அடக்கம் செய்யவில்லை. மகளின் பிணத்தை தாய் கடந்து செல்கிறாள். தாயின் பிணத்தை மகள் கடந்து செல்கிறாள்.

பொட்டம்மான் மகன் அங்கு இறந்த பிறகு அவரின் குடும்பத்தை நான் காணவில்லை. ஆனால், தலைவர் பிரபாகரன், தளபதி சூசை போன்றோர் எங்கும் தப்பிச் செல்ல முயலவில்லை. அவர்கள் இறுதி வரை மக்களோடு மக்களாகவே இருந்தனர்.

ஒருநாள் பிரபாகரன் முக்கியமான தளபதிகளை அழைத்து, 'நம்பிக்கையோடு இருப்போம். சர்வதேசமும் சேர்ந்து நம்மை நசுக்குகிறது. நீங்கள் நம்பிக்கையோடு இருங்கள். மக்களுக்கு நம்பிக்கையை விதையுங்கள். அவநம்பிக்கை ஏற்படும் வகையில், மக்களிடம் எதுவும் சொல்ல வேண்டாம்’ என்று கேட்டுக்கொண்டார்!

இறுதிக் கணம் வரை புலிகளிடம் மிகப் பெரிய ஆள் பலம் இருந்தது. ஆனால், போராட ஆயுதங்கள் இல்லை. கடற்புலிகள் பலம் இழந்தார்கள். புலிகளின் மோட்டார் படையணி முற்றிலும் அழிந்து போனது. குவித்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் இராணுவத்தின் வான்வழிப் போருக்கு முன் எடுபடாமல் போயின. அந்த ஆயுதக்கிடங்குகளை வெடி வைத்துத் தகர்த்து, அதனுள் இருந்து உயிரை மாய்த்துக்கொண்ட போராளிக் குடும்பங்கள் உண்டு.

ஆயுதங்களை மௌனமாக்க வேண்டிய அவசியமே புலிகளுக்கு இல்லை. அவை, பல நாட்களுக்கு முன்பே மௌனமாகிவிட்டன. அவர்களுக்கு வந்து சேரவேண்டிய ஆயுதங்களும் வரவில்லை. ஒருகட்டத்தில் தன் வலுவை இழந்த புலிகள், மக்களை அவர்களின் விருப்பங்களுக்கே விட்டனர். மக்களுக்கு என்ன விருப்பம் இருக்க முடியும்? சரணடையலாம்... இல்லாவிட்டால், மெதுவாக நடந்து போகலாம். எங்கு போவது வீட்டுக்கா? என்ன செய்வது... தலைகுனிந்தபடியே கூட்டம் கூட்டமாக நடந்தோம்.

நான் ஓமந்தை இராணுவச் சாவடியில் பிடிபட்டேன். என்னுடன் ஏராளமான மக்களும் இருந்தார்கள். முதலில் ஒரு முகாமுக்குக் கொண்டு சென்றார்கள். 22 நாட்களுக்குப் பிறகு இன்னொரு முகாமுக்குக் கொண்டு சென்றார்கள். அங்கிருந்து பலரும் பிரிக்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார்கள். பின்னர் அவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை.

நானும் பல பெண் போராளிகளும் விடுவிக்கப்பட்டோம். எங்களை தமிழ்ச் சமூகம் கண்டுகொள்ளவில்லை. புனர்வாழ்வு என்று சொன்ன அரசும் கண்டு கொள்ளவில்லை. எங்களைக்கொண்டே எங்கள் மக்களுக்கு எதிரானப் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.

இதுதான் நிலை. இப்போது நாங்கள் மீனுக்குத் தலையையும் பாம்புக்கு வாலையும் காட்டி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இப்படித்தானே வாழ முடியும்?

www.eelavenkai.blogspot.com

23 September 2009

இறுதிப் போரை நேரில் கண்ட சிவரூபன்

இறுதி போரை நேரில் கண்ட சிவரூபன்: மே-17 வரை நந்திக்கடலருகே நின்ற இவர், இலங்கை இராணுவத்தினரின் இன அழிப்பு கொடூரத்தை விபரிக்கிறார்

இன அழித்தல் நடந்த இறுதி நாட்களின் கொடூரத்தை நான் இங்கு எழுதுவதுகூட உங்களின் கழிவிரக்கம் கேட்டல்ல. என்றேனும் ஒருநாள் எமது மக்களுக்கான உரிமைகளை நீங்கள் பெற்றுத் தருவீர்களென்ற நம்பிக்கையில்தான் நான் எழுதுகிறேன். இவ்வாறு முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிக்கட்ட போரில் நந்திக்கடல் அருகில் இடம்பெற்ற இலங்கை இராணுவத்தின் தமிழ் இன அழிப்பை நேரில் கண்ட சாட்சியாக இங்கு விபரிக்கின்றார்.

இதோ சிவரூபன் பேசுகிறார்:

”ஐ.நா.சபையே, வல்லரசுகளே, உலகின் தலைவர்களே, ஊடகத்துறையினரே, எமது போராட்டத்தின் எதிர்கால நம்பிக்கையாகவும் உயிராகவும் இருக்கிற தமிழ்நாட்டு உறவுகளே!

நான் எழுத்தாளனோ, சிந்தனையாளனோ அல்ல. போராட்ட இயக்கமும் வாழ்வும் கற்றுத் தந்தவற்றைத் தவிர வேறெங்கும்போய் பெரிய படிப்பு படித்தவனுமல்ல. கண்ணெதிரே கண்ட கொடூரமான தமிழ் இன அழித்தலின் சில காட்சிகளை எழுத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன். எம் இன மக்களின் கொடூர அழிவைக் கண்டும் மௌனமாயிருந்த சர்வதேச சமூகத்தின் மீதான அவநம்பிக்கையும் நான் எழுதுவதற்கு முக்கிய காரணம்.

பசியின் வலியும், பிழிந்த தாகமும், பிரிவின் தவிப்பும், வெடிகுண்டுகளின் வெக்கையும், படு கொலைகளின் கொடூரமும், சகலமும் முடிந்துபோகிற தருணத்தின் திகிலுமாய் நாங்கள் வெள்ளாம் முள்ளிவாய்க்கால் பரப்பில் நின்றிருந்த அக்கடைசி நாட்களில் இரண்டு நம்பிக்கைகளை கடைசிவரை கொண்டிருந்தோம். “தாய் தமிழ்நாட்டு உறவுகள் எம்மை கைவிட மாட்டார்கள், அமெரிக்கா எப்படி யாவது எமது உதவிக்கு வரும்’ அந்த நாட்களின் வலியை எம்மால் வார்த்தைகளில் வருணிக்க முடியாது. அங்கு நின்று அனுபவிக்காதவர்களால் அதனை புரிந்துகொள்ளவும் முடியாது.

இதனைக்கூட நான் ஒரே ஒரு மன்றாட்டத்துடன் தான் எழுதுகிறேன். சர்வதேசமே! உயிரான தமிழ்நாட்டு உறவுகளே! இறக்கைகள் வெட்டப்பட்டு, கம்பிவேலிகளுக் குள் அடைக்கப்பட்டு, பாலைவனத்தில் வெந்து துடிக்கும் மண்புழுக்கள்போல், தமிழர்களாய் பிறந்ததைத் தவிர வேறெந்த குற்றமோ பாவமோ செய்யாத, உடல் சோர்ந்து, உளம் நலிந்து, உணர்வு செத்து, நா வறண்டு, இதய நாடிகள் ஒடுங்கி, வார்த்தைகள் முடிந்துபோய் வாடிக் கொண்டிருக்கும் எம் உறவுகளை எப்படியாவது காப்பாற் றுங்கள். சுதந்திர வேட்கைக்கெல்லாம் அப்பால் இம்மக்களுக்காய் இன்று நாங்கள் வேண்டுவது பெரிதாக எதுவுமில்லை. உணவு, குடிநீர், அச்சமின்றிக் கண்ணுறங்க தமது குடிசை, மணியோசை கேட்க எமது சிறு கோயில்கள். இப்போதைக்கு இவ்வளவும் போதும்.

இன அழித்தல் நடந்த இறுதி நாட்களின் கொடூ ரத்தை நான் இங்கு எழுதுவதுகூட உங்களின் கழிவிரக் கம் கேட்டல்ல. என்றேனும் ஒருநாள் எமது மக்களுக்கான உரிமைகளை நீங்கள் பெற்றுத் தருவீர்களென்ற நம்பிக்கையில்தான் நான் எழுதுகிறேன்.

அன்று வைகாசி 16. நள்ளிரவு கடந்திருந்தது. வழமையை விட இருள் கனத்திருந்தது போன்ற உணர்வு. ஏதோ நடக்கப்போகிற தென்ற திகில் எங்கும் சூழ்ந்திருந் தது. அதிகாலை 3 மணி இருக்க லாம். தொடங்கிற்று ஊழித்தாண்டவம். முள்ளிவாய்க் காலில் இருந்து முல்லைவட்டுவாகல் நோக்கி முன்னூறு மீட்டர் நீளத்திலும் வட ஆழ்கடலில் இருந்து நந்திக்கடல் திசையாக ஐநூறு மீட்டர் அகலத்திலுள்ளுமாய் ராணுவ வேலிக்குள் அடைக்கப்பட்டிருந்த மூன்று லட்சத்திற்கும் மேலான மக்களைச் சுற்றி ராஜபக்சேவின் பிணம்தின்னிப் பேய்கள் பேரவலத்தின் இறுதிப் போரை தொடங்கின.

வைகாசி-17 அதிகாலை. கோடி சிங்கங்கள் சேர்ந்து கர்ஜித்தால் எழும் ஓங்கார ஓசையுடன் ராட்சஸ கொடுங்கோலன் ராஜபக்சேவின் ஏவலில், தமிழ்ப் பிணம் தின்னும் கழுகு பொன்சேகா வழிநடத்த, “தமிழரை அழித்து தீர்த்த பின்னரே அடுத்த வேலை’ என நின்ற கோத்தபய்யா பின்நிற்க, மூன்றாம் உலக யுத்தம்போல் மூன்று லட்சம் மக்கள் மீதான தாக்குதல் தொடங்கியது. புயலடித்தால் தாவ முடியாமல் தவிக்கும் காட்டு மந்திகள் போல் எம்மக்கள் அங்குமிங்கும் ஓடினார்கள். சிங்களக் கொலைவெறிப் படைகளுக்கு பிரபாகரனின் படைகள் தக்க பதில் தந்திருக்க முடியும். ஆனால் முடியாது போயிற்று. ஏன் தெரியுமா…?

“”இனப்படுகொலையை அரங்கேற்ற இந்தியா ராணுவ உதவிகள், இந்திரா ரடார், செயற்கைக்கோள் செய்மதி உதவியெல்லாம் செய்து கொடுத்தது. சீனா ராக்கெட்டுகளும், ரசாயன ஆயுதங்களும் அள்ளிக் கொடுத்தது. ரஷ்யா டாங்குகள் மட்டுமல்ல பீரங்கிகளுடன் கவச வாகனங்களும் கொடுத்து, தானே நேரில் வந்து கள ஆலோசனைகள் தரவும் தயாராய் இருந்ததாம். பக்கதுணையாய் ஏவுகணைகளும் பலகோடி பெறுமதியுடைய ஆயுதங்களும் தந்தது பாகிஸ்தான். உலகின் அத்தனை பெரிய நாடுகளின் ராணுவ வளங்களும் சுற்றி நிற்க தமிழருக்கென தலைவன் உருவாக்கிய படைகள் தனித்து நின்று எந்தளவுக்குத்தான் தாக்குப் பிடிக்க முடியும்?

இப்படித்தான் மே-17 இறுதி யுத்தம் நடந்தது. நடப்பது கனவா, கற்பனையா என்று புரியாமல் நின்றோம். நாற்திசையிலிருந்தும் எறிகணைகள். எங்கெங்கிருந்தோ ரசாயன எறிகுண்டுகள். இடைவெளியில்லா துப்பாக்கி வேட்டுகள். சற்றே நிமிடம் ஷெல் மழை ஓய்ந்ததும் பதுங்கிப் பதுங்கி பங்கரில் இருந்து வெளியே வந்து பார்த்தேன். அவலத்தின் பெருங்கொடுமை கண்ணெதிரில் முள்ளிவாய்க்கால் பரப்பெங்கும் விரிந்து கிடந்தது.

பதுங்கு குழிக்குள் ஓடி ஒளியுமுன் நான் பார்த் திருந்த தமிழ் உறவுகள் சதைத் துண்டுகளாகிக் கிடந்தன. ஆண், பெண், பெரியோர், குழந்தைகள் வேறுபாடு எதுவும் தெரிய வில்லை. தலை வேறு, கால் வேறு, உடல் வேறாக பிணக் காடாய் கிடந்தது. சற்று தூரத்தில் தலைவிரிகோல மாய் தாய் ஒருவர் தலையற்ற உடல் ஒன்றை மடியில் கிடத்தி அழுது கதறிக்கொண்டிருந்தார். “”கடவுளே… ஏன் எங்களுக்கு இந்த அவலம்? என்ட ராசாவின்டெ முகத்தைக் கூட பார்க்க முடியலியே. பாவி ராஜபக்சவே… வா… என்னையும் கொன்றுபோடு” என்று அழுது புலம்பிக்கொண்டிருந்தாள். திடீரென எங்கிருந்தோ வந்த துப்பாக்கி ரவையொன்று அவளின் தலையை சிதைத்துச் சென்றது. குரலின்றி தரை சாய்ந்தாள் அந்தத் தாய். முகம் கவிழ்ந்து ஈழ மண்ணை முத்தமிட்டபடியே பிணமானாள்.

பக்கத்து பங்கருக்குள்ளிருந்து தம்பி… என்று சன்னமாய் குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். மார்பில், வயிற்றில், காலில் குண்டு காயங்களோடு ரத்தம் வழிந்த நிலையில் முதியவர் ஒருவர் “ஆரேனும் என்னெ காப்பாற் றுங்களேன்…’ என்று இயலாமை யின் வலியோடு குரல் கொடுத் தார். அருகில் நான் செல்லுமுன் அவரும் விழிகள் மூட தரையில் விழுந்தார். கண்களுக்கு எட்டிய தூரம்வரை எங்கு நோக்கிலும் பிணங்கள்… மனிதச் சதையின் சிதறல்கள்.

வேதனையின் கனம் என்னை அழுத்தியது. என்னையும் அறியாமல் ஏதேதோ புலம்பினேன். ஐயா ஒபாமா அவர்களே… உங்களைத்தானே ஐயா நாங்கள் கடைசியாக நம்பியிருந்தோம். ஒடுக்கப்பட்ட இனத்தில் இருந்து எழுந்து வந்தவர் நீங்கள். எனவே எம் இனத்தைக் காப்பாற்ற கட்டாயம் இறுதியில் கை கொடுப்பீர்கள் என்று நம்பி வான்பரப்பில் வந்து போன அத்தனை விமானங்களையும் அண்ணாந்து உயிர் தவிப்புடன் பார்த்திருந்தோமே… கைவிட்டு விட்டீர்களே ஐயா… என்றெல்லாம் புலம்பினேன்.

எழுந்து நடக்க எத்தனித்தேன். மீண்டும் ரவைகள் கூவிப் பாய்ந்து வந்தன. வேகமாக நடக்க முடியவில்லை. சிதறிய உடல் களின் மீது என் கால்கள் பட்டுவிடக்கூடாதென்ற பக்தி யுடன் நகர்ந்தேன். அந்தளவுக்கு எங்கும் பிணக்குவியலாய் கிடந்தன. ஒவ்வொரு பிணமாகக் கடந்து எனது மனைவி, பிள்ளை கள் இருந்த பதுங்கு குழிநோக்கி நகர்ந்தேன். இன்னொருதாயின் துயரம் என்னை முன்செல்ல விடாது தடுத்தது.

அவருக்கு 30 வயதிருக்கும். சுமார் ஆறு மாத கைக்குழந்தை. ஷெல் அடிபட்டு இறந்திருந்தது. பிஞ்சுக் குழந்தையை மார்போடு இறுக அணைத்துக்கொண்டு “”பாவி ராஜபக்சே… புருஷனையும் தின்டான், என்ட பச்ச புள்ளையெயும் தின்டான்… பசி தீர்ந்ததாடா பாவி…” என்று புலம்பியபடி இறந்த குழந்தையை முத்தமிட்டு முத்தமிட்டுக் கண்ணீரால் நனைத்தாள். அவளுக்கு ஆறுதல் சொல்ல அங்கு எவரும் இருக்கவில்லை. அவளது கூக்குரலையும் எவரும் கேட்கவில்லை. குழந்தையை முத்தமிட்டுக் கொண்டே முன் போனவள் திடீரென பின்னோக்கிப் பார்த்தாள். அவளது முகம் சந்திரமுகிபோல் மாறியது. வெடித்து சிரித்தவண்ணம் தன் பிள்ளையோடு ஏதேதோ பேசத்தொடங்கினாள். நிமிடங்களுக்கு முன் தாயாக இருந்தவள் மனநோயாளியாகி நின்றாள்.

“”என் மனைவி, பிள்ளை, தாய்-தகப்பன் நினைவுகள் நெஞ்சைப் பிழிந்தது. அவர்கள் மறைந்திருந்த பதுங்குக்குழி பார்த்து ஓடினேன். அவ்விட மெல்லாம் நச்சுவாயுக் குண்டுகள் விழுந்து நூற்றுக் கணக்கான தமிழர் உடல்கள் சிதறுண்டும் எரிசாம்பலாகவும் கிடந்தன. முட்டுக்கால் தரையில் குற்றி விழுந்தேன். “கடவுளே’ என்று கதறினேன். ஷெல் மழை கொட்டிக்கொண்டேயிருந்தது. அதனூடேயும் ஒவ்வொரு தலையாக, உடலாகப் புரட்டினேன். எவரையும் அடையாளம் தெரியவில்லை. என் உறவுகளும் எரியுண்டு முடிந்துவிட்டதாய் மனதில் முடிவு செய்தவனாய் இனி என் மார்பிலும் எறிகணை விழட்டுமென நிமிர்ந்து திரும்பி நடந்தேன். அப்போது பிணங்களுக்கு நடுவிலிருந்து ஒரு தாய் முனகலுடன் மெதுவாக எழுந்தார்.

“”தம்பி… உங்கட சொந்தங்கள் காலையில வட்டுவாகல் பக்கம் போயிட்டினும். நீங்க கெதியா போய் அவையள காப்பாற்றுங்கோ” என்றார் அந்தத்தாய். வட்டுவாகல் நோக்கி ஓடத்தொடங்கினேன். வட்டுவாகல்- முள்ளிவாய்க்கால் பிரதான வீதியில் வன்னி மக்கள் வைத்திருந்த வாகனங்கள் நீண்ட வரிசையில் பாதி எறிகணை வீச்சில் எரிந்தும், ஏனையவை அனாதைகள்போலும் நின்றிருந்தன. பதுங்குகுழி வெட்ட இடமில்லாத மக்கள் இந்த வாகனங்களுக்குக் கீழ் படுத்துக்கிடந்தார்கள்.

தேசியத் தலைவர் தன் செல்வங்களாய் வளர்த்த செஞ்சோலைப் பிஞ்சுகளும் அப்படிச் சில வாகனங்களுக்குக் கீழ்தான் கடைசி கட்டத்தில் அடைக்கலம் தேடியிருந்தன. நான் சுமார் 100 மீட்டர் தூரத்தில் நின்றபோது கூவிவந்த எறிகணையொன்று செஞ்சோலைப் பிஞ்சுகள் பிணம்தின்னிப் பருந்துகளுக்கு அஞ்சிய கோழிக்குஞ்சுகள்போல் பதுங்கிக் கிடந்த பகுதியில் விழுந்து வெடித்தது. என் கண்ணெதிரே ஐம்பதுக்கும் மேலான அப்பிஞ்சுகள் தலை, கால், கை, உடல் சிதறி கோரமாய் செத்தார்கள்.

கடற்கரையில்தான் பிணக்காடென்றால் பிரதான வீதியும் தமிழர் சடலங்களால் நிறைந்து நீண்டு கிடந்தது. சின்னஞ்சிறு பிஞ்சுகளின் சிதறிய உடல்களைக் காணத்தான் நெஞ்சு பொறுக்கவில்லை. இறுகி, உணர்வு செத்து மரத்திருந்த மனது வெடித்தது. ஓவென்று அழ வேண்டும் போலிருந்தது. என் கால்கள் சிதறிக் கிடந்த தமிழர் தசைகள் மேல் பட்டுவிடக்கூடாதே என்ற பக்தியோடு தவண்டு தவண்டு நகர்ந்தேன்.

அங்குமிங்கும் சிங்களக் காட்டேறிகள் ஏவிக் கொண்டிருந்த எறிகணைகள் கூவிக் கூவிப் பறந்து பாய்ந்து கொண்டிருக்க வீதியோர மரத்தடியொன்றின் கீழ் தாயொருத்தி பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருந்தாள். அவளது கணவன் சற்று முன்னர்தான் எறிகணை வீச்சில் இறந்திருக்க வேண்டும். இரத்த வெள்ளத்தில் கிடந்த தன் கணவனை இறுகப் பிடித்துக் கொண்டு அந்த இளம் தாய் பிரசவ வலியில் வீறிட்டுக் கதறிய அவலத்தின் கோலத்தை எப்படி நான் மறப்பேனய்யா?

மல்ட்டிபேரல் எறிகணைகளின் அதிர்வில் தாயின் வயிற்றிலிருந்து குழந்தை முல்லைத்தீவு மண்ணில் விழுந்தது. குழந்தையின் காலைப்பிடித்து இழுத்து அந்தத் தாய் தன் மார்போடு போர்த்தினாள். அவளுக்கு உதவ உறவுப் பெண்களோ வேறெவருமோ அங்கிருக்கவில்லை. பிறந்த பிள்ளையை அணைப்பதா, அருகில் இறந்து கிடக்கும் கணவனுக்காய் அழுவதா என்று தெரியாமல் இடது கையால் கணவனின் உடலையும் வலது கையால் இப்போது பெற்ற தன் செல்வத்தையும் அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டுக் கதறிய காட்சியை எப்படி நான் பதிவு செய்வேன்?

தன் ஆடைகளை ஒதுக்கி ஒழுங்கு செய்யும் பிரக்ஞை கூட இல்லாதவளாய் அந்தத்தாய் அழுது கொண்டிருந்தாள். உடல் சோர்ந்தவளாய் மண்தரையில் தலை சாய்ந்து படுத்தவரை மட்டும் தூரத்தில் நின்று பார்த்தேன். முதல் தாகம் தீர்க்க தாய்ப் பாலுக்காய் அக்குழந்தை வீறிட்டு அழுததையும் கண்டேன். ராஜபக்சேவும், கோத்தபய்யாவும் ரத்தமும் சதையும் சேரப் பிணம் தின்னும் கொடிய ராட்சதக் கழுகுகளாய் என் கண்முன் நின்றார்கள். நீங்கள் அழிவீர்களடா… சிங்களம் இதற்கெல்லாம் பதில் சொல்லித்தான் தீர வேண்டுமடா… என்றெல்லாம் மனது கொதித்தது.

கையறு நிலையின் கைதியாய் முன் நகர்ந்தேன். அந்தத் தாயும் பிள்ளையும் என்ன ஆனார்களோ என்று எண்ணியே பல இரவுகள் தூக்கமும் நிம்மதியும் இழந்து தவிக்கிறேன். இப்படித்தான் மே முதல் வாரம் முள்ளிவாய்க்கால் தற்காலிக வைத்தியசாலைக்குச் சென்றிருந்தேன். ஓலைக் குடிசைதான் அன்று எங்களின் அவசர மருத்துவ சேவைப் பிரிவு.

குடிசையின் தாழ்வாரத்தில் குண்டுவீச்சில் தாய், தகப்பன் இருவரையும் இழந்த சுமார் ஒரு வயதுக் குழந்தை கிடத்தப்பட்டிருந்தது. அதே குண்டுவீச்சில் தன் இரு கால்களையும் இந்தக் குழந்தை இழந்திருந்தது. கிட்டப் போய் அக்குழந்தையை கண்களில் நீர் மல்கப் பார்த்தேன். குளுக்கோஸ் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தது. குளுகோஸ் வயரை கையில் எடுத்து விளையாடிக் கொண்டே என்னைப் பார்த்து அக்குழந்தை சிரித்தது.

நடந்தவற்றின், நடந்து கொண்டிருப்பவற்றின் கொடூரங்களும், விபரீதங்களும் அந்தக் குழந்தைக்குப் புரிந்திருக்கவில்லை. அருகில் நின்று கொண்டிருந்த மருத்துவ தாதியிடம், “”தாய், தகப்பன்…” என்று ஆரம்பிக்கவே, “”எல்லாம் இப்போது நான்தான்” என்று கூறியபடியே என்னை நிமிர்ந்து நோக்கி குடிசைக்கு சற்று தூரத்தில் குவியலாய் கிடந்த தமிழர் சடலங்களைக் காட்டினார். “”இதுக்குள்ளதான் இந்தக் குழந்தையிண்ட தாயும் தகப்பனும்” என்றார்.

பெற்றோரை இழந்து, இரண்டு கால்களையும் இழந்து என்ன நடந்ததென்றே தெரியாது குளுகோஸ் ஒயரை பிடித்து விளையாடிப் புன்னகைத்த இந்தக் குழந்தையின் முகமும், சற்றுமுன் வீதியோரத்தில் பிறந்து தாயின் முதற் பாலுக்காய் வீறிட்டு அழுத அந்தப் பிஞ்சின் முகமும் என்னை விட்டு அகல மறுக்கின்றன. எனக்கு மரணம் வருகின்றவரை இந்த அவலத்தின் காட்சிகள் என்னை விட்டு நீங்குமென்றும் நான் நினைக்கவில்லை.

மனதில் வெறுப்பும், நெருப்பும் விரக்தியு மாய் -இப்படியா எங்கள் விடுதலைப் பயணம் முடிவுறவேண்டுமென்ற வேதனையுடன் தொடர்ந்து நடக்க முயன்றேன். அவலத்தின் அடுத்த காட்சி அங்கே அரங்கேறிக்கொண்டிருந்தது.

வீதியை விட்டு சற்று தொலை. எறிகணை விழுந்து வெடிக்கிறது. பிளிறிச் சிதறிய புழுதி அடங்கியபின் பார்க்கிறேன். மரத்தடியில் இருந்த ஒரு தமிழ்க் குடும்பம் கண்ணெதிரே கணப்பொழுதில் சிதறிக் கிடக்கிறது. எழுந்திருக்க முடியாத அளவுக்கு படுகாயமடைந்த தகப்பனின் கால்களும் கைகளும் விட்டுவிட்டுத் துடிப்பது மட்டும் தெரிகிறது. எறிகணை விழுந்தபோது அந்தத் தாய் தன் பிள்ளைக்குப் பாலூட்டிக் கொண்டிருந்திருக்கிறாள். குழந்தையை இறுக அணைத்தபடியே அத்தாய் சிதைந்துபோய் உயிர் பிரிந்து கிடக்கிறார். அவளது இடதுபுற மார்பில் ஷெல் குண்டு பாய்ந்து சிதைத்திருக்கிறது. இப்போதும் கொடூரத்தின் கொலைவெறி புரியாத அப்பிஞ்சுக் குழந்தை தாயின் வலதுபுற மார்பை பாலுக்குத் தேடுகிறது.

பக்கத்தில் ஓர் சிறுமி நான்கு வயது இருக்கலாம், முந்திய பிள்ளையாக இருக்கக் கூடும். அந்தப்பிள்ளை கையில் ஓர் தட்டுடன் “அம்மா பசிக்குது… அம்மா பசிக்குது…’ என்று அழுதுகொண்டிருந்தது. தகப்பனுக்கு அருகில் பையன். சுமார் ஆறு வயது இருக்கலாம். “”அப்பா… எல்லாரும் போகினும் வாங்க, போவோம் ஆமி வறான், எழும்புங்கோ அப்பா… தண்ணீர் விடாக்குது… கெதியா எழும்புங்கோ அப்பா…” என்று குளறிக்கொண்டிருந்தான்.

நின்று நிதானித்து அங்கு என்னதான் நடந்துகொண்டிருக்கிறதென்று சிந்திக்கிற நிலையிலோ, ஒருவருக்கொருவர் உதவும் நிலையிலோ ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லும் நிலையிலோ எவரும் இருக்கவில்லை. எங்கும் மரணம் வெறியாடிக்கொண்டிருந்தது. ஈவிரக்கம் ஏதுமின்றி இன அழித்தலின் இறுதி காட்சி அரங்கேறிக்கொண்டிருந்தது. மரணத்தின் நிலமாய் தமிழ் ஈழம் நின்றது. இறந்து கிடந்த தாயின் மார்பில் பால் முகர்ந்து தேடிய அப் பச்சிளங்குழந்தை எமது அவலநாளின் அழியா காட்சியாய் காலம் முழுதும் நிற்கும்.

தொடர்ந்து நகர்ந்தேன். தேசியத் தலைவர் அடிக்கடி சொல்வாரே… “”அவலத்தை தந்தவனுக்கே அதை திருப்பிக் கொடு” என்று… அப்படிச் சொன்னதோடு நிறுத்தாமல் சிங்களவனுக்கும் நாங்கள் இப்படி ஈவிரக்கமின்றிக் கொடுமை செய்திருந்தால் ராஜபக்சேவும் கோத்தபய்யாவும் இந்த வெறியாட்டம் ஆடியிருக்கமாட்டார்களே… என்றெல்லாம் மனது எண்ணியது.

முன்பொருமுறை சட்டக்கல்லூரி உரையொன்றில் தந்தை செல்வநாயகம் சொன்னாரே… “”தமிழ் மக்களுக்கு எதிர்காலத்தில் எவ்வித பாதுகாப்பும் இருக்காது -கடவுள்தான் நம்மைக் காப்பாற்ற வேண்டும்…” என்று, ஆம் கடவுளும் எம்மைக் கைவிட்ட நாளில் நா வறண்டு நடந்துகொண்டிருந்தோம். தமிழனாய் பிறந்ததையிட்டு என்னை நானே சபித்துக்கொண்டேன்.

உலகத்தின் சகலர் மீதும் கோபமாய் வந்தது. மீண்டும் முன்பு நான் குறிப்பிட்ட உணர்வு… : “”ஐயா, ஒபாமாவே… கடைசி நம்பிக்கையாய், நீங்கள் ஏதாவது செய்வீர்களெனக் காத்திருந்தோமே… வானில் வந்த ஒவ்வொரு விமானத்தையும் பார்த்திருந்தோமே… ஏமாற்றி விட்டீர்களே….” என்று மனம் புலம்பியது.

எங்கும் பிணக்காடாய் கிடந்த வட்டுவாகல்-முள்ளி வாய்க்கால் பிரதான வீதியில் தமிழர் உடலங்களில் என் கால்கள் பட்டுவிடக்கூடாதென்ற கவனத்தோடும், மனதின் பாரங்களோடும் நகர்ந்து கொண்டிருந்தேன். ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும் வீதியின் இருபுறமும் துப்பாக்கிகளை மக்களை நோக்கி நீட்டியவாறு சிங்களக் கைக்கூலிகள் நின்றிருந்தனர். கடைசியாக புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதியை விட்டு வெளியே வந்து விட்டோமென்பது புரிந்தது. சுதந்திர வாழ்க்கை முடிந்து போய்விட்ட உணர்வு உடல் முழுதும் பரவியது. களைத்துப் போயிருந்த மனது மேலும் களைத்தது.

வட்டுவாகல் பாலம் பக்கமாய் நடந்தேன். பாலத்தின் இருபுறமுமாய் விரிந்து கிடந்த நீரேரியை பார்த்தேன். தண்ணீர் பரப்பு தெரியவில்லை. எங்கு பார்க்கினும் தமிழரின் பிணங்கள் மிதந்து கொண்டிருந்தன. அனைத்து உடல்களுமே ஆடையின்றிக் கிடந்தன. அநேகம் பேர் எம் குலப் பெண்கள். கொடுமையை பதிவு செய்யக்கூட என் கண்களால் பார்க்க முடியவில்லை. எனினும் அந்த நீரில் மிதக்கும் பிணங்களூடே என் சொந்த உறவுகள் இருக்கக்கூடுமென்பதால் நின்று பார்த்தேன். பல உடல்களில் நகக்கீறல்களும், கடித்துக் குதறிய காயங்களும் தெரிந்தன.

ஆண்கள் பெரும்பாலோரது உடல்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில் கிடந்தன. சுடப்பட்டும், அடித்தும், வெட்டியும் கொல்லப்பட்டிருக்கிறார்களென்பது தெரிந்தது. கரையொதுங்கிய உடல்களில் பசித்த தெரு நாய்கள் பற்கள் பதித்த காட்சியை காணப் பொறுக்கவில்லை. பாலத்தைக் கடந்து அங்கிருந்து இராணுவ முகாம் வாயிலருகே நடந்தோம். “”புலி தனியா பிரிஞ்சு வாங்கோ… பொது மக்கள் தனியா பிரிஞ்சு போங்கோ…” என்று கொச்சைத் தமிழில் சிங்களவன் அறிவித்துக் கொண்டிருந்தான். அச்சத்தின் மின்னல் பிடரியில் பாய்ந்தது. அருகிலிருந்த மக்கள் விரக்தியோடு முணுமுணுத்தார்கள்.

“”இனி அவன் ஆட்சிதானே… இதுக்குப் பயந்துதானே புலியளோட ஓடி வந்தம்… பல நாட்கள் அணு அணுவாய் சாவதிலும் பார்க்க புலியளோட அங்க நின்டு கௌரவமா செத்திருக்கலாம்…” என்றெல்லாம் பேசிக் கொண்டே பிரிந்தார்கள். என் மனைவி, பிள்ளை உறவுகள் எப்படியேனும் உயிர் தப்பியிருப்பார்கள் என்ற நம்பிக்கையில் நானும் நடந்து கொண்டிருந்தேன்.

இரண்டு பக்க கம்பி வேலிக்கு நடுவே மூன்று லட்சம் மக்கள் ஊர்ந்தோம். கம்பி வேலிக்கு மறுபுறத்தில் இருந்து நாக்கு நனைக்க ஒரு முடறு தண்ணீர் கொடுத் தார்கள். ஐம்பதாயிரம் பேருக்கு எனச் சொல்லப்பட்ட கம்பிவேலி முகாமுக்குள் அத்தனை பேரையும் அடைத்தார்கள். சுற்றிலும் சுடும் நிலையில் இராணுவத்தினர். ஒரு சிலர் தமிழ் கதைத்தார்கள். அவர்களில் ஒருவனிடம் மெல்லச் சென்று கேட்டேன். “என் உறவுகளைக் காணவில்லை, தேடிப் பார்க்கலாமா?’ என்று. “”கம்பி வேலிக்குள் மட்டும் தேடிப் பாருங்கள். வெளியே போறவங்களை சுடச் சொல்லி உத்தரவு” என்றான் அவன். தொடர்ந்து பேசிய அவன், “”இவ்வளவு பேரும் எங்க இருந்தீங்கள்… ஐம்பதாயிரம் பேர் என்றுதானே நினைத்தோம்” என்று வியப்பாகக் கேட்டான். நான் சொன்னேன், “”ஐம்பதாயிரம் பேர் வரை செத்துவிட்டார்கள். நாங்கள் பங்கரில் இருந்து தப்பி வாறம்” என்றேன்.

“பங்கருக்குள் இத்தனை நாள் எப்படி இருந்தீர்கள்?’ என்று மேலும் வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தான். அவனோடு பேசிக்கொண்டிருந்தபோது வேறொரு இராணுவக் கூட்டத்தினர் பொதியுணவு கொண்டு வந்தார்கள்.

இருந்தது மூன்று லட்சம் மக்கள். அவர்கள் கொண்டு வந்ததோ சுமார் 3000 உணவுப் பொதிகள். எப்படி பங்கீடு செய்வதென்று தெரியாமல் நாய்களுக்கு எலும்புத் துண்டுகளை வீசுவது போல் கம்பிவேலிக்கு வெளியே நின்று கொண்டு மக்கள் கூட்டத்தினர் மீது கேவலச் சிரிப்புடன் வீசி எறிந்தார்கள். ஏதோ எறிபந்து விளையாடுவதுபோல் மேலும் மேலும் எள்ளி நகையாடிச் சிரித்துக்கொண்டே எறிந்தார்கள்.

தமிழரின் இயலாமை அவமானக் களத்தில் அவர்களின் அரை மணி நேர விளையாட்டு முடிந்தபோது, சில வயது போனவர்களும் எட்டுப் பத்து சிறுவர்களும் நெரிசலில் சிக்கி மூச்சடங்கிப் பிணங்களாய் கிடந்தார்கள். கைக்குழந்தையுடன் உணவுப் பொட்டலம் கிடைக்காதா எனச்சென்ற தாய் மூச்சுத் திணறி இறந்து போன குழந்தையுடன் திரும்பியதும், “பசிக்குது, ஒரு பார்சல் குடுங்கோ’ என்று கூவிக் கேட்டுக்கொண்டே நெரிசலில் குரலடங்கிப் போன சிறுவர்களும், தண்ணீராவது தாருங்கோ எனக்கேட்டு மிதியுண்டு மடிந்த முதியவரும் அன்றைய நாள் எமது வரலாறு சந்தித்த பேரவலத்தின் பதிவு செய்யப்படாத சாட்சிகள்.

வாகனத்தில் ஏற்றுவதற்காக கம்பி வேலிக்குள்ளிருந்து வரிசை பிடிக்கச் சொன்னார்கள். அதற்குள்ளாகவே காட்டிக் கொடுக்கும் சிலரை சிங்களம் விலைக்கு வாங்கியிருந்தது. அந்தக் கேவலப் பிறவிகள் தங்களுக்கு தனிப்பட்ட முறையில் பிடிக்காத, பக்கத்து வீட்டுக்காரர்களையெல்லாம் கூட “புலிகள்’ என்று கை நீட்டிக் காட்ட இராணுவத்தினர் தனியாக அவர்களைப் பிடித்துச் சென்றனர். தமிழன் வீழ்ந்ததும் வீழ்வதும் காட்டிக் கொடுக்கும் எட்டப்பர்களாலென்பது மீண்டும் ஒருமுறை வேதனையோடு அங்கே அரங்கேறிக் கொண்டிருந்தது.

எம் தேசியத் தலைவர் அடிக்கடி இரண்டு விஷயங்களைச் சொல்வார். ஒன்று, “”நேர்மையான வர்கள்போல நடிப்பவர்களைவிட நேர்மையானவர் களாக இருப்பவர்களைத்தான் எனக்குப் பிடிக்கும்” என்பது. இன்னொன்று “”எதிரிகளைவிட துரோகி களே ஆபத்தானவர்கள்” என்றும் அவ்வப்போது நினைவுபடுத்துவார். நடைமுறை ஒழுங்குகளில் தமிழ் சமூகம் மீது தலைவர் காட்டிய இறுக்கத்திற்கு காரணமும் இந்த இனத்தின் மோசமான துரோகக் குணங்களை அவர் உள்ளார அறிந்திருந்த காரணத்தினால்தான்.

அந்த இடத்தில், அந்த கணத்தில் இப்போது சிங்கள ஆமிக்காரனைவிட அடை யாளம் காட்டிக் கொடுத்துக் கொண்டிருந்த எம் இனத்துக் கூலிகள்தான் அதிக அச்சத்தை தந்தார்கள்.
உடல் சோதனைக்கு ஒவ்வொருவரும் உள்ளாக்கப்பட்டோம். காட்டிக்கொடுக்கும் துரோகக் கூலிகள் நின்ற இடத்தைக் கடந்து உடல் சோதனைக்குப் போனேன். கட்டிய கோவணத்தையும் அவிழ்த்துப்போட்டு பரிசோதித்தார்கள். எனக்குள் கொலைவெறி ஆவேசம். அடக்கிக்கொண்டேன்.

என்றேனும் எம் தேசியத்தலைவன் மீண்டும் அழைப்பு விடுத்தால், அல்லது தகுதியானதோர் விடுதலை தலைமை எமக்குத் தெரிகின்ற நாளில் அவன் சொல்லும் திசையில் இலக்கு நோக்கி நகர இந்த உயிர் இப்போதைக்கு இருக்கவேண்டுமென்ற வைராக்கியத்தில், வந்த ஆவேசத்தையெல்லாம் அடக்கிக்கொண்டேன். இங்கே எழுத முடியாத ஒரு கெட்ட வார்த் தையை மட்டும் பம்பலாய் வாயில் முணுமுணுத் தேன். சோதனையெல்லாம் முடிந்து ஒருவழியாய் பேருந்தில் ஏறியபோது மே-18 முற்பகல் ஆகியிருந்தது. முல்லைத்தீவிலிருந்து வவுனியா செட்டிக்குளம் வதை முகாம் நோக்கி பேருந்து புறப்பட்டது.

எங்கு கொண்டுபோகிறார்களோ, என்னவெல்லாம் நடக்கப் போகிறதோவென்ற பதற்றம். பேருந்தின் பின்கதவு அடைக்கப்பட்டு முன் கதவில் இரண்டு ராணுவத் தினர் சுடும் நிலை யில் கொடூர முக பாவத்தோடு எம்மை அவதானித்துக்கொண்டிருந்தனர். நூற்றுக்கணக்கான பேருந்துகள் ஓமந்தை சோதனைச் சாவடிக்குமுன் நின்று நகர்ந்தன. 2006 வரை இந்த சோதனைச் சாவடி புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. புலிகள் தமது குடிவரவு (Immigration) மற்றும் சுங்கம் (Customs)பிரிவினரை உருவாக்கி முதலில் அமர்த்திய இடம் இது. இன்றோ எல்லாம் சூன்யமாகிப்போன உணர்வு உயிரைப் பிழிந்தது.

இன அழித்தலின் அடுத்த கட்டம் ஓமந்தையில் ஆரம்பித்தது. “”புலியாக இருந்தவர்கள் அனைவரும் தனியாகப் பதியவும்”, “”ஒருநாள் பயிற்சி எடுத் திருந்தாலும் தனியாகப் பதியவேண் டும்”, “”எல்லைப்படை பயிற்சி எடுத்தவர் களும் பதியவேண்டும்”, “”எங்களுக்கு எல்லாம் தெரியும், பொய் சொல்லி பதிவு செய்தால் தப்பிக்க முடியாது -மரணம்தான்” என்றெல்லாம் அறிவித்துக்கொண்டிருந்தார்கள்.

பதிவு செய்துவிட்டவர்களெல்லாம் ஒருபுறமாய் கூடி கதைத்துக்கொண்டிருந்தபோதுதான் அங்கிருந்த தொலைக்காட்சிப் பெட்டியில் எம் தலைவன் வீரமரணம் செய்துவிட்டான் என்ற செய்தியைக் காட்டினார்கள். என் சுவாசம் நின்றது. இதய நாடிகள் ஒடுங்கின. என்னையு மறியாது கண்களில் நீர். பின்னோக்கி நினைவுகள் ஓடின.

1989-ம் ஆண்டு என்று நினைக்கிறேன். இந்தியப்படைகள் எம் தலைவனை சுற்றி வளைத்து “சதுரங்கம் 1,2,3 (Operation Checkmate) என பெயரிட்டு நின்றபோது மணலாற்றுக் காட்டில் நிலை தடுமாறாது, அருகில் போராளிகள் கொள்கலன்களில் உயர்ரக பெட்ரோல் சுமந்துகொண்டே சண்டையிட்ட அந்த நாட்கள் நினைவுக்கு வந்தன. “உயிரற்ற என் உடலோ, சாம்பலோகூட அந்நியப் படைகளிடம் கிடைக்கக்கூடாது’ என்று உடன்நின்ற போராளிகளுக்கு உத்தரவிட்டுத்தான் சண்டை புரிந்துகொண்டிருந்தார் எம் தலைவன்.

போர்க்களத்தில் தன்னையே கொடையாக்கும் அக்கினியாய் நின்றுகொண்டுதான் அன்று எம்மை வழிநடத்தினார் அவர். உன்னிப்பாக தொலைக்காட்சியில் காட்டப்பட்ட உடலையும் தலையையும் பார்த்தேன். நிச்சயமாக முகமும் தலையும் எம் தலைவனுடையதல்ல என்பது தெரிந்தது. முற்றுகை வளையத்திற்குள் சிக்கியிருந்தாலும்கூட எம் தலைவன் எதிரிக்கு நெருப்பாய், புயல்காற்றாய் தான் இருப்பார்.

சர்வதேசமே, ஐ.நா.சபையே, தமிழுலகே… எப்போது வேண்டுமானாலும் என்னைக் கூப்பிடுங்கள். நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன். இன அழித்தலுக்கு சாட்சி சொல்ல வருகிறேன். (சிவரூபன் வருவான்.)

Quelle - மீனகம் on September 22, 2009

23 May 2009

தலைவர் பிரபாகரன் நலம்

மூத்த உறுப்பினர்கள் பலர் வஞ்சகமாக கொல்லப்பட்டுள்ளனர்": செ.பத்மநாதன் [செவ்வாய்க்கிழமை, 19 மே 2009, 09:08 மு.ப ஈழம்] [வி.நவராஜன்]

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருப்பதாகத் தெரிவித்திருக்கும் அந்த இயக்கத்தின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன், ஆனால், தூரதிர்ஷ்டவசமாக தமது இயக்கத்தின் பல மூத்த உறுப்பினர்கள் வஞ்சகத்தனமாகக் கொல்லப் பட்டிருக்கின்றனர் எனவும் குறிப்பிட்டிருக்கின்றார். "சிறிலங்கா அரசாங்கம் போரில் வெற்றி பெற்றிருப் பதாகப் பிரகடனப் படுத்தலாம். ஆனால் இது ஒரு வஞ்சகத்தனமான வெற்றி என்பதை சிறிலங்கா அரசாங்கம் புரிந்துகொள்ளவில்லை. தமிழ் மக்களின் நம்பிக்கையை சிறிலங்கா அரசாங்கம் முழுமையாகவே இழந்துவிட்டது" எனவும் 'தமிழ்நெட்' இணையத்தளத்துக்கு வழங்கிய பேட்டியில் செ.பத்மநாதன் தெரிவித்திருக்கின்றார்.
அவரின் பேட்டியின் முக்கிய விபரங்கள் வருமாறு:

இந்தப் போரில் வெற்றி பெற்றிருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் பிரகடனப்படுத்தியிருக்கின்றது. விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டுள்ளதாகவும் அறிவித்திருக்கின்றது. இந்தப் போரில் உண்மையிலேயே சிறிலங்கா வெற்றிபெற்றுள்ளதா?

சிறிலங்கா அரசாங்கம் நிரூபிக்க முடியாத ஒரு உரிமை கோரலை வெளியிட்டிருக்கின்றது. எமது தேசியத் தலைவர் உயிருடனும் நலமாகவும் உள்ளார் என்பதை மட்டும் என்னால் நிச்சயமாகக் கூற முடியும். ஆனால், எமது அமைப்பின் பல மூத்த உறுப்பினர்களும் தலைவர்களும் உயிரிழந்திருக்கின்றனர் அல்லது துரோகத்தனமாகக் கொல்லப்பட்டுள்ளனர் என்பது உண்மை. இது மிகவும் தூரதிர்ஷ்டமானது. ஆனால், எமது மக்களுடைய விருப்பங்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்படும் வரையில் எமது போராட்டம் தொடரும்.

சிறிலங்கா இராணுவம் தமக்கு ஒரு இராணுவ வெற்றி கிடைத்திருப்பதாகப் பிரகடனம் செய்யலாம். ஆனால் அது ஒரு வஞ்சகத்தனமான வெற்றி என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. தமிழ் மக்களுடைய நம்பிக்கையை இவர்கள் முற்றாகவே இழந்துவிட்டனர்.

தற்போதைய நிலைமைகளின் அடிப்படையில் பார்க்கும்போது விடுதலைப் புலிகளின் எதிர்காலம் எவ்வாறு அமையும்?

தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு இராணுவ வழிமுறைகளில் அல்லாமல் ஒரு அரசியல் தீர்வைக் காண்பதற்கான முயற்சிகளையே முன்னெடுக்க வேண்டும் என்பதை நாம் எமது முன்னய அறிக்கைகள் பலவற்றிலும் தெளிவாகத் தெரிவித்திருந்தோம். எமது மக்களுடைய உயிர்களைப் பாதுகாப்பதற்காகவே இந்த நிலைப்பாட்டை நாம் எடுத்தோம். தமிழ் மக்கள் மீது குண்டுகளை வீசியும், எறிகணைகளால் தாக்குதல் நடத்தியும் அவர்களைப் படுகொலை செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் போரைப் பயன்படுத்துவதை தொடர்ந்தும் அனுமதிக்க நாம் விரும்பவில்லை.

இந்த விவகாரத்தில் தலையிட்டு தாக்குதலைத் தடுத்து நிறுத்துமாறு அனைத்துலக சமூகத்தை நாம் கேட்டுக்கொண்ட போதிலும், இதனைக் கருத்திற்கொள்ளாமல் தாக்குதல் நடவடிக்கையை தொடர்வதிலேயே சிறிலங்கா அரசு குறியாக இருந்தது. எமக்குக் கிடைத்துள்ள தகவல்களின்படி வெள்ளைக்கொடிகளை ஏந்தியவாறு சரணடைய முன்வந்த எமது போராளிகளும் தலைவர்களும் அனைத்துலக நடவடிக்கைகள் அனைத்தையும் மீறும் வகையில் ஈவிரக்கமற்ற முறையில் சுட்டுக் கொல்லப் பட்டிருக்கின்றார்கள். இந்த விடயத்தில் ஒரு பலமான நிலைப்பாட்டை எடுத்து சிறிலங்கா அரசாங்கத்தை இணங்கச் செய்வதற்கும் அனைத்துலக சமூகம் மறுத்துவிட்டது.

இந்த நிகழ்வுகளையிட்டு நாம் மிகவும் வருந்துகின்றோம். ஆனால், இலங்கையில் உள்ள தமிழர்களின் எதிர்காலமும் தமிழ்த் தேசியப் பிரச்சினையும் தீர்வு எதுவும் இன்றி தொடர்ந்திருக்கப் போகின்றது.
தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான தீர்வை முன்னெடுப்பதற்கான தமது பிரதிநிதிகளாக விடுதலைப் புலிகள் அமைப்புக்கு தமது ஆணையை மக்கள் வழங்கியிருக்கின்றனர். இவ்வாறு மக்கள் எமக்கு அளித்துள்ள ஆணையின் அடிப்படையில் பொருத்தமான மாற்றுத் திட்டங்களையிட்டுப் பரிசீலனை செய்வதற்கு எமது அமைப்பு தயாராக இருக்கின்றது.

நீங்கள் அரசியல் தீர்வு ஒன்று தொடர்பாகப் பேசுகின்றீர்கள். ஆனால் கொழும்பு வெளிப்படுத்தும் உணர்வுகளும், தமிழ் மக்களுடைய விருப்பங்களைப் புரிந்துகொள்ளாதவாறு நாட்டின் ஏனைய பகுதிகளில் காணப்படும் மனநிலையும் இதற்கு ஏற்றதாக உள்ளதா?

சிங்கள மக்களிடம் இருந்து வெளிப்படும் உணர்வுகளும் அவர்களின் போக்கும் துரதிர்ஷ்டமானதாகவே இருக்கின்றது. அந்த நாட்டில் தமிழர்கள் சம உரிமை கொண்ட குடிமக்களாக கருதப்பட்டால் அவர்கள் கெளரவத்துடன் நடத்தப்பட வேண்டும். ஆனால், அரசாங்கமும் அதன் இராணுவத்தினரும் பேரினவாதத்தை ஊக்குவிக்கும் வகையிலேயே தமது செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன. இது, இனங்களுக்கு இடையேயான பிளவுகளை மேலும் அதிகப்படுத்துவதற்கே வழிவகுப்பதாக இருக்கும் என்பதுடன், பகை உணர்வுக்கு முடிவைக் கொண்டுவருவதற்கும் தடையாகவே இருக்கும்.

'விடுதலைப் புலிகளுக்குப் பிற்பட்ட காலம்' எனப் பேசப்படுகின்றது. இந்த நிலையில் விடுதலைப் புலிகளால் மக்களை எவ்வாறு அணிதிரட்டி அதற்கான தலைமையை வழங்க முடியும்?

எமது தேசியப் பிரச்சினை ஆசியாவின் நீண்டகாலப் பிரச்சினைகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகின்றது. தற்போது உருவாகியிருக்கும் நிலைமைகளுக்கு இசைவாக எமது தந்திரோபாயங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பது எமது தலைமைக்குத் தெரியும். புலம்பெயர்ந்த தமிழர்கள் விடுதலைப் புலிகளுக்குப் பின்னால் அணி திரண்டு தமது தீவிரமான ஆதரவை உலகம் முழுவதிலும் வெளிப்படுத்தியிருந்தமையை நீங்கள் பார்த்திருப்பீர்கள். வன்னியில் இடம்பெற்றுள்ள கொடூரம் தமிழர்களிடையேயான ஒற்றுமையை மேலும் பலப்படுத்தியிருக்கின்றது.
இதனைத் தனித்துநின்று சாதிக்க முடியாது என்பது எமக்குத் தெரியும். தமிழர்களின் நலன்களையும், அவர்களுடைய எதிர்காலத்தையும் உறுதிப்படுத்துவதற்காக இலங்கையிலோ அல்லது வெளிநாட்டிலோ தமிழர்கள் அல்லது தமிழ் அரசியல் கட்சிகள் மேற்கொள்ளக்கூடிய பங்களிப்பை நாம் வரவேற்கின்றோம். இதனை அடைவதற்காக இந்தியாவில் உள்ள தமிழ்க் கட்சிகள் உட்பட அனைத்துக் கட்சிகளுடனும் இணைந்து செயற்படுவதற்கு நாம் விரும்புகின்றோம்.

தமிழர்களின் இந்த தேசியப் பிரச்சனையின் அடிப்படையில் பல தமிழ்க் கட்சிகள் முன்னர் ஆயுதம் ஏந்திய போராட்டத்தை மேற்கொண்டிருந்தன. அவர்கள் அந்தக் கோட்பாடுகளுக்கு இப்போதும் கெளரவம் கொடுப்பார்கள் என நாம் நம்புகின்றோம். இந்த நிலையில் அதனை அடைவதற்காக இணைந்து செயற்படுவதற்கு அவர்கள் முன்வருவார்கள் என நாம் நம்புகின்றோம்.

09 April 2009

பிரபாகரன் மகனும் விகடன் கட்டுரையும்

இலங்கையை அதிர வைத்துள்ள பிரபாகரன் மகனும், விகடன் கட்டுரையும்!

சென்னை: ஆனந்த விகடனின் 30 ஆண்டு கால இலங்கைக்கான ஏஜென்ட் ஸ்ரீதர்சிங் நேற்று பயங்கரவாத தடுப்பு காவல் துறையினரால் நேற்று கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்படக் காரணம் விகடனில் வெளியாகியுள்ள ஒரு பரபரப்புக் கட்டுரைதான்.

'பிரபாகரன் மகன்' எனும் தலைப்பில் வெளியாகியுள்ள அந்த அதிரடிக் கட்டுரையை இங்கு தருகிறோம்

விகடன் கட்டுரை ..

சார்லஸ் ஆன்டனி - 20 ஆண்டுகள் கழித்து சிங்கள அரசாங்கத்துக்கு மீண்டும் ஒரு புலி சொப்பனமாக மாறியிருக்கும் பெயர்!

அன்று இருந்த ஆன்டனி, பிரபாகரனின் ஆத்மார்த்தமான நண்பன். இன்று இருக்கும் ஆன்டனி, உயிருக்குயிரான மகன்!

சார்லஸ் ஆன்டனியைப் பிரபாகரனால் மறக்க முடியாது. 25 ஆண்டுக்கு முன்னால், சாவகச்சேரி காவல் நிலையத்தைக் கைப்பற்றிய சம்பவம்தான் ஜெயவர்த்தனே அரசாங்கத்துக்குப் புலிகள் மீது பெரிய அச்சத்தை ஏற்படுத்தியது.

ஒரு பஸ்ஸைக் கடத்தி, அதில் சார்லஸ் தலைமையிலான புலிப் படை காவல் நிலையத்தை நோக்கி வந்தது. இயந்திரத் துப்பாக்கிகள் முழங்க உள்ளே நுழைந்த சார்லஸ், அங்கு ஆயுத அறை எங்கே இருக்கிறது என்று தேடினார்.

ஒரு ரிவால்வர், 28 துப்பாக்கிகள், இரண்டு இயந்திரத் துப்பாக்கிகள் என இருந்ததை அள்ளிக்கொண்டு வெளியேறினார்கள்.

சார்லஸைக் குறிவைத்துத் தேடியது சிங்கள ராணுவம். யாழ்ப்பாணத்துக்குப் பக்கத்தில் மீசாலை என்ற இடத்தில் அவர் தங்கி இருப்பதாகத் தகவல் கிடைக்க… போய் இறங்கினார்கள்.

பனை மரங்களுக்குள் ராணுவம் பதுங்கியிருக்க, வெட்டவெளியில் மாட்டிக் கொண்டனர் சார்லஸூம் இரண்டு போராளிகளும். முதல் குண்டு நெஞ்சில் பாய்ந்தது. உயிரோடு தான் பிடிபடக் கூடாது என்று நினைத்த சார்லஸ், ‘என்னைக் கொன்றுவிடு. எந்தப் புலியையும் ராணுவம் உயிரோடு பிடிக்கக் கூடாது’ என்று சக போராளிக்கு உத்தரவு போட்டார். அவன் சம்மதிக்கவில்லை. மீண்டும் கட்டாயப்படுத்தி கெஞ்சினார் சார்லஸ். கடைசியில் அழுதுகொண்டே சுட்டான் அவன்.

‘பிரபாகரன் இந்த அளவுக்கு உடைந்துபோய் நான் பார்த்ததில்லை’ என்று கிட்டு சொல்லும் அளவுக்கு அந்த மரணம் பிரபாகரனைப் பாதித்தது. ஆன்டனியை மறக்க முடியவில்லை அவரால். இரண்டு ஆண்டுகள் கழித்து தனக்கு மகன் பிறந்தபோது, ‘சார்லஸ் ஆன்டனி’ என்று பெயர் வைத்தார். மீசாலையில் சுட்டு வீழ்த்தப்பட்ட சார்லஸ் மீண்டு வருவான் என்று சிங்கள ராணுவம் கனவிலும் நினைத்திருக்காது. சாதாரணமாக சைக்கிளில் போய் இயக்கத்தை வளர்த்த பிரபாகரன், இன்று விமானத்தை வைத்து சிங்கள அரசுக்குச் சிக்கல் கொடுத்துவரும் குடைச்சலின் பின்னணியில், அவரது மகன் சார்லஸ் இருப்பதாகச் சந்தேகப்படுகிறது சிங்கள அரசு.

விமானக் குண்டுவீச்சில்தான் சார்லஸின் வாழ்க்கையே ஆரம்பிக்கிறது. இன்று சார்லஸூக்கு 23 வயது. அவர் பிறந்த காலங்களில்தான் சிங்கள ராணுவம் அதிகமாக விமானப் படைத் தாக்குதலைத் தொடங்கியது. இதிலிருந்து எப்படித் தப்பிக்க வேண்டும் என்று புலிகள் மக்களுக்குச் சொல்லிக் கொடுத்தார்கள். ‘குண்டுவீச்சில் இருந்து பாதுகாப்பு’ என்ற புத்தகம் போட்டு வீடு வீடாகக் கொடுத்தார்கள். அம்மா மதிவதனியுடன் பெரும்பாலும் பதுங்கு குழிகளில்தான் வளர்ந்தார் சார்லஸ். புதுக்குடியிருப்புப் பள்ளியில் தொடக்கக் கல்வி படித்தார். அட்வான்ஸ் லெவல் வரை படித்ததாகச் சொல்கிறார்கள். அதாவது, இங்கு நம் ப்ளஸ் டூ போல. ஜெனரல் சர்டிஃபிகேட் ஆஃப் எஜுகேஷன் என்று இதற்குப் பெயர்.

இதை அவர் முடிக்கும்போது இலங்கையில் போர்ச் சூழல் குறைந்து ரணில் விக்கிரமசிங்கே ஆட்சிக் காலம் ஆரம்பமானது. எனவே, தன்னை உயர் படிப்புக்காக வெளி நாட்டுக்கு அனுப்பிவைக்க மகன் ஆசைப்பட்டுக் கேட்கிறார். ‘ அது பாதுகாப்பானதல்ல’ என்று பிரபாகரன் நினைக்கிறார்.

கொழும்பில் படிக்க அனுப்பலாமா என்ற யோசனை. மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் விண்ணப்பம் வாங்கி இருக்கிறார்கள். ஆனால், அதையும் வேண்டாம் என்று முடிவெடுக்கிறார்கள். ஆனால், மகனது படிப்புக்குத் தடை போட பிரபாகரனுக்கு மனமில்லை. காரணம், சார்லஸின் டெக்னாலஜி ஆர்வம்.

சின்ன வயதில் இருந்தே எதையாவது பிரித்து மேய்வதில் ஈடுபாடு காண்பித்திருக்கிறார். போர்ப் பயிற்சிகளைவிட, போர் ஆயுதங்களைக் கையாளுவது, அது பற்றி படிப்பதில்தான் ஆர்வம் அதிகம் இருந்திருக்கிறது.

முதலில் ஏற்பட்டது கப்பல் ஆர்வம். படகுகள் கட்டும் பிரிவில் ஈடுபாடு காட்டியிருக்கிறார். சில மாதங்களில் கம்ப்யூட்டரைக் கையாளும் ஆர்வமாக அது மாறியிருக்கிறது. அதற்கு ஏற்ற மாதிரி ஆஸ்திரேலியாவில் இருந்து கம்ப்யூட்டர் படித்த 8 பையன்கள் கிளிநொச்சிக்குள் வந்திறங்கினர். அவர்கள் சார்லஸூக்குக் கற்றுக்கொடுத்தனர்.

அந்த எட்டு பேரும் பிரபாகரனால் வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டவர்கள். கிளிநொச்சியில் இருந்து படிப்பில் ஆர்வமான பையன்களை பிரபாகரன் தேர்ந்தெடுத்து, பல ஆண்டுகளுக்கு முன்னால் ஆஸ்திரேலியா அனுப்பி வைத்தாராம்.

அவர்கள், அங்குள்ள மொனாஸ் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் படித்ததாக சிங்களப் பத்திரிகை ‘தி பொட்டம்லைன்’ எழுதுகிறது. சார்லஸூக்கு கம்ப்யூட்டர் கற்றுக்கொடுத்த ஆசான்கள் இவர்கள்தானாம். இதைத் தொடர்ந்து தகவல் தொழில்நுட்பப் பிரிவில் சார்லஸ் வலம் வந்தார்.

அடுத்ததாக, கிளிநொச்சிக்கு வந்து இறங்கியதுதான் இப்போது கலக்கிக்கொண்டு இருக்கும் வான் படை. இளம் நீல நிற வரிப்புலிச் சீருடையும் ‘வானோடி’ என்று பொறிக்கப்பட்ட சின்னத்தையும் பொருத்தி ஒரு படை கட்ட வேண்டும் என்பது பிரபாகரனின் பல்லாண்டுக் கனவு.
அவருடன் அப்பையா அண்ணை என்று ஒருவர் ஆரம்ப காலத்தில் இருந்திருக்கிறார். அவர்’நான் விமானம் செய்யப் போறேன்’ என்று சில வேளைகளில் ஆர்வம் காட்டி இருக்கிறார். அப்போது, எல்லாரும் அவரைக் கிண்டல் செய்வார்களாம்.

கடற்படையில் வேலை பார்த்த தனது நண்பன் டேவிட் மூலமாக ‘கடற்புலி’களை ஆரம்பித்த பிரபாகரன், வான் படைக்கு ஒரு நண்பரைத் தேடினார். சங்கர் கிடைத்தார். கனடாவில் ஏரோநாட்டிக்ஸ் படித்தவர். ஏர் கனடாவில் வேலை பார்த்தவர். முதல் கட்டமாக பழைய விமானம் வாங்கப்பட்டது.

மாவீரர் துயிலுமிடம், வற்றாப்பளை அம்மன் கோயில் ஆகிய இடங்களில் 10 ஆண்டுகளுக்கு முன் இந்த விமானத்தை வைத்துப் பூத் தூவினார்கள். ‘பிரபாகரன் வைத்திருக்கும் விமானம் பூ தூவத்தான் லாயக்கு’ என்று சிங்களத் தளபதிகள் காமென்ட் அடித்தார்கள்.

‘விமானங்களை வாங்குவதற்கு முன் இயக்குவதற்கு ஆட்களைத் தயார் பண்ணுங்கள்’ என்று சங்கர் சொல்ல, ஒரு டீம் பிரான்ஸ், மலேசியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ‘சம்பந்தப்பட்ட நாட்டில் கொண்டுபோய்விட வேண்டியது எங்கள் வேலை.அங்கேயே ஏதாவது வேலை பார்த்துப் படித்து முடிக்க வேண்டியது உங்களது சாமர்த்தியம்’ என்ற அடிப்படையில் 20 பையன்கள் அனுப்பப்பட்டார்கள்.

வெளிநாடு வாழ் ஈழத் தமிழர்களும் உதவ, படிப்பை முடித்து 2002-ல் இந்தக் குழு கிளிநொச்சி வந்து இறங்கியது. இவர்கள் விமானப்படை சம்மந்தமான தொழில்நுட்பங்களை சார்லஸூக்கு ஊட்டினார்கள்.

அவர்களுக்கு தீனியாக சிறு விமானங்கள் தயாராக இருந்தன. ஒரு ஆள் மட்டும் பயணிப்பவை. செக்கோஸ்லோவேகியா நாட்டின் ‘சிலின் இசட் 143 எல்’ ரக விமானங்கள் இவை.

நாங்கள் புலிகளுக்கு விற்கவில்லை என்று அந்த நாடு மறுக்கிறது. வாங்கியதை அப்படியே பயன்படுத்தாமல், அதில் பல மாறுதல்களைச் செய்துள்ளார்களாம். இங்குதான் சார்லஸின் முக்கியப் பங்கு இருந்ததாகச் சொல்கிறார்கள். இப்போது வான் படையை ரத்னம் மாஸ்டர் என்பவர் வழிநடத்தி வருகிறாராம். சிறு விமானத்தை அதிக பயன்பாடு உள்ளதாக மாற்றும் வேலையை சார்லஸ் டீம் பார்த்து வருகிறது.

600 கி.மீ தூரம் போய் திரும்பத்தான் அதில் எரிபொருள் நிரப்ப முடியும். அதாவது ஒரு முறை கொழும்பு போய்விட்டுத் திரும்ப முடியும்.

விமானத்தில் குண்டு நிரப்பிக்கொண்டு போய் ஓர் இடத்தைத் தாக்க வேண்டும் என்று முடிவெடுக்கும்போது, அவ்வளவு எடையைக் கொண்டுசெல்ல இந்த விமானங்கள் வசதிப்படவில்லையாம்.

எனவே, சுமார் 240 கிலோ எடைகொண்ட குண்டுகளைப் பொருத்தும் பலம்கொண்டதாக மாற்றும் காரியங்களை சார்லஸ் டீம் பார்த்ததாம். அதே போல், ரேடாரின் கண்ணுக்குப் படாமல் தப்பிக்க வைக்கவும் இவர்களது குழு பாதை அமைத்துக் கொடுத்திருக்கிறது.

சமீபத்தில் நடந்த தாக்குதலுக்காக இரவு 8.30-க்குக் கிளம்பிய புலிகளின் விமானத்தை 9.20-க்குத்தான் சிங்களப் படை அறிய முடிந்திருக்கிறது.

அதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இத்தனைக்கும் சண்டை அதிகமாக நடக்கும் புதுக்குடியிருப்புக்குத் தென் மேற்குப் பகுதியில் இருந்துதான் விமானங்களைக் கிளப்பியிருக்கிறார்கள்.

ஒரு விமானம் வீழ்த்தப்பட்டது. இன்னொன்று வருமான வரிக் கட்டடத்தின் 3-வது மாடிக்கும் 12-வது மாடிக்கும் மத்தியில் புகுந்தது. 240 கிலோ குண்டு வெடித்ததில் அந்தக் கட்டடமே தீப்பிடித்து எரிந்தது.

புலிகள் வைத்திருக்கும் விமானத்தை ‘குரும்பட்டி மெஷின்’ என்று சிங்களவர்கள் கிண்டல் செய்வார்களாம். வளர்ச்சியின் ஆரம்பத்தில் இருக்கும் தேங்காய்க்குக் குரும்பு என்று பெயர். அந்தக் குரும்பை வைத்து இதுவரை எட்டு முறை குடைந்தெடுத்துவிட்டார்கள்.

அதுவும் குண்டுகளைக் கட்டிக் குதிக்கும் வான் கரும்புலிகள் வந்த பிறகு அச்சம் அதிகமாகி இருக்கிறது. ‘பலவீனமான இனத்தின் பலமான ஆயுதம்தான் கரும்புலிகள்’ என்று பிரபாகரன் சொல்கிறார்.

‘உன்னுடைய எதிரி உனக்கு எந்தக் கஷ்டத்தைக் கொடுத்தானோ, அதையே அவனுக்குத் திருப்பிக் கொடு’ என்பது இந்தக் கரும்புலிகளின் லட்சிய முழக்கமாம். ‘காற்றிலேறி விண்ணையும் சாடுவோம்’ என்று வான் புலிகளின் சட்டையில் எழுதப்பட்டிருக்கிறது.

அதுதான் கண்டம்விட்டுக் கண்டம் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது!

நன்றி: விகடன்

ஏற்கெனவே புலிகளின் விமான தாக்குதல் மற்றும் சார்லஸ் ஆன்டனியின் வான்படை வழிநடத்தும் திறன் போன்றவை குறித்து செய்திகள் வெளியிட்டதாலேயே உதயன் மற்றும் எதிரொலியின் பிரதம ஆசிரியர் ந.வித்யாதரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Quelle - Thats tamil

21 March 2007

4 போராளிகள்- 1 தமிழீழ காவல்துறை வீரரின் வீரச்சாவு

[செவ்வாய்க்கிழமை, 20 மார்ச் 2007, 18:03 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

தமிழீழ விடுதலைக்காக களப்பலியாகிய 4 போராளிகளினதும் தமிழீழ காவல்துறை வீரர் ஒருவரினதும் வீரச்சாவு அறிவித்தல்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர்.

விபரம் வருமாறு:

11.03.07 இல் மட்டக்களப்பு மாவட்டம் பன்குடாச்சேனைப் பகுதியில் முன்னேறிய சிறிலங்கா இராணுத்தினருடன் இடம்பெற்ற நேரடி மோதலின் போது போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார்.

வீரவேங்கை சிவராம் என்று அழைக்கப்படும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பாலப்போடி ரவிச்சந்திரன் என்ற போராளியே வீரச்சாவடைந்தவர் ஆவார்.

18.03.07 இல் மட்டக்களப்பு உன்னிச்சை 8 ஆம் கட்டை பகுதியில் முன்னேறிய சிறிலங்கா இராணுவத்தினருடன் இடம்பெற்ற நேரடி மோதலின் போது போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார்.

மேஜர் மாறன் என்று அழைக்கப்படும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்தராஜா கனகராஜா என்ற போராளியே வீரச்சாவடைந்தவர் ஆவார்.

19.03.07 இல் யாழ். வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருடன் இடம்பெற்ற நேரடி மோதலின் போது போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார்.

2 ஆம் லெப். கணேசன் என்று அழைக்கப்படும் யாழ். மாவட்டத்தை சொந்த முகவரியாகவும் மருத்துவமனை வீதி அம்பலப்பெருமாள்குளம் அக்கராயனை தற்காலிக முகவரியாகவும் கொண்ட அப்துல் ஜபார் கணேசன் என்ற போராளியே வீரச்சாவடைந்தவர் ஆவார்.

19.03.07 இல் யாழ். தென்மராட்சி கிளாலிப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருடன் இடம்பெற்ற நேரடி மோதலின் போது போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார்.

லெப். கதிர் என்று அழைக்கப்படும் ஜீவநகர் இடதுகரை முத்தையன்கட்டு ஒட்டுசுட்டானைச் சேர்ந்த பாலகிருஸ்ணன் மோகனதாஸ் என்ற போராளியே வீரச்சாவடைந்தவர் ஆவார்.

19.03.07 அன்று மன்னார் மாவட்டம் மடு சின்னத்தம்பனை பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருடன் இடம்பெற்ற நேரடி மோதலின் போது தமிழீழ காவல்துறையின் தலைமைக்காவலர் ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார்.

தலைமைக்காவலன் நந்திவர்மன் என்று அழைக்கப்படும் திருகோணமலை மாவட்டத்தை சொந்த முகவரியாகவும் சீ.மாரியம்மா 6 ஆம் குறுக்கு ஆனைவிழுந்தான் கிளிநொச்சியை தற்காலிக முகவரியாகவும் இலக்கம் 18 இடைத்தங்கல் முகாம் வட்டுவாகலை வேறு முகவரியாகவும் கொண்ட கிருபாகரன் நந்திவர்மன் என்ற தலைமைக்காவலரே வீரச்சாவடைந்தவர் ஆவார்.

இம் மாவீரர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் தமது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றனர்.

மணலாற்று ஆக்கிரமிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள விடுதலைப் புலிகள் தயார்

சு.ப.தமிழ்ச்செல்வன்

திங்கட்கிழமை, 5 மார்ச் 2007, 15:10 ஈழம்] [புதினம் நிருபர்]

தமிழர் தாயகத்தில் மணலாற்றுப் பகுதியில் ஆக்கிரமிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள சிறிலங்காப் படையினர் முழுமையான தயார்படுத்தலை மேற்கொண்டுள்ள நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அதனை எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.


தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனுக்கும் இலங்கைக்கான நோர்வேயின் தூதுவர் ஹான்ஸ் பிறட்ஸ்கருக்கும் இடையிலான சந்திப்பு இன்று திங்கட்கிழமை 11.30 மணிமுதல் 1.30 மணிவரை கிளிநொச்சியில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை நடுவப் பணியகத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பு முடிவுற்ற பின்னர் சு.ப.தமிழ்ச்செல்வன் ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய நேர்காணல்:

கேள்வி: இன்றைய சந்திப்பு தொடர்பாக?

பதில்: தற்போதைய நிலைமைகள் தொடர்பாக இன்று கலந்துரையாடினோம். முக்கியமாக போர் நிறுத்த உடன்பாட்டை சீர்குலைத்து சிறிலங்காப் படைகள் எமது தாயகத்தின் மீது கட்டவிழ்த்து விட்டுள்ள வன்முறைகள், ஆக்கிரமிப்பு முயற்சிகள், படுகொலைகள், ஆட்கடத்தல்கள், குண்டுவீச்சுக்கள், மனித உரிமை மீறல்கள் பற்றி சந்திப்பில் விரிவாக விளக்கினோம்.

இந்த விடயங்களில் அனைத்துலக சமூகம் வன்முறைகளை நிறுத்தி அமைதி முயற்சிகளை முன்னெடுக்கும் படி கோரி வரும் நிலையில் சிறிலங்கா அரசாங்கத்தின் யுத்த வெறிப் போக்கும், மனிதப் படுகொலைகள் தொடர்பாகவும் அனைத்துலக சமூகம் ஒரு மென்மையான போக்கை கடைப்பிடிக்கின்ற நிலைப்பாடு எதிர்காலத்தில் அமைதி முயற்சிகளை முன்னெடுக்கின்ற சாத்தியப் பாடுகளை சீர்குலைக்கும் என்ற ஆபத்தான சூழலையும் சந்திப்பில் சுட்டிக்காட்டினோம்.

அனைத்துலக சமூகம் தற்போது கடைப்பிடித்து வரும் அணுகுமுறை சிறிலங்கா அரசாங்கத்தை ஒரு வழிக்கு கொண்டு வரப்போவதில்லை. இது இலங்கைத் தீவை இரத்தக் களரி நிலைக்குத் தான் கொண்டு வரப்போகின்றது. யுத்த நிறுத்த உடன்பாட்டை சீர்குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

அண்மையில் பல நாட்டுத் தூதுவர்கள் அடங்கிய குழுவை மட்டக்களப்புக்கு அழைத்து வந்தபோது ஏற்பட்ட அனர்த்தம் தொடர்பாக எமது கவலையையும் எமது நிலைப்பாட்டையும் தெளிவிபடுத்தியிருந்தோம்.

சிறிலங்கா அரசாங்கத்தினாலும் அதன் படைத்தரப்பினாலும் திட்டமிட்டு செயற்படுத்தப்பட்ட நடவடிக்கையாக உள்ளது என்பதை சுட்டிக்காட்டினோம். எமது விசாரணைக் குழுவின் அறிக்கையின் படி சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்ட ரீதியில் வெளிநாட்டு இராஐதந்திரிகளை ஆபத்தான சூழ்நிலைக்கு சிக்கவைத்து பேரழிவை ஏற்படுத்தி அனைத்துலக மட்டத்தில் தமிழர்களுடைய போராட்ட முன்னெடுப்புக்கள் தொடர்பாகவும் விடுதலைப் புலிகள் தொடர்பாகவும் அபகீர்தியை ஏற்படுத்தும் வகையில் ஒரு திட்டமிட்ட ரீதியில் சிறிலங்கா படைத் தரப்பினரால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான விடயங்களை இன்றைய சந்திப்பில் ஆதாரங்களுடன் விளக்கினோம். தூதுவர்கள் மட்டக்களப்புக்கு பயணம் செய்வது தொடர்பான செய்தியை மனிதாபிமான அமைப்புக்கள் ஊடாகவோ ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புக்களின் ஊடாகவோ எமக்கு எந்த தகவல்களையும் தரவில்லை. தகவல்களை எமக்கு தெரியப்படுத்தாமல் தூதுவர்கள் வந்து இறங்கும் இடத்திலிருந்து தொடர்ச்சியாக காலையில் தாக்குதலை நடத்திவிட்டு பின்னர் தூதுவர்களை அவ்விடத்தில் வானூர்திகள் மூலம் தரையிறக்குவது என்பது பொருத்தமற்ற விடயம். தூதுவர்களை ஆபத்தான சூழலுக்குள் கொண்டு செல்வதாகும். அது ஒரு சதி நடவடிக்கை என்பதையும் சந்திப்பில் விளக்கினோம்.

கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக எங்களுடைய தாயகப் பிரதேசங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறவில்லை. மனிதாபிமான பணியாளர்கள் வெளிநாட்டு இராஐதந்திரிகள், ஊடகவியலாளர்கள் எமது பகுதிக்கு வந்து செல்வதுடன் பணியாற்றுகின்றனர். மட்டக்களப்புச் சம்பவம் சிறிலங்கா படைத்தரப்பினரால் திட்டமிட்ட சதியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை நோர்வேத் தூதுவர் ஆகிய தாங்கள் ஏனைய வெளிநாட்டு தூதுவர்களுக்கு விளக்கும் படி வேண்டியிருக்கின்றோம்.

முக்கியமாக எமது தாயகப் பகுதிகளை கூடுதலாக ஆக்கிரமிக்க சிறிலங்கா அரசாங்கம் முயன்று கொண்டிருக்கின்றது. தென் தமிழீழத்தில் சம்பூர், வாகரை போன்ற பகுதிகளை ஆக்கிரமித்துக்கொண்டு தென் தமிழீழத்தில் பாரியளவில் படை நடவடிக்கைகளில் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றது. அதே போன்று மணலாறு பகுதியை ஆக்கிரமிப்பதற்கும் முல்லைத்தீவு மீது பாரியளவிலான படை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஆயத்தப் பணிகளில் சிறிலங்காப் படைத்தரப்பு ஈடுபட்டுள்ளது.

மணலாற்றுப் பகுதியில் பாரியளவில் படைகளை குவித்து ஆயுத தளபாடங்களை நகர்த்தி பாரியதொரு படை நடவடிக்கைக்கு சிறிலங்கா படை தயாராகி வருகின்றது என்பதை நோர்வே தூதுவருக்கு இன்று சுட்டிக்காட்டியுள்ளோம்.

சிறிலங்கா அரசாங்கம் ஒரு போதும் தனது இராணுவ முன்னெடுப்புக்களை கைவிடுவதாகவோ, அல்லது நிறுத்துவதாகவோ இல்லை. போர் நிறுத்த உடன்பாட்டை சிறிலங்கா அரசாங்கம் ஒருபோதும் மதிக்கப்போவதில்லை. அனைத்துலக சமூகத்தின் கரிசனைகளை சிறிலங்கா அரசாங்கம் மதித்து நடக்கும் நிலையில் இல்லை. சிறிலங்கா அரசாங்கம் முழுமையாகவே யுத்த வெறிப்போக்கொடு பாரியளவில் தமிழ் மக்களுக்கு அழிவுகளை ஏற்படுத்தும் வகையில் தான் செயற்பாடுகளில் இறங்கியிருக்கின்றார்கள்.

இவற்றுக்கு உதாரணமாக கிழக்கில் இடம்பெற்ற சம்பவங்களும் முல்லைத்தீவு, மணலாறு பகுதிகளை ஆக்கிரமிக்க பாரியளவில் சிறிலங்காப் படைகள் தயாராகிக்கொண்டிருப்பதை சுட்டிக்காட்டினோம். மணலாற்றில் இருக்கின்ற எமது படையணிகள் சிறிலங்காப் படைகள் குவிக்கப்படுவதை உறுதிப்படுத்தியுள்ளார்கள். எமது உளவுத் தகவல்களின் அடிப்படையில் மணலாற்றில் சிறிலங்கா படைகள் ஆயுத தளபாடங்களை குவித்துள்ளார்கள் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

சிறிலங்காப் படைகளின் முயற்சிகளை முறியடிப்பதற்கு எமது படையணிகளும் தயராகிக்கொண்டிருக்கின்றது. இது ஒரு பாரியளவிலான யுத்தமாக வெடிக்கும் என்பதை சுட்டிக்காட்டினோம். சிறிலங்காப் படைகளின் இப்படியான முயற்சிகள் மகிந்த ராஐபக்ச அரசின் இலங்கைத் தீவையே முழு யுத்த களத்திற்கு கொண்டு செல்லுகின்ற நிலையினை உருவாக்கும் என்பதை சுட்டிக்காட்டி எமது கண்டனத்தையும் தெரிவித்தோம்.

இந்த நிலையில் அனைத்துலக சமூகம் மென்மையான போக்கை கடைப்பிடிப்பது சிறிலங்கா அரசாங்கத்திற்கு தூண்டுதலாக அமைகின்றது. தொடர்ந்தும் விடுதலைப் புலிகள் பொறுமை காக்கின்ற நிலைமை ஏற்படாது. அனைத்து யுத்திகளையும் தந்திரோபாயங்களையும் பயன்படுத்தி கடந்த காலங்கள் போல பரந்த அளவில் தீவிரப்படுதும் நிலைக்கு தள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்றோம்.

அனைத்துலக சமூகம் தமிழீழ விடுதலைப் புலிகளை கண்டிப்பது, ஒருதலைப்பட்சமாக குற்றம் சுமத்துவதை தவிர்க்க வேண்டும். சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்களையும் பார்த்துவிட்டு எமது நடவடிக்கைகள் தீவிரம் அடையும் போது கண்டனம் தெரிவிப்பதில் அர்த்தம் இல்லை என்பதை அனைத்துலக சமூகத்திற்கு தெளிவாக்கும் படி நோர்வே தூதுவரிடம் கோரியிருக்கின்றோம்.

கேள்வி: இணைத் தலைமைகள் நாடுகளிடமிருந்து ஏதாவது செய்திகள் எடுத்து வரப்பட்டதா?

பதில்: இணைத் தலைமை நாடுகளின் செய்திகள் என்று எதுவும் எடுத்து வரப்படவில்லை. அனைத்துலக சமூகத்தின் கரிசனையாக வன்முறைகள் நிறுத்தப்பட்டு சமரச முயற்சிகள் மீண்டும் தொடக்கப்பட வேண்டும் என்பது அனைத்துலக சமூகத்தின் விரும்பமாகும்.

நாம் அனைத்துலக சமூகத்திடம் முன்வைத்த நிலைப்பாடு எந்த அடிப்படையில் இதனை முன்னெடுப்பது என்பதாகும். யுத்த நிறுத்த உடன்படிக்கை என்பது பல தசாப்தங்களாக இடம்பெற்ற உக்கிர சமருக்கு ஒரு சிறிய இடைவெளியாவது கொடுத்து அதற்கான பாதையை திறந்து விட்டது.

போர் நிறுத்த உடன்பாட்டை சிறிலங்கா அரசாங்கம் தூக்கியெறிந்து, சிறிலங்கா அரசாங்கம் கூட ஏன் மகிந்த ராஐபக்ச கூட போர் நிறுத்த உடன்பாட்டை விமர்சித்து இருக்கின்றார். அரச மட்ட அமைச்சர்கள் கூட போர் நிறுத்த உடன்பாட்டை விமர்சித்து உதாசீனப்படுத்தியிருக்கின்றார்கள். நடைமுறையில் சிறிலங்கா அரசாங்கம் போர் நிறுத்த உடன்பாட்டை மீறிவரும் நிலையில் வன்முறைகளை நிறுத்தி பேச்சுக்களை முன்னெடுப்பது என்பது பற்றி கேள்வி எழுப்பினோம்.

அனைத்துலக சமூகம் எதனையும் கொண்டு வரும் நிலையில் இல்லை. சிறிலங்கா அரசாங்கம் அனைத்துலக அளவில் மனிதாபிமான அமைப்புக்கள், மனித உரிமை அமைப்புக்கள் என குற்றம் சுமத்தப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

மனிதப் பேரவலம் இலங்கைத் தீவில் அதிகரித்துள்ளது. உலக நாடுகளில் மிக மோசமாக மனித உரிமை மீறும் நாடாக பட்டியல் வகிக்கும் நாடுகளில் சிறிலங்கா முதன்மையான இடத்தை பிடித்துள்ளது. இது அனைத்துலக அளவில் ஏற்பட்டுள்ள நிலையில் அனைத்துலக நாடுகள் இராணுவ பொருளாதார உதவிகளை அனைத்துலக சமூகம் நிறுத்தி சிறிலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவில்லை என்பது எமது மக்களுக்கு கவலை ஏற்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டினோம்.

கேள்வி: அணுசரணைப் பணியில் ஈடுபட்டுபட்டிருக்கின்ற நோர்வேத் தரப்பு இதுவரை சிறிலங்காப் படைகளின் ஆக்கிரமிப்பு அத்துமீறல்கள் தொடர்பாக அதனை நிறுத்துவதற்கான அழுத்தத்தை சிறிலங்கா அரசிற்கு கொடுக்கவில்லை ஏன்?

பதில்: இது தொடர்பான கவலையையும் நாங்கள் தெரிவித்திருக்கின்றோம். நோர்வே அணுசரணையாளர்களும் அனைத்துலக சமூகமும் சிறிலங்கா அரசாங்கத்தின் வலிந்த தாக்குதல்களை படை நடவடிக்கைளை பாரிய மனித உரிமை மீறல்களை தடுக்கவில்லை ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கவிலை என்பதை நாங்கள் இன்று சுட்டிக்காட்டினோம். அது தொடர்பான கவலையையும் தெரிவித்திருக்கின்றோம்.

Quelle - Puthinam

சிறிலங்காவின் வெற்றிப் பெருமிதமும் தலைக்குனிவும்

வெள்ளிக்கிழமை, 2 மார்ச் 2007, 06:48 ஈழம்] [கி.தவசீலன்]

"மட்டக்களப்பை விட்டு விடுதலைப் புலிகளை விரட்டியடித்து விட்டோம் என்ற சிறிலங்கா அரசின் கூற்று பொய் என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது. வெளிநாட்டு இராஐதந்திரிகள், சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் 'பாதுகாப்புப் படைகள்' வெற்றிப்பாதையில் வீறுநடை போடுகின்றனர் என்ற கூற்றைக்கூட சிறிதளவும் மெய்யென்று நம்பமுடியாமல் செய்துவிட்டது".


இவ்வாறு ஜேர்மனியில் வெளியாகும் நாளேடுகளில் ஒன்றான General-Anzeiger நேற்று முன்தினம் புதன்கிழமை (28.02.07) வெளியிட்ட செய்தியில் சிறிலங்கா அரசை எள்ளி நகையாடியுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில் உள்ள வெபர் விளையாட்டு மைதானத்தில் உலங்குவானுர்தியில் இருந்து இறங்க முற்பட்ட வேளை இடம்பெற்ற எறிகணை வீச்சுத் தாக்குதலில் வெளிநாட்டு இராஜதந்திரிகள் காயமடைந்த செய்தி பற்றி எழுதும்போதே அந்நாளேட்டின் செய்தியாளர் இவ்வாறு எழுதியுள்ளார்.

அந்நாளேட்டின் செய்தியாளர் வில்லி கேர்முண்ட் முதலில் வெற்றிப் பெருமிதமும் பின்னர் தலைக்குனிவும்' எனத் பெருந்தலைப்பிட்டும், 'இராஜதந்திரிகள் மீதான தாக்குதலில் சிறிலங்கா அரசாங்கம் நாட்டின் பாதுகாப்பு நிலவரம் பற்றி அழகாகப் பேசுகிறது என்று தெரியவந்துள்ளது' எனச் சிறுதலைப்பிட்டும் சிங்கப்பூரிலிருந்து அச்செய்தியினை எழுதியுள்ளார்.

சிறிலங்கா அரசாங்கச் செய்திகளின்படி சிறிலங்காப் படையினரால், விடுதலைப் புலிகள் மட்டக்களப்புப் பகுதியிலிருந்து விரட்டியடிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

பேரழிவு நிவாரண, மனித உரிமைகளுக்கான அமைச்சர் மகிந்த சமரசிங்க இராஜதந்திரிகளை இப்பிரதேசங்களுக்கு அழைத்துச்சென்று 'எவ்வளவு பாதுகாப்பாக உள்ளது' என்று காட்டமுயன்றபோதே கிட்டத்தக்க பேரழிவுக்குச் சமமான இச்சம்பவம் இடம்பெற்றது. ('எவ்வளவு பாதுகாப்பானது' என்பதை இச்செய்தியாளர் மேற்கோள் குறியிட்டு இகழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.)

இரு உலங்குவானூர்திகளில் ஒன்று விருந்தாளிகளுடன் தரையிறங்கியபோதே இரு எறிகணைகள் வீழ்ந்து வெடித்தன. ஜேர்மனிய தூதுவர் ஜூர்கவன் வீத் காயமடையாமல் தப்பியவர்களில் ஒருவர். அவரது அமெரிக்க நண்பர் றொபேர்ட் ஓ பிளேக் இடது கையில் காயப்பட்டுள்ளார். ஆனால் இத்தாலிய இராஜதந்திரி பியோ மரியாணி உள்ளுர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறிய உலோகத்துண்டு அவரது தலையிலிருந்து அகற்றப்பட்டது. மொத்தமாக காயமடைந்தவர்கள் 11 பேர்.

தமிழர்களின் சுதந்திர நாட்டுக்காகப் போராடும் விடுதலைப் புலிகளின் தரப்பு பேச்சாளர் ஒருவர் இத்துரதிர்ஸ்ட சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்தார். உலங்குவானூர்தியில் இராஜதந்திரிகள் இருந்ததை தாங்கள் அறிந்திருக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

சிறிலங்கா, தனது தரப்புச் செய்தியில் இது 'விடுதலைப் புலிகளுக்கு' முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது என்று தெரிவித்தது. தமது சொந்த நாவிலேயே இவர்கள் ஏற்கனவே துரத்தியடிக்கப்பட்டார்கள் என்று முன்னர் தெரிவித்திருந்தனர்.

இப்போது சிறிலங்கா அரசு தலையில் துண்டைப் போட வேண்டியதாக போய்விட்டது. மட்டக்களப்பை விட்டு விடுதலைப் புலிகளை விரட்டியடித்து விட்டோம் என்ற சிறிலங்கா அரசின் கூற்று பொய் என்று வெட்ட வெளிச்சமாகிவிட்டது. வெளிநாட்டு இராஜதந்திரிகள், சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் 'பாதுகாப்புப் படைகள்' வெற்றிப்பாதையில் வீறுநடை போடுகின்றனர் என்ற கூற்றைக்கூட சிறிதளவும் மெய்யென்று நம்பமுடியாமல் செய்துவிட்டது.

2002 இல் கைச்சாத்திடப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் தற்போது மீறப்பட்டுவிட்டது. கடந்த வருடத்தில் மட்டும் 4,000 பேர் மீண்டும் மூண்ட போரில் உயிரிழந்துள்ளனர். இலங்கையின் வடபகுதியிலுள்ள வவுனியா நகரம் மனித நடமாட்டமின்றி வெறிச்சோடியுள்ளது.

ஏனெனில் பல்லாயிரக்கணக்கான குடிமக்கள் சிறிலங்காப் படைகள் தாக்குதல் நிகழ்த்தலாம் என்ற அச்சத்தால் உயிரைக்கையில் பிடித்தபடி வெளியேறியுள்ளனர். இராணுவ நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் நோர்வேக்குழு ஒன்றுகூட வவுனியாவை விட்டு வெளியேறியுள்ளது.

கடந்த வாரங்களில் தென்கிழக்குப்பகுதியில் தமது நிலைகள் மீது கொழும்புப்படைகள் தாக்குதல் தொடுத்தபோது விடுதலைப் புலிகள் சுழித்துக்கொண்டு தப்பிவிட்டனர். பாகிஸ்தானிய ஆலோசகர்களின் வழிகாட்டலுடன் பறந்த வான்படை விமானம் விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது தாக்குதலை நடத்தியது.

சிறிலங்காப் படையினரின் வெற்றியும், விடுதலைப் புலிகளின் தற்பாதுகாப்பு பின்வாங்கல் நடவடிக்கைகளும் கொழும்பில் உள்ள சிறிலங்கா அரசின் வெற்றிப் பெருமிதத்தை இந்த இராஜதந்திரிகள், ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் அடங்கிய உலங்குவானூர்தி மீதான தாக்குதல் முடிவுக்குக்கொண்டு வந்துள்ளது.

இருந்தபோதிலும் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தமிழர்களை விடுதலைப் புலிகளிடமிருந்து விடுவிப்பதற்கு முயற்சிப்பதான தனது கூற்றை அப்படியே தொடர்ந்தும் கூறிக் கொண்டிருக்கலாம். இராணுவ வெற்றி அல்லது இராணுவ ஆலோசனை மூலம் விடுதலைப் புலிகளை பேச்சுவார்த்தை மேசையில் தனது நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட வைக்கலாம் என்று அவர் நினைக்கின்றார்.

விடுதலைப் புலிகள் கடந்த வாரத்தில் 2002 இல் செய்யப்பட்ட போர் நிறுத்தத்தில் இனியும் தாம் பிணைக்கப்பட்டிருப்பதாக உணரவில்லை என்றும் தாயகம் வேண்டிய ஆயுதம் தாங்கிய போராட்டத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இராஜதந்திரிகள் பயணம் செய்த உலங்குவானூர்தி மீதான நேற்றைய (27.02.07) தாக்குதல் நடவடிக்கை காட்டுவது இனிதாக்குதல் விடயத்தில் அவர்கள் அடுத்தவர் மீது சிறிதளவு கரிசனை மட்டுமே காட்டுவார்கள் என்பதையே.

இவ்வாறு அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

Quelle - Puthinam

05 June 2006

ஓஸ்லோ பயணம் ஏன்?

சு.ப.தமிழ்ச்செல்வன் விளக்கம்
ஞாயிற்றுக்கிழமை, 4 யூன் 2006, 15:47 ஈழம்] [ச.விமலராஜா]

நோர்வேயின் அழைப்பை ஏற்று ஓஸ்லோப் பயணம் செல்வது ஏன் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் விளக்கம் அளித்துள்ளார்.

ஓஸ்லோ செல்வதற்கு முன்பாக கிளிநொச்சியில் புலிகளின் குரல் வானொலிக்கு சு.ப.தமிழ்ச்செல்வன் கூறியதாவது:

எமது ஒஸ்லோப் பயணமானது தாயகத்தில் இன்று ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடி நிலைமையை சமூகமான நிலைக்கு கொண்டு வரும் என்று நாங்கள் நம்பவில்லை.

உண்மையிலேயே நாம் ஒஸ்லோவுக்கு போவது என்பது, நோர்வேயினுடைய அழைப்பை ஏற்று அதனை மதித்து இதுவரை காலமாக நோர்வேத் தரப்பு முன்னெடுத்து வந்த அமைதி முயற்சிகள், சமாதான முன்னெடுப்புக்கள், அனுசரணைப் பணிகளுக்கு மதிப்பளிக்கும் முகமாகத்தான் நோர்வே அழைப்பை எங்களுடைய தலைமைப்பீடம் சாதகமாக பரிசீலித்து ஒஸ்லோ பயணத்துக்கு எங்களை செல்லுமாறு எமது தலைவர் பணித்தார். அந்த வகையில் தான் ஒஸ்லோ செல்கின்றோம்.

தமிழர் தாயகத்தில் மிக மோசமாக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்ற இனப்படுகொலைகள், வன்முறைகள், மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றை நாம் நோர்வேத் தரப்புக்கும், சர்வதேச சமூகத்திற்கும் தெளிவுபடுத்துகின்ற ஒரு முயற்சியாகத்தான் எங்களுடைய பயணம் அமைகின்றது.

ஒருபக்கம் சமாதான அழைப்பை விடுத்துக் கொண்டு, சமாதானத்துக்கு சாதகமாக பேசிக்கொண்டு, பேச்சளவில் ஒன்றையும், செயலளவிலும் முழு அளவில் தமிழர் தாயகத்தை சிதைப்பதும், தமிழர் தாயகத்தில் இனப்படுகொலையை கட்டவிழ்த்து விடுவதும் மிகக் கொடூரமான ஒரு யுத்தத்தை எதிர்நோக்கும் நோக்கோடுதான் செயல், மகிந்த ராஜபக்ச தீவிரமாக செயற்பட்டு வருகின்றார். ஆகவே, மகிந்த ராஜபக்சவிற்கு எந்தவிதத்திலும் சமாதானத்தின் மீது ஆர்வமோ அக்கறையோ இல்லை.

சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களை தணிப்பதற்காகவே பேச்சளவில் இப்படியான பேச்சுக்களை பேசிக்கொண்டிருக்கின்றார் என்பதால் செயற்பாட்டில் எதுவுமில்லை. இதனை அம்லப்படுத்தும் நோக்கோடுதான் ஓஸ்லோவுக்குப் போகிறோம்.

சிறிலங்கா அரசாங்கத்தின் அழுத்தங்கள் மற்றும் தீவிர முயற்சிகளினால் கட்டவிழித்துவிட்டிருக்கின்ற பொய்யான பரப்புரைகளால் சர்வதேச சமூகம் மேற்கொண்டிருக்கிற செயற்பாடுகளால் எங்கள் மக்கள் கவலை அடைந்தது மட்டுமல்லாமல் ஆத்திரமடைந்தும் உள்ளனர்.

தாயகத்தில் அனைத்து மக்களும் பூரண எழுச்சியோடு ஒரு குறிக்கோளுடன் அணிதிரண்டுள்ளன. எங்களுடைய தாயகப் பகுதியை சிறிலங்காப் படைகள் ஆக்கிரமித்து வைத்துக் கொண்டு எங்களது மக்களை சித்திரவதை செய்துகொண்டு படுகொலை செய்துகொண்டிருக்கும் வரை சமாதான முயற்சிகள் சாத்தியமில்லை என்பதை மக்கள் உணர்ந்திருக்கின்றனர்.

முழு அளவில் எங்கள் தாயகப் பிரதேச்த்தை மீட்டெடுத்து நிம்மதியாக- சுதந்திரக்காற்றை சுவாசிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் மக்களின் ஒட்டுமொத்த அபிலாசையாக இருக்கிறது.

எங்களுடைய தாயகத்தில் வன்முறைகளும் படுகொலைகளும் மிக உச்ச அளவில் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில் எமது தாயகத்தை ஆக்கிரமித்து நிற்கும் ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்ற வேண்டும் என்ற வெறியோடு மக்கள் உள்ளனர்.

இதனை சர்வதேச சமூகம் புரிந்து கொள்ள வேண்டிய நிலைக்கு வந்துள்ளது. இந்த நிலையில்தான் எங்கள் பயணம் அமைந்திருக்கிறது. எங்களுடைய மக்களின் அபிலாசைகள், எமது தலைவரின் உறுதியான நிலைப்பாடுகளை நேரடியாக எடுத்து விளக்குவதுதான் பொருத்தமாக இருக்கும் என்ற வகையில்தான் எங்கள் தலைவர் ஓஸ்லோ பயணத்துக்கு எங்களை அனுமதிக்க இணங்கினார்.

எங்கள் மக்களினது பூரண உழைப்பு, எழுச்சி மூலமாக எமது தேசத்தின் மீதான ஆக்கிரமிப்புகள் அகன்று சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் காலம் மிக விரைவில் நெருங்கி வருகிறது என்றார் சு.ப.தமிழ்ச்செல்வன்.

Quelle - Puthinam

04 June 2006

விடுதலைப் புலிகள் குழு ஓஸ்லோ புறப்பட்டது

[ஞாயிற்றுக்கிழமை, 4 யூன் 2006, 17:28 ஈழம்] [ம.சேரமான்]

போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு தொடர்பான பேச்சுக்களில் கலந்து கொள்வதற்காக ஐந்து பேர் அடங்கிய தமிழீழ விடுதலைப் புலிகள் குழுவினர் இன்று ஞாயிற்றுக்கிழமை ஓஸ்லோ புறப்பட்டுச் சென்றனர்.

எதிர்வரும் 8, 9 ஆம் ஆகிய நாட்களில் இப்பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன், காவல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், சமாதான செயலகப் பணிப்பாளர் சி.புலித்தேவன் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

சிறிலங்கா உலங்குவானூர்தியில் இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் கிளிநொச்சியை வந்தடைந்த நோர்வே அனுசரணையாளர்கள், விடுதலைப் புலிகள் குழுவின் பயணத்துக்கான ஒழுங்குகளை ஏற்பாடு செய்திருந்தனர்.

அமெரிக்காவில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் சட்ட ஆலோசகர் உருத்திரகுமாரனும் ஓஸ்லோ பேச்சுக்களில் இணைந்து கொள்கிறார்.

27 May 2006

கேணல் ரமணன்

படைத்துறைப் புலனாய்வாளராக தனித்துவமாகச் செயற்பட்டவர் ரமணன்
- பொட்டு அம்மான் -


கேணல் ரமணனின் சிறந்த செயற்பாடுகள் காரணமாக அவரை எமது புலனாய்வுத்துறையிலே இணைத்துப் புலனாய்வுச் செயற்பாட்டாளராக இணைக்க நான் விரும்பினேன். ஆனால் மாவட்ட தேவை கருதி அங்கொரு படைத்துறைப் புலனாய்வுச் செயற்பாட்டாளராகத் தனித்துவமாகச் செயற்பட்டு வந்தார் என்று விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி கேணல் ரமணனின் வீரச்சாவு தொடர்பாக தமிழீழத் தேசியத் தொலைக் காட்சிக்கு தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

ரமணனை எனக்கு மிக நீண்ட நாட்களாகத் தெரியும். 1987 இன் ஆரம்பத்தில் அல்லது அதற்கு முன்னைய காலப்பகுதியில் என்று நினைக்கின்றேன்.

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலைக்கு அண்மையாக உள்ள அம்பிலாந்துறைக் கிராமத்தில் சிறிலங்கா படையினருடைய நகர்வு ஒன்றைத் தடுத்து நடத்திய சண்டை ஒன்றிலேயே எம்முடன் இணைந்து செயற்பட்டிருந்தார். அவ்வேளையில் அவர் றீகனின் அணியிலே ஒரு போராளியாகச் செயற்பட்டிருந்தார்.

மட்டக்களப்பு அம்பாறை காடு, மேடுகள், வயல்வெளிகள் எல்லாவற்றிலும் நாம் நீண்ட பயணங்களை நீண்ட நாள்கள் ஒன்றாகச் செய்திருந்தோம். பல்வேறு நடவடிக்கைகளிலே அவர் சேர்ந்து செயற்பட்டிருந்தார். அவ்வேளையில் அவர் றீகனின் அணியிலே ஒரு போராளியாகவும் அதன் பின்னர் றீகனின் அணியிலே ஒரு பகுதிப் பொறுப்பாளராகவும் செயற்பட்டிருந்தார்.

அவரது குடும்பத்தினரதும் போராட்டப் பங்களிப்புக்கள் பற்றி எல்லோருக்கும் தெரியும். அதைத் தொடர்ந்து அவரது சிறந்த செயற்பாடுகள் காரணமாக அவரை எமது புலனாய்வுத்துறையிலே இணைத்துப் புலனாய்வுச் செயற்பாட்டிலே ஒருவராக இணைக்க நான் விரும்பியிருந்தேன். ஆனாலும், மாவட்டத்தின் தேவை கருதி அங்கே ஒரு படைத்துறைப் புலனாய்வுச் செயற்பாட்டாளராக அவர் தனித்துவமாகச் செயற்பட்டிருந்தார்.

அவர் படைத்துறைப் புலனாய்வுச் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த காலத்திலே வெற்றிகரமான பல நடவடிக்கைகளைச் செய்திருந்தார். அவற்றில் நான் நேரடியாக தொடர்புபட்டிருக்காத போதிலும் கூட அவருடைய நடவடிக்கைகள் எனக்கு வியப்பையும், பெருமையையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தத்தக்க வெற்றிகளை அவர் பெற்றிருந்தார்.

குறிப்பாகச் சொல்வதானால், சிறிலங்கா அதிரடிப்படை அதிகாரி சகபந்து என்பவர் மீது ஒரு வெற்றிகரமான கரும்புலி நடவடிக்கையையும், அதனைத் தொடர்ந்து இன்று கருணா போல் அன்று செயற்பட்ட ராசிக் என்ற துரோகி மீதான வெற்றிகரமான கரும்புலித் தாக்குதல் நடவடிக்கைகளையும் அவரது புலனாய்வுச் செயற்திறன் சார்ந்த வெற்றிகளாக மிக முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவையாகின.

கருணாவின் துரோகம் வெளிப்பட்ட வேளையிலே ரமணன் அதிர்ச்சியுற்றிருந்தார். இவ்வாறு துரோகத்திற்கான செயற்பாட்டை மனதிலே வைத்துக் கொண்டு இந்த மனிதரால் எவ்வளவு தூரம் இவ்வாறு நடிக்க முடிந்தது என அவர் ஆச்சரியப்பட்டிருக்கின்றார். அந்தத் துரோகத்தை முறியடிப்பதிலே தன்னை முழுமையாக அர்ப்பணித்திருந்தார். மிக ஆபத்தான பணிகளை பொறுப்பேற்றுக் களத்திலே இறங்கியிருந்தார். அது எல்லோருக்கும் தெரியும்.

தமிழீழத் தேசியத்தின் பால் அவர் கொண்டிருந்த மாறாத பற்றுறுதியும் விடுதலை என்பதில் அவருக்கிருந்த பூரணமான தெளிவும் தான் அவ்வாறான தெளிவான முடிவுகளை எடுப்பதற்கும் ஆபத்தை எதிர்கொள்வதற்கும் அவருக்கு உறுதுணையாக இருந்ததென்றால் மிகையில்லை என்றார் பொட்டு அம்மான்.

Quelle-புதினம்

கேணல் ரமணன்: ஒருபார்வை

சர்வதேசக் கண்காணிப்புடனான சமாதானம் தமிழர்கள் முதுகிலே மீண்டும் ஒருமுறை ஓங்கிக் குத்தியிருக்கிறது. மட்டக்களப்பு மாவட்டத்தின் துணைத் தளபதி கேணல் ரமணன் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்துள்ள வவுணதீவில் பாதுகாப்பு அரண்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த வேளை சிறிலங்கா படையினரின் குறிச்சூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கிறார்.

இது நடைமுறையில் இருந்து வரும் போர் நிலையின் தீவிரத்தைப் பறை சாற்றுவதுடன் சிறிலங்கா அரசின் நிலைப்பாட்டையும் எண்ணவோட்டத்தையும் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பழுகாமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட கேணல் ரமணன், எண்பத்தாறில் போராட்டத்தில் இணைந்தவர். அவருடைய மூத்த சகோதரரும் போராளி. சகோதரியும் இளைய சகோதரரும் போராளிகளாக இருந்தவர்கள். இன்னுமொரு சகோதரர் பாதை மாறிய ஒரு அமைப்பிலிருந்து விலகி, விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருந்தபோது துரோகிகளால் கொல்லப்பட்டவர். “புலிகளின்” வீடு என்பதாலும் புலிகளை ஆதரிக்கும் வீடென்பதாலும் அவரின் தாயாரின் வீடு படையினரால் குண்டு வைத்துத் தரை மட்டமாக்கப்பட்டது.

ஆரம்பத்தில் லெப். கேணல் றீகனின் (முன்னாள் மட்டு மாவட்டத் தளபதி) அணியில் செயற்பட்ட ரமணன், இந்திய ஆக்கிரமிப்புக் காலத்தில் துணிகரமான தாக்குதல்களைச் செய்தவர். பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலத்தில் மறைந்திருந்து இந்தியக் காலாட் படைமீது தாக்குதல் நடத்தி ஆயுதங்களையும் கைப்பற்றியதால் பாராட்டும் பெற்றவர். அதன்பின் தம்பிலுவில் துரோகிகள் முகாம் தாக்குதலுக்கு அணித்தலைவராகச் சென்றிருந்தார். பூநகரி வரலாற்றுச் சமரிலும் பங்கேற்றார்.

மட்டு நகரில் நியூட்டன் அவர்களின் காலத்திலும் அதற்குப் பின்னரும் படைத்துறைப் புலனாய்வுச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த கேணல் ரமணன் குறிப்பிடத்தக்க முறியடிப்புப் புலனாய்வுத் நடவடிக்கைகள் பலவற்றைச் செய்திருந்தார். மதிநுட்பத் திட்டமிடலிலும், உளவியல் போரியலிலும் திறன்கொண்டிருந்த கேணல் ரமணன் மட்டக்களப்பிலுள்ள சிறிலங்கா படைச் சிப்பாய்களின் சிம்மசொப்பனமாக விளங்கியவர்.

துரோகிகளின் செயற்பாடுகளை முடக்குவதில் திறமை காட்டிய அவர், கருணாவின் சதியை முறியடிப்பதில் மிக முக்கியமான பங்கு வகித்தவர்.
கருணா மட்டக்களப்பிலிருந்து விரட்டப்பட்ட பின்பும் தாயகத்திற்கு எதிராகச் செய்யமுனைந்த பல சதித் தாக்குதல்களைத் தடுத்த பெருமையும் ரமணனுக்கு உண்டு.

சுனாமியின் போது குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் நேரடியாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டபோதே சிறிலங்கா படைகள் ரமணனைப் பின் தொடர்ந்தமை குறித்தற்குரியது. அதன்பின் மாவட்டத்தின் துணைத் தளபதியாக படைத்துறை மற்றும் அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்ட அவர், பன்சேனை திலீபன் மருத்துவ நிலையத்தை அமைப்பதற்கு இரவு பகலாக உழைத்தவர்.

தளங்களிலும் மக்களிடையேயும் ஒரு திறன்மிக்க போராளியாகவும், நாவண்மையுடைய பேச்சாளராகவும், விளையாட்டு வீரராகவும், கலைகளில் ஆர்வமுடன் பங்கேற்பவராகவும் தன்னை அடையாளப்படுத்தியுள்ள ரமணன், அண்மைக் காலத்தில் தமது இந்திய ஆக்கிரமிப்புக்கால தலைமறைவுப் போராட்ட வாழ்க்கையை படியுங்கள் அறியுங்கள் என்பதை மட்டக்களப்புப் பதிப்பிற்காக எழுத ஆரம்பித்திருந்தார்.

அனுபவமும், தலைமைத்துவ ஆற்றலும் மண்ணின் இயல்பறிந்த செயற்பாடும் கொண்ட ஒரு தளபதியைக் கொன்றிருப்பதன் மூலம் இனப்பிரச்சனைக்கான சிறிலங்கா தரப்பின் தீர்வுமுறை முன் வைக்கப்பட்டிருப்பதாகவே தமிழர் கருத இடமுண்டு.

Quelle - Batti Eelanatham