Showing posts with label நேர்காணல். Show all posts
Showing posts with label நேர்காணல். Show all posts

24 January 2014

இப்படித்தானே வாழமுடியும் - தமிழ்க்கவி

- இலங்கைப் போர்க் காட்சிகளின் சாட்சி!

ஈழ இறுதிப் போரின்போது, மக்களுக்கும் புலிகளுக்கும் வித்தியாசம் இல்லாமல் போயிற்று. அவர்களும் மக்களோடு மக்களாக நின்றார்கள். கிளிநொச்சியில் வீட்டுக்கு ஒருவரை கேட்டு வாங்கிய இயக்கம், இறுதிப் போரின்போது கட்டாய ஆள்சேர்ப்பில் ஈடுபட்டது. அதில் யாருக்கும் எந்த விதிவிலக்கும் இல்லை.

தலைவர், தன் பிள்ளைகளைக் களமுனையில் நிறுத்தினார். தளபதிகள், தங்கள் பிள்ளைகளைப் போருக்கு அனுப்பினார்கள். ஆனால், இலங்கை இராணுவம் சுற்றி வளைத்தபோது அந்தக் கட்டாய ஆள்சேர்ப்பும்கூட பயன்படவில்லை

ஈரமற்ற குரலில் உருக்கமாகப் பேசுகிறார் தமிழ்க் கவி.

இவரின் 'ஊழிக்காலம்’ நாவல், ஈழத்தில் நடந்த இறுதிப் போரின் துயரங்களை 'கண் முன் சாட்சி’யாகப் பதிவு செய்திருக்கிறது. இவர், விடுதலைப் புலிகளின் மூத்த பெண் போராளி. ஈழத்தில், இவரை 'தமிழ்க் கவி அக்கா’ என்று அழைத்தார்கள்.

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள சுகாதார நிலையத்தில் மருத்துவத் தாதியாகவும், புலிகளின் குரல் வானொலி மற்றும் தமிழ்த் தேசிய தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் பணி செய்தவர் தமிழ்க் கவி. பேட்டிக்கான வடிவமாக இல்லாமல் நினைவின்போக்கில் பேசினார்.

முள்ளிவாய்க்காலிலேயே முடிந்துபோக வேண்டிய வாழ்வு, நகர்ந்து வந்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. மாவிலாறில் தொடங்கி வட்டுவாகலில் முடிந்த பேரழிவுப் போரின் சாட்சி நான். எங்கள் பயணம், நாங்கள் கைவிட்ட நம்பிக்கைகள், மரணங்கள், கனவுகள், இழப்புகள்... என ஈழத் தமிழ் சமூகம் எப்படி இறுதிப் போரை எதிர்கொண்டது என்று நாவலில் எழுதியிருக்கிறேன். நாவலில் வரும் அந்தப் 'பார்வதி’ நான்தான்.

நான் பிறந்து வளர்ந்தது வவுனியாவில். கதை, கவிதை, நாடகங்கள் எழுதுவேன் என்பதால், புலிகள் என்னை நாடகம் போடச் சொல்வார்கள். நானும் கிராமங்களில் தமிழ்த் தேசியத்தை வலியுறுத்தி நாடகங்களை நடத்தினேன். என் கடைசி மகன் சிவகாந்தன், புலிகள் அமைப்பில் தன்னை விரும்பி இணைத்துக்கொண்டான். இயக்கம் அவனுக்கு 'சித்திரன்’ என்று பெயர் வைத்தது.

91-ம் ஆண்டு நடந்த ஆனையிறவுச் சமரில் அவன் வீரச்சாவை அடைந்தான். தம்பி, வீரச் சாவடைந்ததும் அவனது அண்ணனும் 'அமைப்புக்குச் செல்கிறேன்’ என்று சொன்னபோது, நான் தடுக்கவில்லை. அவன் புலிகள் இயக்கத்தில் பயிற்சி பெற்றுக்கொண்டிருக்கும் போதே, விமானத் தாக்குதலில் இறந்தான். என் இரு பிள்ளைகளின் உடல்களையும் நான் காணவில்லை.

குடும்பத்தைக் காப்பாற்றிக்கொள்ள வன்னிக்குச் சென்று நானே விரும்பி புலிகள் அமைப்பில் இணைந்து, ஒட்டுமொத்தமாக என் குடும்பத்தையே ஈழப் போராட்டத்துக்குக் கொடுத்தேன். காரணம், புலிகளின் கண்ணியம், நேர்மை, அர்ப்பணிப்பு. இரு மகன்களை இழந்த பின்னரும் அமைப்பின் மீதும், போராட்டத்தின் மீதும் நான் காட்டிய ஆர்வத்தைக் கண்ட தலைவர் பிரபாகரன், நேரடியாகவே என்னை அழைத்து ஊடகப் பணிகளை வழங்கி ஊக்குவித்தார்.

வாழ்க்கை எப்போதுமே எங்களுக்கு வசந்தமாக இருக்கவில்லை. ஒரு தீப்பெட்டி 10 ரூபாய், மண்ணெண்ணெய் 150 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை, பெட்ரோல் ஒரு லிட்டர் 1,500 ரூபாய். 10 தீப்பெட்டிகளின் மருந்தை எடுத்தால் ஒரு நாட்டு வெடிகுண்டைத் தயாரிக்க முடியும் என்பதால், ஏராளமான தீப்பெட்டிகள் கடத்தலில் வரும். மற்றபடி போர்க்காலமாக இருந்தாலும் சமாதானக் காலமாக இருந்தாலும், மின்சாரம், மருத்துவப் பொருள்கள் என எதுவுமே மக்களுக்கு இருந்தது இல்லை. அவர்களுக்குத் தெரிந்தது எல்லாம் விறகுக் கட்டைகளும், 'டிரெஞ்ச்’ எனப்படும் பதுங்குகுழிகளும்தான். இப்படித்தான் 2008-ம் ஆண்டு வரை வாழ்க்கை ஓடியது.

ஆனால், அப்போதெல்லாம் 'நாங்கள் விழ மாட்டோம்’ என்ற நம்பிக்கை இருந்தது. இலங்கை இராணுவம் பல வருடம் போராடிப் பிடித்த இடங்களைக் கூட, எங்கள் பொடியள் சில நாள் சண்டையில் மீட்டிருக்கிறோம் எனும்போது அந்த நம்பிக்கை இயல்புதானே! மீண்டும் இந்த நகரத்துக்குத் திரும்புவோம் என்ற நம்பிக்கையில்தான், தங்கள் வீடுகளின் கதவு ஜன்னல்களைக்கூட மக்கள் கழற்றிக்கொண்டு போனார்கள். ஆனால், 2008-க்குப் பிறகு நிலைமை தலைகீழ்!

மாவிலாறில் தொடங்கிய போர், சுமார் ஒரு வருடத்துக்கு மேலாக நடந்து முள்ளிவாய்க்காலில் முடியும் வரை எங்குமே புலிகளை இராணுவமும் பார்க்கவில்லை, இராணுவத்தைப் புலிகளும் பார்க்கவில்லை. அந்தப் போர் முறையே புதிதாக இருந்தது. நான்கைந்து மைல்களுக்கு அப்பால் இருந்து எறிகணை களை வீசி நிர்மூலமாக்கித் துடைத்து அழித்துவிட்டுத் தான் இராணுவம் வரும்.

கிளிநொச்சி இராணுவத்திடம் விழுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே, மக்கள் கிளிநொச்சியைக் காலி செய்துவிட்டு வட்டக்கச்சி, தருமபுரம் விசுவமடு நோக்கி நகர்ந்து விட்டார்கள். மக்கள் இல்லாத கிளிநொச்சியை இராணுவம் கைப்பற்றியது. பல திசைகளில் இருந்தும் வந்த மக்கள் அக்கராயன் சந்தியில் கூடியபோது சுமார் மூன்று லட்சம் மக்கள் மிகச் செறிவாக இருந்தனர்.

தேவிபுரத்தில் இருந்தபோது வீசப்படுகிற ஒவ்வொரு ஷெல்லும் பழுதில்லாமல் யாரோ ஒருவரைப் பதம் பார்த்தது. மக்கள் நம்பிக்கையோடு கொண்டுவந்த வீட்டுக் கதவுகளையும் ஜன்னல்களையும் முதலில் கைவிட்டார்கள். அது, திரும்பி வருவோம் என்ற நம்பிக்கையையும், கனவையும், ஆசைகளையும் கைவிடுவதாக இருந்தது.

பதுங்குகுழி பங்கர்களை, மூன்று அடிக்கு மேல் ஆழமாகத் தோண்ட முடியாது. கீழே தண்ணீர் வரும். தோண்டிய பங்கருக்குள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது, என் எதிர் பங்கருக்குள் அமர்ந்து பிள்ளைக்குப் பால் கொடுத்தபடியே பேசிக்கொண்டிருந்த ஓர் இளம் தாய் அப்படியே சாய்ந்தாள். இடுப்புக்குக் கீழே அவளுக்கு எதுவுமே இல்லை.

முலைக்காம்பில் வாய் வைத்தபடியே சிதறி விழுந்தது குழந்தை. பொக்கணை எனும் குறுகலான இடத்தில் நிலைமை இன்னும் மோசம். வாழ்ந்த இடம் மயானமாக மாறியது என்று சொல்வதா? அல்லது மயானத்தில் வாழ்ந்தோம் என்று சொல்வதா? அங்கேயே பல நாட்களைக் கழித்தோம்!'' - சின்ன இடைவெளி கொடுத்துத் தொடர்கிறார் தமிழ்க் கவி.

கரையான் முள்ளிவாய்க்காலில் யுத்த முனையில் பொட்டம்மானின் மகன் கயல்கண்ணன் இருந்தார். ஒரு பங்கருக்குள் இருந்தபோது ஷெல் தாக்குதலில் அப்படியே இறந்துபோனார். இறந்துபோன பிணங்களைக்கூட யாரும் எடுத்து அடக்கம் செய்யவில்லை. மகளின் பிணத்தை தாய் கடந்து செல்கிறாள். தாயின் பிணத்தை மகள் கடந்து செல்கிறாள்.

பொட்டம்மான் மகன் அங்கு இறந்த பிறகு அவரின் குடும்பத்தை நான் காணவில்லை. ஆனால், தலைவர் பிரபாகரன், தளபதி சூசை போன்றோர் எங்கும் தப்பிச் செல்ல முயலவில்லை. அவர்கள் இறுதி வரை மக்களோடு மக்களாகவே இருந்தனர்.

ஒருநாள் பிரபாகரன் முக்கியமான தளபதிகளை அழைத்து, 'நம்பிக்கையோடு இருப்போம். சர்வதேசமும் சேர்ந்து நம்மை நசுக்குகிறது. நீங்கள் நம்பிக்கையோடு இருங்கள். மக்களுக்கு நம்பிக்கையை விதையுங்கள். அவநம்பிக்கை ஏற்படும் வகையில், மக்களிடம் எதுவும் சொல்ல வேண்டாம்’ என்று கேட்டுக்கொண்டார்!

இறுதிக் கணம் வரை புலிகளிடம் மிகப் பெரிய ஆள் பலம் இருந்தது. ஆனால், போராட ஆயுதங்கள் இல்லை. கடற்புலிகள் பலம் இழந்தார்கள். புலிகளின் மோட்டார் படையணி முற்றிலும் அழிந்து போனது. குவித்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் இராணுவத்தின் வான்வழிப் போருக்கு முன் எடுபடாமல் போயின. அந்த ஆயுதக்கிடங்குகளை வெடி வைத்துத் தகர்த்து, அதனுள் இருந்து உயிரை மாய்த்துக்கொண்ட போராளிக் குடும்பங்கள் உண்டு.

ஆயுதங்களை மௌனமாக்க வேண்டிய அவசியமே புலிகளுக்கு இல்லை. அவை, பல நாட்களுக்கு முன்பே மௌனமாகிவிட்டன. அவர்களுக்கு வந்து சேரவேண்டிய ஆயுதங்களும் வரவில்லை. ஒருகட்டத்தில் தன் வலுவை இழந்த புலிகள், மக்களை அவர்களின் விருப்பங்களுக்கே விட்டனர். மக்களுக்கு என்ன விருப்பம் இருக்க முடியும்? சரணடையலாம்... இல்லாவிட்டால், மெதுவாக நடந்து போகலாம். எங்கு போவது வீட்டுக்கா? என்ன செய்வது... தலைகுனிந்தபடியே கூட்டம் கூட்டமாக நடந்தோம்.

நான் ஓமந்தை இராணுவச் சாவடியில் பிடிபட்டேன். என்னுடன் ஏராளமான மக்களும் இருந்தார்கள். முதலில் ஒரு முகாமுக்குக் கொண்டு சென்றார்கள். 22 நாட்களுக்குப் பிறகு இன்னொரு முகாமுக்குக் கொண்டு சென்றார்கள். அங்கிருந்து பலரும் பிரிக்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார்கள். பின்னர் அவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை.

நானும் பல பெண் போராளிகளும் விடுவிக்கப்பட்டோம். எங்களை தமிழ்ச் சமூகம் கண்டுகொள்ளவில்லை. புனர்வாழ்வு என்று சொன்ன அரசும் கண்டு கொள்ளவில்லை. எங்களைக்கொண்டே எங்கள் மக்களுக்கு எதிரானப் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.

இதுதான் நிலை. இப்போது நாங்கள் மீனுக்குத் தலையையும் பாம்புக்கு வாலையும் காட்டி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இப்படித்தானே வாழ முடியும்?

www.eelavenkai.blogspot.com

21 March 2007

மணலாற்று ஆக்கிரமிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள விடுதலைப் புலிகள் தயார்

சு.ப.தமிழ்ச்செல்வன்

திங்கட்கிழமை, 5 மார்ச் 2007, 15:10 ஈழம்] [புதினம் நிருபர்]

தமிழர் தாயகத்தில் மணலாற்றுப் பகுதியில் ஆக்கிரமிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள சிறிலங்காப் படையினர் முழுமையான தயார்படுத்தலை மேற்கொண்டுள்ள நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அதனை எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.


தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனுக்கும் இலங்கைக்கான நோர்வேயின் தூதுவர் ஹான்ஸ் பிறட்ஸ்கருக்கும் இடையிலான சந்திப்பு இன்று திங்கட்கிழமை 11.30 மணிமுதல் 1.30 மணிவரை கிளிநொச்சியில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை நடுவப் பணியகத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பு முடிவுற்ற பின்னர் சு.ப.தமிழ்ச்செல்வன் ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய நேர்காணல்:

கேள்வி: இன்றைய சந்திப்பு தொடர்பாக?

பதில்: தற்போதைய நிலைமைகள் தொடர்பாக இன்று கலந்துரையாடினோம். முக்கியமாக போர் நிறுத்த உடன்பாட்டை சீர்குலைத்து சிறிலங்காப் படைகள் எமது தாயகத்தின் மீது கட்டவிழ்த்து விட்டுள்ள வன்முறைகள், ஆக்கிரமிப்பு முயற்சிகள், படுகொலைகள், ஆட்கடத்தல்கள், குண்டுவீச்சுக்கள், மனித உரிமை மீறல்கள் பற்றி சந்திப்பில் விரிவாக விளக்கினோம்.

இந்த விடயங்களில் அனைத்துலக சமூகம் வன்முறைகளை நிறுத்தி அமைதி முயற்சிகளை முன்னெடுக்கும் படி கோரி வரும் நிலையில் சிறிலங்கா அரசாங்கத்தின் யுத்த வெறிப் போக்கும், மனிதப் படுகொலைகள் தொடர்பாகவும் அனைத்துலக சமூகம் ஒரு மென்மையான போக்கை கடைப்பிடிக்கின்ற நிலைப்பாடு எதிர்காலத்தில் அமைதி முயற்சிகளை முன்னெடுக்கின்ற சாத்தியப் பாடுகளை சீர்குலைக்கும் என்ற ஆபத்தான சூழலையும் சந்திப்பில் சுட்டிக்காட்டினோம்.

அனைத்துலக சமூகம் தற்போது கடைப்பிடித்து வரும் அணுகுமுறை சிறிலங்கா அரசாங்கத்தை ஒரு வழிக்கு கொண்டு வரப்போவதில்லை. இது இலங்கைத் தீவை இரத்தக் களரி நிலைக்குத் தான் கொண்டு வரப்போகின்றது. யுத்த நிறுத்த உடன்பாட்டை சீர்குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

அண்மையில் பல நாட்டுத் தூதுவர்கள் அடங்கிய குழுவை மட்டக்களப்புக்கு அழைத்து வந்தபோது ஏற்பட்ட அனர்த்தம் தொடர்பாக எமது கவலையையும் எமது நிலைப்பாட்டையும் தெளிவிபடுத்தியிருந்தோம்.

சிறிலங்கா அரசாங்கத்தினாலும் அதன் படைத்தரப்பினாலும் திட்டமிட்டு செயற்படுத்தப்பட்ட நடவடிக்கையாக உள்ளது என்பதை சுட்டிக்காட்டினோம். எமது விசாரணைக் குழுவின் அறிக்கையின் படி சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்ட ரீதியில் வெளிநாட்டு இராஐதந்திரிகளை ஆபத்தான சூழ்நிலைக்கு சிக்கவைத்து பேரழிவை ஏற்படுத்தி அனைத்துலக மட்டத்தில் தமிழர்களுடைய போராட்ட முன்னெடுப்புக்கள் தொடர்பாகவும் விடுதலைப் புலிகள் தொடர்பாகவும் அபகீர்தியை ஏற்படுத்தும் வகையில் ஒரு திட்டமிட்ட ரீதியில் சிறிலங்கா படைத் தரப்பினரால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான விடயங்களை இன்றைய சந்திப்பில் ஆதாரங்களுடன் விளக்கினோம். தூதுவர்கள் மட்டக்களப்புக்கு பயணம் செய்வது தொடர்பான செய்தியை மனிதாபிமான அமைப்புக்கள் ஊடாகவோ ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புக்களின் ஊடாகவோ எமக்கு எந்த தகவல்களையும் தரவில்லை. தகவல்களை எமக்கு தெரியப்படுத்தாமல் தூதுவர்கள் வந்து இறங்கும் இடத்திலிருந்து தொடர்ச்சியாக காலையில் தாக்குதலை நடத்திவிட்டு பின்னர் தூதுவர்களை அவ்விடத்தில் வானூர்திகள் மூலம் தரையிறக்குவது என்பது பொருத்தமற்ற விடயம். தூதுவர்களை ஆபத்தான சூழலுக்குள் கொண்டு செல்வதாகும். அது ஒரு சதி நடவடிக்கை என்பதையும் சந்திப்பில் விளக்கினோம்.

கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக எங்களுடைய தாயகப் பிரதேசங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறவில்லை. மனிதாபிமான பணியாளர்கள் வெளிநாட்டு இராஐதந்திரிகள், ஊடகவியலாளர்கள் எமது பகுதிக்கு வந்து செல்வதுடன் பணியாற்றுகின்றனர். மட்டக்களப்புச் சம்பவம் சிறிலங்கா படைத்தரப்பினரால் திட்டமிட்ட சதியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை நோர்வேத் தூதுவர் ஆகிய தாங்கள் ஏனைய வெளிநாட்டு தூதுவர்களுக்கு விளக்கும் படி வேண்டியிருக்கின்றோம்.

முக்கியமாக எமது தாயகப் பகுதிகளை கூடுதலாக ஆக்கிரமிக்க சிறிலங்கா அரசாங்கம் முயன்று கொண்டிருக்கின்றது. தென் தமிழீழத்தில் சம்பூர், வாகரை போன்ற பகுதிகளை ஆக்கிரமித்துக்கொண்டு தென் தமிழீழத்தில் பாரியளவில் படை நடவடிக்கைகளில் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றது. அதே போன்று மணலாறு பகுதியை ஆக்கிரமிப்பதற்கும் முல்லைத்தீவு மீது பாரியளவிலான படை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஆயத்தப் பணிகளில் சிறிலங்காப் படைத்தரப்பு ஈடுபட்டுள்ளது.

மணலாற்றுப் பகுதியில் பாரியளவில் படைகளை குவித்து ஆயுத தளபாடங்களை நகர்த்தி பாரியதொரு படை நடவடிக்கைக்கு சிறிலங்கா படை தயாராகி வருகின்றது என்பதை நோர்வே தூதுவருக்கு இன்று சுட்டிக்காட்டியுள்ளோம்.

சிறிலங்கா அரசாங்கம் ஒரு போதும் தனது இராணுவ முன்னெடுப்புக்களை கைவிடுவதாகவோ, அல்லது நிறுத்துவதாகவோ இல்லை. போர் நிறுத்த உடன்பாட்டை சிறிலங்கா அரசாங்கம் ஒருபோதும் மதிக்கப்போவதில்லை. அனைத்துலக சமூகத்தின் கரிசனைகளை சிறிலங்கா அரசாங்கம் மதித்து நடக்கும் நிலையில் இல்லை. சிறிலங்கா அரசாங்கம் முழுமையாகவே யுத்த வெறிப்போக்கொடு பாரியளவில் தமிழ் மக்களுக்கு அழிவுகளை ஏற்படுத்தும் வகையில் தான் செயற்பாடுகளில் இறங்கியிருக்கின்றார்கள்.

இவற்றுக்கு உதாரணமாக கிழக்கில் இடம்பெற்ற சம்பவங்களும் முல்லைத்தீவு, மணலாறு பகுதிகளை ஆக்கிரமிக்க பாரியளவில் சிறிலங்காப் படைகள் தயாராகிக்கொண்டிருப்பதை சுட்டிக்காட்டினோம். மணலாற்றில் இருக்கின்ற எமது படையணிகள் சிறிலங்காப் படைகள் குவிக்கப்படுவதை உறுதிப்படுத்தியுள்ளார்கள். எமது உளவுத் தகவல்களின் அடிப்படையில் மணலாற்றில் சிறிலங்கா படைகள் ஆயுத தளபாடங்களை குவித்துள்ளார்கள் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

சிறிலங்காப் படைகளின் முயற்சிகளை முறியடிப்பதற்கு எமது படையணிகளும் தயராகிக்கொண்டிருக்கின்றது. இது ஒரு பாரியளவிலான யுத்தமாக வெடிக்கும் என்பதை சுட்டிக்காட்டினோம். சிறிலங்காப் படைகளின் இப்படியான முயற்சிகள் மகிந்த ராஐபக்ச அரசின் இலங்கைத் தீவையே முழு யுத்த களத்திற்கு கொண்டு செல்லுகின்ற நிலையினை உருவாக்கும் என்பதை சுட்டிக்காட்டி எமது கண்டனத்தையும் தெரிவித்தோம்.

இந்த நிலையில் அனைத்துலக சமூகம் மென்மையான போக்கை கடைப்பிடிப்பது சிறிலங்கா அரசாங்கத்திற்கு தூண்டுதலாக அமைகின்றது. தொடர்ந்தும் விடுதலைப் புலிகள் பொறுமை காக்கின்ற நிலைமை ஏற்படாது. அனைத்து யுத்திகளையும் தந்திரோபாயங்களையும் பயன்படுத்தி கடந்த காலங்கள் போல பரந்த அளவில் தீவிரப்படுதும் நிலைக்கு தள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்றோம்.

அனைத்துலக சமூகம் தமிழீழ விடுதலைப் புலிகளை கண்டிப்பது, ஒருதலைப்பட்சமாக குற்றம் சுமத்துவதை தவிர்க்க வேண்டும். சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்களையும் பார்த்துவிட்டு எமது நடவடிக்கைகள் தீவிரம் அடையும் போது கண்டனம் தெரிவிப்பதில் அர்த்தம் இல்லை என்பதை அனைத்துலக சமூகத்திற்கு தெளிவாக்கும் படி நோர்வே தூதுவரிடம் கோரியிருக்கின்றோம்.

கேள்வி: இணைத் தலைமைகள் நாடுகளிடமிருந்து ஏதாவது செய்திகள் எடுத்து வரப்பட்டதா?

பதில்: இணைத் தலைமை நாடுகளின் செய்திகள் என்று எதுவும் எடுத்து வரப்படவில்லை. அனைத்துலக சமூகத்தின் கரிசனையாக வன்முறைகள் நிறுத்தப்பட்டு சமரச முயற்சிகள் மீண்டும் தொடக்கப்பட வேண்டும் என்பது அனைத்துலக சமூகத்தின் விரும்பமாகும்.

நாம் அனைத்துலக சமூகத்திடம் முன்வைத்த நிலைப்பாடு எந்த அடிப்படையில் இதனை முன்னெடுப்பது என்பதாகும். யுத்த நிறுத்த உடன்படிக்கை என்பது பல தசாப்தங்களாக இடம்பெற்ற உக்கிர சமருக்கு ஒரு சிறிய இடைவெளியாவது கொடுத்து அதற்கான பாதையை திறந்து விட்டது.

போர் நிறுத்த உடன்பாட்டை சிறிலங்கா அரசாங்கம் தூக்கியெறிந்து, சிறிலங்கா அரசாங்கம் கூட ஏன் மகிந்த ராஐபக்ச கூட போர் நிறுத்த உடன்பாட்டை விமர்சித்து இருக்கின்றார். அரச மட்ட அமைச்சர்கள் கூட போர் நிறுத்த உடன்பாட்டை விமர்சித்து உதாசீனப்படுத்தியிருக்கின்றார்கள். நடைமுறையில் சிறிலங்கா அரசாங்கம் போர் நிறுத்த உடன்பாட்டை மீறிவரும் நிலையில் வன்முறைகளை நிறுத்தி பேச்சுக்களை முன்னெடுப்பது என்பது பற்றி கேள்வி எழுப்பினோம்.

அனைத்துலக சமூகம் எதனையும் கொண்டு வரும் நிலையில் இல்லை. சிறிலங்கா அரசாங்கம் அனைத்துலக அளவில் மனிதாபிமான அமைப்புக்கள், மனித உரிமை அமைப்புக்கள் என குற்றம் சுமத்தப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

மனிதப் பேரவலம் இலங்கைத் தீவில் அதிகரித்துள்ளது. உலக நாடுகளில் மிக மோசமாக மனித உரிமை மீறும் நாடாக பட்டியல் வகிக்கும் நாடுகளில் சிறிலங்கா முதன்மையான இடத்தை பிடித்துள்ளது. இது அனைத்துலக அளவில் ஏற்பட்டுள்ள நிலையில் அனைத்துலக நாடுகள் இராணுவ பொருளாதார உதவிகளை அனைத்துலக சமூகம் நிறுத்தி சிறிலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவில்லை என்பது எமது மக்களுக்கு கவலை ஏற்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டினோம்.

கேள்வி: அணுசரணைப் பணியில் ஈடுபட்டுபட்டிருக்கின்ற நோர்வேத் தரப்பு இதுவரை சிறிலங்காப் படைகளின் ஆக்கிரமிப்பு அத்துமீறல்கள் தொடர்பாக அதனை நிறுத்துவதற்கான அழுத்தத்தை சிறிலங்கா அரசிற்கு கொடுக்கவில்லை ஏன்?

பதில்: இது தொடர்பான கவலையையும் நாங்கள் தெரிவித்திருக்கின்றோம். நோர்வே அணுசரணையாளர்களும் அனைத்துலக சமூகமும் சிறிலங்கா அரசாங்கத்தின் வலிந்த தாக்குதல்களை படை நடவடிக்கைளை பாரிய மனித உரிமை மீறல்களை தடுக்கவில்லை ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கவிலை என்பதை நாங்கள் இன்று சுட்டிக்காட்டினோம். அது தொடர்பான கவலையையும் தெரிவித்திருக்கின்றோம்.

Quelle - Puthinam