23 September 2009

இறுதிப் போரை நேரில் கண்ட சிவரூபன்

இறுதி போரை நேரில் கண்ட சிவரூபன்: மே-17 வரை நந்திக்கடலருகே நின்ற இவர், இலங்கை இராணுவத்தினரின் இன அழிப்பு கொடூரத்தை விபரிக்கிறார்

இன அழித்தல் நடந்த இறுதி நாட்களின் கொடூரத்தை நான் இங்கு எழுதுவதுகூட உங்களின் கழிவிரக்கம் கேட்டல்ல. என்றேனும் ஒருநாள் எமது மக்களுக்கான உரிமைகளை நீங்கள் பெற்றுத் தருவீர்களென்ற நம்பிக்கையில்தான் நான் எழுதுகிறேன். இவ்வாறு முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிக்கட்ட போரில் நந்திக்கடல் அருகில் இடம்பெற்ற இலங்கை இராணுவத்தின் தமிழ் இன அழிப்பை நேரில் கண்ட சாட்சியாக இங்கு விபரிக்கின்றார்.

இதோ சிவரூபன் பேசுகிறார்:

”ஐ.நா.சபையே, வல்லரசுகளே, உலகின் தலைவர்களே, ஊடகத்துறையினரே, எமது போராட்டத்தின் எதிர்கால நம்பிக்கையாகவும் உயிராகவும் இருக்கிற தமிழ்நாட்டு உறவுகளே!

நான் எழுத்தாளனோ, சிந்தனையாளனோ அல்ல. போராட்ட இயக்கமும் வாழ்வும் கற்றுத் தந்தவற்றைத் தவிர வேறெங்கும்போய் பெரிய படிப்பு படித்தவனுமல்ல. கண்ணெதிரே கண்ட கொடூரமான தமிழ் இன அழித்தலின் சில காட்சிகளை எழுத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன். எம் இன மக்களின் கொடூர அழிவைக் கண்டும் மௌனமாயிருந்த சர்வதேச சமூகத்தின் மீதான அவநம்பிக்கையும் நான் எழுதுவதற்கு முக்கிய காரணம்.

பசியின் வலியும், பிழிந்த தாகமும், பிரிவின் தவிப்பும், வெடிகுண்டுகளின் வெக்கையும், படு கொலைகளின் கொடூரமும், சகலமும் முடிந்துபோகிற தருணத்தின் திகிலுமாய் நாங்கள் வெள்ளாம் முள்ளிவாய்க்கால் பரப்பில் நின்றிருந்த அக்கடைசி நாட்களில் இரண்டு நம்பிக்கைகளை கடைசிவரை கொண்டிருந்தோம். “தாய் தமிழ்நாட்டு உறவுகள் எம்மை கைவிட மாட்டார்கள், அமெரிக்கா எப்படி யாவது எமது உதவிக்கு வரும்’ அந்த நாட்களின் வலியை எம்மால் வார்த்தைகளில் வருணிக்க முடியாது. அங்கு நின்று அனுபவிக்காதவர்களால் அதனை புரிந்துகொள்ளவும் முடியாது.

இதனைக்கூட நான் ஒரே ஒரு மன்றாட்டத்துடன் தான் எழுதுகிறேன். சர்வதேசமே! உயிரான தமிழ்நாட்டு உறவுகளே! இறக்கைகள் வெட்டப்பட்டு, கம்பிவேலிகளுக் குள் அடைக்கப்பட்டு, பாலைவனத்தில் வெந்து துடிக்கும் மண்புழுக்கள்போல், தமிழர்களாய் பிறந்ததைத் தவிர வேறெந்த குற்றமோ பாவமோ செய்யாத, உடல் சோர்ந்து, உளம் நலிந்து, உணர்வு செத்து, நா வறண்டு, இதய நாடிகள் ஒடுங்கி, வார்த்தைகள் முடிந்துபோய் வாடிக் கொண்டிருக்கும் எம் உறவுகளை எப்படியாவது காப்பாற் றுங்கள். சுதந்திர வேட்கைக்கெல்லாம் அப்பால் இம்மக்களுக்காய் இன்று நாங்கள் வேண்டுவது பெரிதாக எதுவுமில்லை. உணவு, குடிநீர், அச்சமின்றிக் கண்ணுறங்க தமது குடிசை, மணியோசை கேட்க எமது சிறு கோயில்கள். இப்போதைக்கு இவ்வளவும் போதும்.

இன அழித்தல் நடந்த இறுதி நாட்களின் கொடூ ரத்தை நான் இங்கு எழுதுவதுகூட உங்களின் கழிவிரக் கம் கேட்டல்ல. என்றேனும் ஒருநாள் எமது மக்களுக்கான உரிமைகளை நீங்கள் பெற்றுத் தருவீர்களென்ற நம்பிக்கையில்தான் நான் எழுதுகிறேன்.

அன்று வைகாசி 16. நள்ளிரவு கடந்திருந்தது. வழமையை விட இருள் கனத்திருந்தது போன்ற உணர்வு. ஏதோ நடக்கப்போகிற தென்ற திகில் எங்கும் சூழ்ந்திருந் தது. அதிகாலை 3 மணி இருக்க லாம். தொடங்கிற்று ஊழித்தாண்டவம். முள்ளிவாய்க் காலில் இருந்து முல்லைவட்டுவாகல் நோக்கி முன்னூறு மீட்டர் நீளத்திலும் வட ஆழ்கடலில் இருந்து நந்திக்கடல் திசையாக ஐநூறு மீட்டர் அகலத்திலுள்ளுமாய் ராணுவ வேலிக்குள் அடைக்கப்பட்டிருந்த மூன்று லட்சத்திற்கும் மேலான மக்களைச் சுற்றி ராஜபக்சேவின் பிணம்தின்னிப் பேய்கள் பேரவலத்தின் இறுதிப் போரை தொடங்கின.

வைகாசி-17 அதிகாலை. கோடி சிங்கங்கள் சேர்ந்து கர்ஜித்தால் எழும் ஓங்கார ஓசையுடன் ராட்சஸ கொடுங்கோலன் ராஜபக்சேவின் ஏவலில், தமிழ்ப் பிணம் தின்னும் கழுகு பொன்சேகா வழிநடத்த, “தமிழரை அழித்து தீர்த்த பின்னரே அடுத்த வேலை’ என நின்ற கோத்தபய்யா பின்நிற்க, மூன்றாம் உலக யுத்தம்போல் மூன்று லட்சம் மக்கள் மீதான தாக்குதல் தொடங்கியது. புயலடித்தால் தாவ முடியாமல் தவிக்கும் காட்டு மந்திகள் போல் எம்மக்கள் அங்குமிங்கும் ஓடினார்கள். சிங்களக் கொலைவெறிப் படைகளுக்கு பிரபாகரனின் படைகள் தக்க பதில் தந்திருக்க முடியும். ஆனால் முடியாது போயிற்று. ஏன் தெரியுமா…?

“”இனப்படுகொலையை அரங்கேற்ற இந்தியா ராணுவ உதவிகள், இந்திரா ரடார், செயற்கைக்கோள் செய்மதி உதவியெல்லாம் செய்து கொடுத்தது. சீனா ராக்கெட்டுகளும், ரசாயன ஆயுதங்களும் அள்ளிக் கொடுத்தது. ரஷ்யா டாங்குகள் மட்டுமல்ல பீரங்கிகளுடன் கவச வாகனங்களும் கொடுத்து, தானே நேரில் வந்து கள ஆலோசனைகள் தரவும் தயாராய் இருந்ததாம். பக்கதுணையாய் ஏவுகணைகளும் பலகோடி பெறுமதியுடைய ஆயுதங்களும் தந்தது பாகிஸ்தான். உலகின் அத்தனை பெரிய நாடுகளின் ராணுவ வளங்களும் சுற்றி நிற்க தமிழருக்கென தலைவன் உருவாக்கிய படைகள் தனித்து நின்று எந்தளவுக்குத்தான் தாக்குப் பிடிக்க முடியும்?

இப்படித்தான் மே-17 இறுதி யுத்தம் நடந்தது. நடப்பது கனவா, கற்பனையா என்று புரியாமல் நின்றோம். நாற்திசையிலிருந்தும் எறிகணைகள். எங்கெங்கிருந்தோ ரசாயன எறிகுண்டுகள். இடைவெளியில்லா துப்பாக்கி வேட்டுகள். சற்றே நிமிடம் ஷெல் மழை ஓய்ந்ததும் பதுங்கிப் பதுங்கி பங்கரில் இருந்து வெளியே வந்து பார்த்தேன். அவலத்தின் பெருங்கொடுமை கண்ணெதிரில் முள்ளிவாய்க்கால் பரப்பெங்கும் விரிந்து கிடந்தது.

பதுங்கு குழிக்குள் ஓடி ஒளியுமுன் நான் பார்த் திருந்த தமிழ் உறவுகள் சதைத் துண்டுகளாகிக் கிடந்தன. ஆண், பெண், பெரியோர், குழந்தைகள் வேறுபாடு எதுவும் தெரிய வில்லை. தலை வேறு, கால் வேறு, உடல் வேறாக பிணக் காடாய் கிடந்தது. சற்று தூரத்தில் தலைவிரிகோல மாய் தாய் ஒருவர் தலையற்ற உடல் ஒன்றை மடியில் கிடத்தி அழுது கதறிக்கொண்டிருந்தார். “”கடவுளே… ஏன் எங்களுக்கு இந்த அவலம்? என்ட ராசாவின்டெ முகத்தைக் கூட பார்க்க முடியலியே. பாவி ராஜபக்சவே… வா… என்னையும் கொன்றுபோடு” என்று அழுது புலம்பிக்கொண்டிருந்தாள். திடீரென எங்கிருந்தோ வந்த துப்பாக்கி ரவையொன்று அவளின் தலையை சிதைத்துச் சென்றது. குரலின்றி தரை சாய்ந்தாள் அந்தத் தாய். முகம் கவிழ்ந்து ஈழ மண்ணை முத்தமிட்டபடியே பிணமானாள்.

பக்கத்து பங்கருக்குள்ளிருந்து தம்பி… என்று சன்னமாய் குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். மார்பில், வயிற்றில், காலில் குண்டு காயங்களோடு ரத்தம் வழிந்த நிலையில் முதியவர் ஒருவர் “ஆரேனும் என்னெ காப்பாற் றுங்களேன்…’ என்று இயலாமை யின் வலியோடு குரல் கொடுத் தார். அருகில் நான் செல்லுமுன் அவரும் விழிகள் மூட தரையில் விழுந்தார். கண்களுக்கு எட்டிய தூரம்வரை எங்கு நோக்கிலும் பிணங்கள்… மனிதச் சதையின் சிதறல்கள்.

வேதனையின் கனம் என்னை அழுத்தியது. என்னையும் அறியாமல் ஏதேதோ புலம்பினேன். ஐயா ஒபாமா அவர்களே… உங்களைத்தானே ஐயா நாங்கள் கடைசியாக நம்பியிருந்தோம். ஒடுக்கப்பட்ட இனத்தில் இருந்து எழுந்து வந்தவர் நீங்கள். எனவே எம் இனத்தைக் காப்பாற்ற கட்டாயம் இறுதியில் கை கொடுப்பீர்கள் என்று நம்பி வான்பரப்பில் வந்து போன அத்தனை விமானங்களையும் அண்ணாந்து உயிர் தவிப்புடன் பார்த்திருந்தோமே… கைவிட்டு விட்டீர்களே ஐயா… என்றெல்லாம் புலம்பினேன்.

எழுந்து நடக்க எத்தனித்தேன். மீண்டும் ரவைகள் கூவிப் பாய்ந்து வந்தன. வேகமாக நடக்க முடியவில்லை. சிதறிய உடல் களின் மீது என் கால்கள் பட்டுவிடக்கூடாதென்ற பக்தி யுடன் நகர்ந்தேன். அந்தளவுக்கு எங்கும் பிணக்குவியலாய் கிடந்தன. ஒவ்வொரு பிணமாகக் கடந்து எனது மனைவி, பிள்ளை கள் இருந்த பதுங்கு குழிநோக்கி நகர்ந்தேன். இன்னொருதாயின் துயரம் என்னை முன்செல்ல விடாது தடுத்தது.

அவருக்கு 30 வயதிருக்கும். சுமார் ஆறு மாத கைக்குழந்தை. ஷெல் அடிபட்டு இறந்திருந்தது. பிஞ்சுக் குழந்தையை மார்போடு இறுக அணைத்துக்கொண்டு “”பாவி ராஜபக்சே… புருஷனையும் தின்டான், என்ட பச்ச புள்ளையெயும் தின்டான்… பசி தீர்ந்ததாடா பாவி…” என்று புலம்பியபடி இறந்த குழந்தையை முத்தமிட்டு முத்தமிட்டுக் கண்ணீரால் நனைத்தாள். அவளுக்கு ஆறுதல் சொல்ல அங்கு எவரும் இருக்கவில்லை. அவளது கூக்குரலையும் எவரும் கேட்கவில்லை. குழந்தையை முத்தமிட்டுக் கொண்டே முன் போனவள் திடீரென பின்னோக்கிப் பார்த்தாள். அவளது முகம் சந்திரமுகிபோல் மாறியது. வெடித்து சிரித்தவண்ணம் தன் பிள்ளையோடு ஏதேதோ பேசத்தொடங்கினாள். நிமிடங்களுக்கு முன் தாயாக இருந்தவள் மனநோயாளியாகி நின்றாள்.

“”என் மனைவி, பிள்ளை, தாய்-தகப்பன் நினைவுகள் நெஞ்சைப் பிழிந்தது. அவர்கள் மறைந்திருந்த பதுங்குக்குழி பார்த்து ஓடினேன். அவ்விட மெல்லாம் நச்சுவாயுக் குண்டுகள் விழுந்து நூற்றுக் கணக்கான தமிழர் உடல்கள் சிதறுண்டும் எரிசாம்பலாகவும் கிடந்தன. முட்டுக்கால் தரையில் குற்றி விழுந்தேன். “கடவுளே’ என்று கதறினேன். ஷெல் மழை கொட்டிக்கொண்டேயிருந்தது. அதனூடேயும் ஒவ்வொரு தலையாக, உடலாகப் புரட்டினேன். எவரையும் அடையாளம் தெரியவில்லை. என் உறவுகளும் எரியுண்டு முடிந்துவிட்டதாய் மனதில் முடிவு செய்தவனாய் இனி என் மார்பிலும் எறிகணை விழட்டுமென நிமிர்ந்து திரும்பி நடந்தேன். அப்போது பிணங்களுக்கு நடுவிலிருந்து ஒரு தாய் முனகலுடன் மெதுவாக எழுந்தார்.

“”தம்பி… உங்கட சொந்தங்கள் காலையில வட்டுவாகல் பக்கம் போயிட்டினும். நீங்க கெதியா போய் அவையள காப்பாற்றுங்கோ” என்றார் அந்தத்தாய். வட்டுவாகல் நோக்கி ஓடத்தொடங்கினேன். வட்டுவாகல்- முள்ளிவாய்க்கால் பிரதான வீதியில் வன்னி மக்கள் வைத்திருந்த வாகனங்கள் நீண்ட வரிசையில் பாதி எறிகணை வீச்சில் எரிந்தும், ஏனையவை அனாதைகள்போலும் நின்றிருந்தன. பதுங்குகுழி வெட்ட இடமில்லாத மக்கள் இந்த வாகனங்களுக்குக் கீழ் படுத்துக்கிடந்தார்கள்.

தேசியத் தலைவர் தன் செல்வங்களாய் வளர்த்த செஞ்சோலைப் பிஞ்சுகளும் அப்படிச் சில வாகனங்களுக்குக் கீழ்தான் கடைசி கட்டத்தில் அடைக்கலம் தேடியிருந்தன. நான் சுமார் 100 மீட்டர் தூரத்தில் நின்றபோது கூவிவந்த எறிகணையொன்று செஞ்சோலைப் பிஞ்சுகள் பிணம்தின்னிப் பருந்துகளுக்கு அஞ்சிய கோழிக்குஞ்சுகள்போல் பதுங்கிக் கிடந்த பகுதியில் விழுந்து வெடித்தது. என் கண்ணெதிரே ஐம்பதுக்கும் மேலான அப்பிஞ்சுகள் தலை, கால், கை, உடல் சிதறி கோரமாய் செத்தார்கள்.

கடற்கரையில்தான் பிணக்காடென்றால் பிரதான வீதியும் தமிழர் சடலங்களால் நிறைந்து நீண்டு கிடந்தது. சின்னஞ்சிறு பிஞ்சுகளின் சிதறிய உடல்களைக் காணத்தான் நெஞ்சு பொறுக்கவில்லை. இறுகி, உணர்வு செத்து மரத்திருந்த மனது வெடித்தது. ஓவென்று அழ வேண்டும் போலிருந்தது. என் கால்கள் சிதறிக் கிடந்த தமிழர் தசைகள் மேல் பட்டுவிடக்கூடாதே என்ற பக்தியோடு தவண்டு தவண்டு நகர்ந்தேன்.

அங்குமிங்கும் சிங்களக் காட்டேறிகள் ஏவிக் கொண்டிருந்த எறிகணைகள் கூவிக் கூவிப் பறந்து பாய்ந்து கொண்டிருக்க வீதியோர மரத்தடியொன்றின் கீழ் தாயொருத்தி பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருந்தாள். அவளது கணவன் சற்று முன்னர்தான் எறிகணை வீச்சில் இறந்திருக்க வேண்டும். இரத்த வெள்ளத்தில் கிடந்த தன் கணவனை இறுகப் பிடித்துக் கொண்டு அந்த இளம் தாய் பிரசவ வலியில் வீறிட்டுக் கதறிய அவலத்தின் கோலத்தை எப்படி நான் மறப்பேனய்யா?

மல்ட்டிபேரல் எறிகணைகளின் அதிர்வில் தாயின் வயிற்றிலிருந்து குழந்தை முல்லைத்தீவு மண்ணில் விழுந்தது. குழந்தையின் காலைப்பிடித்து இழுத்து அந்தத் தாய் தன் மார்போடு போர்த்தினாள். அவளுக்கு உதவ உறவுப் பெண்களோ வேறெவருமோ அங்கிருக்கவில்லை. பிறந்த பிள்ளையை அணைப்பதா, அருகில் இறந்து கிடக்கும் கணவனுக்காய் அழுவதா என்று தெரியாமல் இடது கையால் கணவனின் உடலையும் வலது கையால் இப்போது பெற்ற தன் செல்வத்தையும் அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டுக் கதறிய காட்சியை எப்படி நான் பதிவு செய்வேன்?

தன் ஆடைகளை ஒதுக்கி ஒழுங்கு செய்யும் பிரக்ஞை கூட இல்லாதவளாய் அந்தத்தாய் அழுது கொண்டிருந்தாள். உடல் சோர்ந்தவளாய் மண்தரையில் தலை சாய்ந்து படுத்தவரை மட்டும் தூரத்தில் நின்று பார்த்தேன். முதல் தாகம் தீர்க்க தாய்ப் பாலுக்காய் அக்குழந்தை வீறிட்டு அழுததையும் கண்டேன். ராஜபக்சேவும், கோத்தபய்யாவும் ரத்தமும் சதையும் சேரப் பிணம் தின்னும் கொடிய ராட்சதக் கழுகுகளாய் என் கண்முன் நின்றார்கள். நீங்கள் அழிவீர்களடா… சிங்களம் இதற்கெல்லாம் பதில் சொல்லித்தான் தீர வேண்டுமடா… என்றெல்லாம் மனது கொதித்தது.

கையறு நிலையின் கைதியாய் முன் நகர்ந்தேன். அந்தத் தாயும் பிள்ளையும் என்ன ஆனார்களோ என்று எண்ணியே பல இரவுகள் தூக்கமும் நிம்மதியும் இழந்து தவிக்கிறேன். இப்படித்தான் மே முதல் வாரம் முள்ளிவாய்க்கால் தற்காலிக வைத்தியசாலைக்குச் சென்றிருந்தேன். ஓலைக் குடிசைதான் அன்று எங்களின் அவசர மருத்துவ சேவைப் பிரிவு.

குடிசையின் தாழ்வாரத்தில் குண்டுவீச்சில் தாய், தகப்பன் இருவரையும் இழந்த சுமார் ஒரு வயதுக் குழந்தை கிடத்தப்பட்டிருந்தது. அதே குண்டுவீச்சில் தன் இரு கால்களையும் இந்தக் குழந்தை இழந்திருந்தது. கிட்டப் போய் அக்குழந்தையை கண்களில் நீர் மல்கப் பார்த்தேன். குளுக்கோஸ் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தது. குளுகோஸ் வயரை கையில் எடுத்து விளையாடிக் கொண்டே என்னைப் பார்த்து அக்குழந்தை சிரித்தது.

நடந்தவற்றின், நடந்து கொண்டிருப்பவற்றின் கொடூரங்களும், விபரீதங்களும் அந்தக் குழந்தைக்குப் புரிந்திருக்கவில்லை. அருகில் நின்று கொண்டிருந்த மருத்துவ தாதியிடம், “”தாய், தகப்பன்…” என்று ஆரம்பிக்கவே, “”எல்லாம் இப்போது நான்தான்” என்று கூறியபடியே என்னை நிமிர்ந்து நோக்கி குடிசைக்கு சற்று தூரத்தில் குவியலாய் கிடந்த தமிழர் சடலங்களைக் காட்டினார். “”இதுக்குள்ளதான் இந்தக் குழந்தையிண்ட தாயும் தகப்பனும்” என்றார்.

பெற்றோரை இழந்து, இரண்டு கால்களையும் இழந்து என்ன நடந்ததென்றே தெரியாது குளுகோஸ் ஒயரை பிடித்து விளையாடிப் புன்னகைத்த இந்தக் குழந்தையின் முகமும், சற்றுமுன் வீதியோரத்தில் பிறந்து தாயின் முதற் பாலுக்காய் வீறிட்டு அழுத அந்தப் பிஞ்சின் முகமும் என்னை விட்டு அகல மறுக்கின்றன. எனக்கு மரணம் வருகின்றவரை இந்த அவலத்தின் காட்சிகள் என்னை விட்டு நீங்குமென்றும் நான் நினைக்கவில்லை.

மனதில் வெறுப்பும், நெருப்பும் விரக்தியு மாய் -இப்படியா எங்கள் விடுதலைப் பயணம் முடிவுறவேண்டுமென்ற வேதனையுடன் தொடர்ந்து நடக்க முயன்றேன். அவலத்தின் அடுத்த காட்சி அங்கே அரங்கேறிக்கொண்டிருந்தது.

வீதியை விட்டு சற்று தொலை. எறிகணை விழுந்து வெடிக்கிறது. பிளிறிச் சிதறிய புழுதி அடங்கியபின் பார்க்கிறேன். மரத்தடியில் இருந்த ஒரு தமிழ்க் குடும்பம் கண்ணெதிரே கணப்பொழுதில் சிதறிக் கிடக்கிறது. எழுந்திருக்க முடியாத அளவுக்கு படுகாயமடைந்த தகப்பனின் கால்களும் கைகளும் விட்டுவிட்டுத் துடிப்பது மட்டும் தெரிகிறது. எறிகணை விழுந்தபோது அந்தத் தாய் தன் பிள்ளைக்குப் பாலூட்டிக் கொண்டிருந்திருக்கிறாள். குழந்தையை இறுக அணைத்தபடியே அத்தாய் சிதைந்துபோய் உயிர் பிரிந்து கிடக்கிறார். அவளது இடதுபுற மார்பில் ஷெல் குண்டு பாய்ந்து சிதைத்திருக்கிறது. இப்போதும் கொடூரத்தின் கொலைவெறி புரியாத அப்பிஞ்சுக் குழந்தை தாயின் வலதுபுற மார்பை பாலுக்குத் தேடுகிறது.

பக்கத்தில் ஓர் சிறுமி நான்கு வயது இருக்கலாம், முந்திய பிள்ளையாக இருக்கக் கூடும். அந்தப்பிள்ளை கையில் ஓர் தட்டுடன் “அம்மா பசிக்குது… அம்மா பசிக்குது…’ என்று அழுதுகொண்டிருந்தது. தகப்பனுக்கு அருகில் பையன். சுமார் ஆறு வயது இருக்கலாம். “”அப்பா… எல்லாரும் போகினும் வாங்க, போவோம் ஆமி வறான், எழும்புங்கோ அப்பா… தண்ணீர் விடாக்குது… கெதியா எழும்புங்கோ அப்பா…” என்று குளறிக்கொண்டிருந்தான்.

நின்று நிதானித்து அங்கு என்னதான் நடந்துகொண்டிருக்கிறதென்று சிந்திக்கிற நிலையிலோ, ஒருவருக்கொருவர் உதவும் நிலையிலோ ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லும் நிலையிலோ எவரும் இருக்கவில்லை. எங்கும் மரணம் வெறியாடிக்கொண்டிருந்தது. ஈவிரக்கம் ஏதுமின்றி இன அழித்தலின் இறுதி காட்சி அரங்கேறிக்கொண்டிருந்தது. மரணத்தின் நிலமாய் தமிழ் ஈழம் நின்றது. இறந்து கிடந்த தாயின் மார்பில் பால் முகர்ந்து தேடிய அப் பச்சிளங்குழந்தை எமது அவலநாளின் அழியா காட்சியாய் காலம் முழுதும் நிற்கும்.

தொடர்ந்து நகர்ந்தேன். தேசியத் தலைவர் அடிக்கடி சொல்வாரே… “”அவலத்தை தந்தவனுக்கே அதை திருப்பிக் கொடு” என்று… அப்படிச் சொன்னதோடு நிறுத்தாமல் சிங்களவனுக்கும் நாங்கள் இப்படி ஈவிரக்கமின்றிக் கொடுமை செய்திருந்தால் ராஜபக்சேவும் கோத்தபய்யாவும் இந்த வெறியாட்டம் ஆடியிருக்கமாட்டார்களே… என்றெல்லாம் மனது எண்ணியது.

முன்பொருமுறை சட்டக்கல்லூரி உரையொன்றில் தந்தை செல்வநாயகம் சொன்னாரே… “”தமிழ் மக்களுக்கு எதிர்காலத்தில் எவ்வித பாதுகாப்பும் இருக்காது -கடவுள்தான் நம்மைக் காப்பாற்ற வேண்டும்…” என்று, ஆம் கடவுளும் எம்மைக் கைவிட்ட நாளில் நா வறண்டு நடந்துகொண்டிருந்தோம். தமிழனாய் பிறந்ததையிட்டு என்னை நானே சபித்துக்கொண்டேன்.

உலகத்தின் சகலர் மீதும் கோபமாய் வந்தது. மீண்டும் முன்பு நான் குறிப்பிட்ட உணர்வு… : “”ஐயா, ஒபாமாவே… கடைசி நம்பிக்கையாய், நீங்கள் ஏதாவது செய்வீர்களெனக் காத்திருந்தோமே… வானில் வந்த ஒவ்வொரு விமானத்தையும் பார்த்திருந்தோமே… ஏமாற்றி விட்டீர்களே….” என்று மனம் புலம்பியது.

எங்கும் பிணக்காடாய் கிடந்த வட்டுவாகல்-முள்ளி வாய்க்கால் பிரதான வீதியில் தமிழர் உடலங்களில் என் கால்கள் பட்டுவிடக்கூடாதென்ற கவனத்தோடும், மனதின் பாரங்களோடும் நகர்ந்து கொண்டிருந்தேன். ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும் வீதியின் இருபுறமும் துப்பாக்கிகளை மக்களை நோக்கி நீட்டியவாறு சிங்களக் கைக்கூலிகள் நின்றிருந்தனர். கடைசியாக புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதியை விட்டு வெளியே வந்து விட்டோமென்பது புரிந்தது. சுதந்திர வாழ்க்கை முடிந்து போய்விட்ட உணர்வு உடல் முழுதும் பரவியது. களைத்துப் போயிருந்த மனது மேலும் களைத்தது.

வட்டுவாகல் பாலம் பக்கமாய் நடந்தேன். பாலத்தின் இருபுறமுமாய் விரிந்து கிடந்த நீரேரியை பார்த்தேன். தண்ணீர் பரப்பு தெரியவில்லை. எங்கு பார்க்கினும் தமிழரின் பிணங்கள் மிதந்து கொண்டிருந்தன. அனைத்து உடல்களுமே ஆடையின்றிக் கிடந்தன. அநேகம் பேர் எம் குலப் பெண்கள். கொடுமையை பதிவு செய்யக்கூட என் கண்களால் பார்க்க முடியவில்லை. எனினும் அந்த நீரில் மிதக்கும் பிணங்களூடே என் சொந்த உறவுகள் இருக்கக்கூடுமென்பதால் நின்று பார்த்தேன். பல உடல்களில் நகக்கீறல்களும், கடித்துக் குதறிய காயங்களும் தெரிந்தன.

ஆண்கள் பெரும்பாலோரது உடல்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில் கிடந்தன. சுடப்பட்டும், அடித்தும், வெட்டியும் கொல்லப்பட்டிருக்கிறார்களென்பது தெரிந்தது. கரையொதுங்கிய உடல்களில் பசித்த தெரு நாய்கள் பற்கள் பதித்த காட்சியை காணப் பொறுக்கவில்லை. பாலத்தைக் கடந்து அங்கிருந்து இராணுவ முகாம் வாயிலருகே நடந்தோம். “”புலி தனியா பிரிஞ்சு வாங்கோ… பொது மக்கள் தனியா பிரிஞ்சு போங்கோ…” என்று கொச்சைத் தமிழில் சிங்களவன் அறிவித்துக் கொண்டிருந்தான். அச்சத்தின் மின்னல் பிடரியில் பாய்ந்தது. அருகிலிருந்த மக்கள் விரக்தியோடு முணுமுணுத்தார்கள்.

“”இனி அவன் ஆட்சிதானே… இதுக்குப் பயந்துதானே புலியளோட ஓடி வந்தம்… பல நாட்கள் அணு அணுவாய் சாவதிலும் பார்க்க புலியளோட அங்க நின்டு கௌரவமா செத்திருக்கலாம்…” என்றெல்லாம் பேசிக் கொண்டே பிரிந்தார்கள். என் மனைவி, பிள்ளை உறவுகள் எப்படியேனும் உயிர் தப்பியிருப்பார்கள் என்ற நம்பிக்கையில் நானும் நடந்து கொண்டிருந்தேன்.

இரண்டு பக்க கம்பி வேலிக்கு நடுவே மூன்று லட்சம் மக்கள் ஊர்ந்தோம். கம்பி வேலிக்கு மறுபுறத்தில் இருந்து நாக்கு நனைக்க ஒரு முடறு தண்ணீர் கொடுத் தார்கள். ஐம்பதாயிரம் பேருக்கு எனச் சொல்லப்பட்ட கம்பிவேலி முகாமுக்குள் அத்தனை பேரையும் அடைத்தார்கள். சுற்றிலும் சுடும் நிலையில் இராணுவத்தினர். ஒரு சிலர் தமிழ் கதைத்தார்கள். அவர்களில் ஒருவனிடம் மெல்லச் சென்று கேட்டேன். “என் உறவுகளைக் காணவில்லை, தேடிப் பார்க்கலாமா?’ என்று. “”கம்பி வேலிக்குள் மட்டும் தேடிப் பாருங்கள். வெளியே போறவங்களை சுடச் சொல்லி உத்தரவு” என்றான் அவன். தொடர்ந்து பேசிய அவன், “”இவ்வளவு பேரும் எங்க இருந்தீங்கள்… ஐம்பதாயிரம் பேர் என்றுதானே நினைத்தோம்” என்று வியப்பாகக் கேட்டான். நான் சொன்னேன், “”ஐம்பதாயிரம் பேர் வரை செத்துவிட்டார்கள். நாங்கள் பங்கரில் இருந்து தப்பி வாறம்” என்றேன்.

“பங்கருக்குள் இத்தனை நாள் எப்படி இருந்தீர்கள்?’ என்று மேலும் வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தான். அவனோடு பேசிக்கொண்டிருந்தபோது வேறொரு இராணுவக் கூட்டத்தினர் பொதியுணவு கொண்டு வந்தார்கள்.

இருந்தது மூன்று லட்சம் மக்கள். அவர்கள் கொண்டு வந்ததோ சுமார் 3000 உணவுப் பொதிகள். எப்படி பங்கீடு செய்வதென்று தெரியாமல் நாய்களுக்கு எலும்புத் துண்டுகளை வீசுவது போல் கம்பிவேலிக்கு வெளியே நின்று கொண்டு மக்கள் கூட்டத்தினர் மீது கேவலச் சிரிப்புடன் வீசி எறிந்தார்கள். ஏதோ எறிபந்து விளையாடுவதுபோல் மேலும் மேலும் எள்ளி நகையாடிச் சிரித்துக்கொண்டே எறிந்தார்கள்.

தமிழரின் இயலாமை அவமானக் களத்தில் அவர்களின் அரை மணி நேர விளையாட்டு முடிந்தபோது, சில வயது போனவர்களும் எட்டுப் பத்து சிறுவர்களும் நெரிசலில் சிக்கி மூச்சடங்கிப் பிணங்களாய் கிடந்தார்கள். கைக்குழந்தையுடன் உணவுப் பொட்டலம் கிடைக்காதா எனச்சென்ற தாய் மூச்சுத் திணறி இறந்து போன குழந்தையுடன் திரும்பியதும், “பசிக்குது, ஒரு பார்சல் குடுங்கோ’ என்று கூவிக் கேட்டுக்கொண்டே நெரிசலில் குரலடங்கிப் போன சிறுவர்களும், தண்ணீராவது தாருங்கோ எனக்கேட்டு மிதியுண்டு மடிந்த முதியவரும் அன்றைய நாள் எமது வரலாறு சந்தித்த பேரவலத்தின் பதிவு செய்யப்படாத சாட்சிகள்.

வாகனத்தில் ஏற்றுவதற்காக கம்பி வேலிக்குள்ளிருந்து வரிசை பிடிக்கச் சொன்னார்கள். அதற்குள்ளாகவே காட்டிக் கொடுக்கும் சிலரை சிங்களம் விலைக்கு வாங்கியிருந்தது. அந்தக் கேவலப் பிறவிகள் தங்களுக்கு தனிப்பட்ட முறையில் பிடிக்காத, பக்கத்து வீட்டுக்காரர்களையெல்லாம் கூட “புலிகள்’ என்று கை நீட்டிக் காட்ட இராணுவத்தினர் தனியாக அவர்களைப் பிடித்துச் சென்றனர். தமிழன் வீழ்ந்ததும் வீழ்வதும் காட்டிக் கொடுக்கும் எட்டப்பர்களாலென்பது மீண்டும் ஒருமுறை வேதனையோடு அங்கே அரங்கேறிக் கொண்டிருந்தது.

எம் தேசியத் தலைவர் அடிக்கடி இரண்டு விஷயங்களைச் சொல்வார். ஒன்று, “”நேர்மையான வர்கள்போல நடிப்பவர்களைவிட நேர்மையானவர் களாக இருப்பவர்களைத்தான் எனக்குப் பிடிக்கும்” என்பது. இன்னொன்று “”எதிரிகளைவிட துரோகி களே ஆபத்தானவர்கள்” என்றும் அவ்வப்போது நினைவுபடுத்துவார். நடைமுறை ஒழுங்குகளில் தமிழ் சமூகம் மீது தலைவர் காட்டிய இறுக்கத்திற்கு காரணமும் இந்த இனத்தின் மோசமான துரோகக் குணங்களை அவர் உள்ளார அறிந்திருந்த காரணத்தினால்தான்.

அந்த இடத்தில், அந்த கணத்தில் இப்போது சிங்கள ஆமிக்காரனைவிட அடை யாளம் காட்டிக் கொடுத்துக் கொண்டிருந்த எம் இனத்துக் கூலிகள்தான் அதிக அச்சத்தை தந்தார்கள்.
உடல் சோதனைக்கு ஒவ்வொருவரும் உள்ளாக்கப்பட்டோம். காட்டிக்கொடுக்கும் துரோகக் கூலிகள் நின்ற இடத்தைக் கடந்து உடல் சோதனைக்குப் போனேன். கட்டிய கோவணத்தையும் அவிழ்த்துப்போட்டு பரிசோதித்தார்கள். எனக்குள் கொலைவெறி ஆவேசம். அடக்கிக்கொண்டேன்.

என்றேனும் எம் தேசியத்தலைவன் மீண்டும் அழைப்பு விடுத்தால், அல்லது தகுதியானதோர் விடுதலை தலைமை எமக்குத் தெரிகின்ற நாளில் அவன் சொல்லும் திசையில் இலக்கு நோக்கி நகர இந்த உயிர் இப்போதைக்கு இருக்கவேண்டுமென்ற வைராக்கியத்தில், வந்த ஆவேசத்தையெல்லாம் அடக்கிக்கொண்டேன். இங்கே எழுத முடியாத ஒரு கெட்ட வார்த் தையை மட்டும் பம்பலாய் வாயில் முணுமுணுத் தேன். சோதனையெல்லாம் முடிந்து ஒருவழியாய் பேருந்தில் ஏறியபோது மே-18 முற்பகல் ஆகியிருந்தது. முல்லைத்தீவிலிருந்து வவுனியா செட்டிக்குளம் வதை முகாம் நோக்கி பேருந்து புறப்பட்டது.

எங்கு கொண்டுபோகிறார்களோ, என்னவெல்லாம் நடக்கப் போகிறதோவென்ற பதற்றம். பேருந்தின் பின்கதவு அடைக்கப்பட்டு முன் கதவில் இரண்டு ராணுவத் தினர் சுடும் நிலை யில் கொடூர முக பாவத்தோடு எம்மை அவதானித்துக்கொண்டிருந்தனர். நூற்றுக்கணக்கான பேருந்துகள் ஓமந்தை சோதனைச் சாவடிக்குமுன் நின்று நகர்ந்தன. 2006 வரை இந்த சோதனைச் சாவடி புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. புலிகள் தமது குடிவரவு (Immigration) மற்றும் சுங்கம் (Customs)பிரிவினரை உருவாக்கி முதலில் அமர்த்திய இடம் இது. இன்றோ எல்லாம் சூன்யமாகிப்போன உணர்வு உயிரைப் பிழிந்தது.

இன அழித்தலின் அடுத்த கட்டம் ஓமந்தையில் ஆரம்பித்தது. “”புலியாக இருந்தவர்கள் அனைவரும் தனியாகப் பதியவும்”, “”ஒருநாள் பயிற்சி எடுத் திருந்தாலும் தனியாகப் பதியவேண் டும்”, “”எல்லைப்படை பயிற்சி எடுத்தவர் களும் பதியவேண்டும்”, “”எங்களுக்கு எல்லாம் தெரியும், பொய் சொல்லி பதிவு செய்தால் தப்பிக்க முடியாது -மரணம்தான்” என்றெல்லாம் அறிவித்துக்கொண்டிருந்தார்கள்.

பதிவு செய்துவிட்டவர்களெல்லாம் ஒருபுறமாய் கூடி கதைத்துக்கொண்டிருந்தபோதுதான் அங்கிருந்த தொலைக்காட்சிப் பெட்டியில் எம் தலைவன் வீரமரணம் செய்துவிட்டான் என்ற செய்தியைக் காட்டினார்கள். என் சுவாசம் நின்றது. இதய நாடிகள் ஒடுங்கின. என்னையு மறியாது கண்களில் நீர். பின்னோக்கி நினைவுகள் ஓடின.

1989-ம் ஆண்டு என்று நினைக்கிறேன். இந்தியப்படைகள் எம் தலைவனை சுற்றி வளைத்து “சதுரங்கம் 1,2,3 (Operation Checkmate) என பெயரிட்டு நின்றபோது மணலாற்றுக் காட்டில் நிலை தடுமாறாது, அருகில் போராளிகள் கொள்கலன்களில் உயர்ரக பெட்ரோல் சுமந்துகொண்டே சண்டையிட்ட அந்த நாட்கள் நினைவுக்கு வந்தன. “உயிரற்ற என் உடலோ, சாம்பலோகூட அந்நியப் படைகளிடம் கிடைக்கக்கூடாது’ என்று உடன்நின்ற போராளிகளுக்கு உத்தரவிட்டுத்தான் சண்டை புரிந்துகொண்டிருந்தார் எம் தலைவன்.

போர்க்களத்தில் தன்னையே கொடையாக்கும் அக்கினியாய் நின்றுகொண்டுதான் அன்று எம்மை வழிநடத்தினார் அவர். உன்னிப்பாக தொலைக்காட்சியில் காட்டப்பட்ட உடலையும் தலையையும் பார்த்தேன். நிச்சயமாக முகமும் தலையும் எம் தலைவனுடையதல்ல என்பது தெரிந்தது. முற்றுகை வளையத்திற்குள் சிக்கியிருந்தாலும்கூட எம் தலைவன் எதிரிக்கு நெருப்பாய், புயல்காற்றாய் தான் இருப்பார்.

சர்வதேசமே, ஐ.நா.சபையே, தமிழுலகே… எப்போது வேண்டுமானாலும் என்னைக் கூப்பிடுங்கள். நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன். இன அழித்தலுக்கு சாட்சி சொல்ல வருகிறேன். (சிவரூபன் வருவான்.)

Quelle - மீனகம் on September 22, 2009

31 May 2009

Prabaharan speaks about Shankar

Prabaharan speaks about 83-Thirunelveli attack

விக்டர் அண்ணா

Charles Antony Special Regiment P3

Charles Antony Special Regiment P2

Charles Antony Special Regiment P1

Tamil Eelam Leader V. Pirapaharan Speaks about Ponnamman 2/2

23 May 2009

பிரபாகரன் மரணம்: பின் தொடரும் கேள்விகள்

வித்தியாசமான கோணத்தில் ஒரு ஆய்வு செய்யப்பட்டிருக்கின்றது முடிவு உங்கள் கைகளில்

- ஆதிசிவம்@சென்னை -

ஒரு வழியாக மாவிலாற்றில் 2006-ல் தொடங்கிய நான்காவது ஈழப் போர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணச் செய்தியுடன் முடிவடைந்திருக்கிறது. இலங்கை அரசுத் தரப்பினர், ""மூன்று தசாம்ச கால பிரச்னை முடிவுக்கு வந்திருக்கிறது; விடுதலைப் புலிகள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டனர்'' என்று இச்சூழலை வர்ணித்துவரும் நிலையில், ஈழப் போரைத் தொடர்ந்து கூர்ந்து அவதானித்துவருபவர்களோ பல்வேறு யூகங்களை எழுப்புகின்றனர்.

மரணம் எழுப்பும் கேள்விகள்:

இலங்கை அரசு பிரபாகரனின் சடலம் என்று சுட்டிக்காட்டும் சடலத்தை முன்வைத்தே பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகின்றன. ஆழமற்ற களப்புப் பகுதியிலிருந்து பிரபாகரன் எங்கே தப்பிச் செல்ல முயன்றார்? கடல் பரப்பு முழுவதையும் ராணுவம் கைப்பற்றிவிட்ட நிலையில், நீரிழிவு நோயாளியான அவர் நீண்ட தூர கடல் பயணம் மேற்கொள்ளக்கூடிய வகையில் வசதியான நவீன படகு அல்லது கப்பலுக்கு அங்கு ஏது வழி? தப்பிச் செல்ல நினைக்கும் ஒருவர் முக அமைப்பை மாற்றிக்கொள்ளாமலோ, மாறுவேஷத்திலோ இல்லாமல் சீருடையில் அடையாள அட்டையுடனா செல்வார்? அடையாளம் காண்பதில் குழப்பம் ஏற்படும் வகையில் தலைப் பகுதி சரியாக சிதைக்கப்பட்டிருப்பது எப்படி?...

இப்படி ஏராளமான கேள்விகள் முன்வைக்கப்படுவதோடு முக்கியமான ஒரு விஷயமும் சுட்டிக்காட்டப்படுகிறது. அது: பிரபாகரன் போன்ற உருவத் தோற்றமுடையவரைப் பற்றிய செய்திகள்.

நீண்ட காலமாகவே பிரபாகரனைப் போன்றே உருவத் தோற்றமுடையவரை புலிகள் வெளியுலகுக்குப் பயன்படுத்தி வருவதாகவும் உண்மையில், பிரபாகரன் இருக்குமிடம் அவருடைய நெருங்கிய சில கூட்டாளிகளைத் தவிர்த்து வேறு எவருக்கும் தெரியாது என்றும் கூறப்பட்டுவருகிறது.

இதை புலிகளுக்கு மிக நெருக்கமானவர்களும் அந்த இயக்கத்திலிருந்தே விலகியவர்களும்கூட சொல்வதுண்டு. ஊடகங்களிலும் அவ்வப்போது இது தொடர்பான செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
இந்நிலையில், பிரபாகரன் மரணச் செய்தியைத் திட்டமிட்டு புலிகள் கட்டமைத்திருக்கிறார்கள் என்று நம்புவதற்கு ஏராளமான தரவுகள் கிடைத்திருக்கின்றன.

பதுங்குக் குழி ஆதாரங்கள்:

பிரபாகரன் தங்கியிருந்ததாக ராணுவம் நம்பும் எல்லா பதுங்குக் குழிகளிலுமே பிரபாகரன் அங்கிருந்ததற்கான ஆதாரமாக ஏதேனும் சில பொருட்களை விட்டுச் செல்லும் தந்திரத்தை புலிகள் கையாண்டனர்.

சில பதுங்குக் குழிகளில் அவர் அணியக் கூடிய அளவுடைய சட்டை, தொப்பி; சில இடங்களில் "இன்சுலின்' ஊசிகள் (பிரபாகரன் நீரிழிவு நோயாளி), சில இடங்களில் அவர் படுத்திருந்தது என்று நம்பத் தக்க வகையில் படுக்கை, அவருடைய குடும்ப புகைப்படங்கள், சான்றிதழ்கள் இப்படி...

இதற்கு முன்னர், மரபணுச் சோதனை நடத்துவதற்கு பிரபாகரன் தொடர்பான குறிப்பிடத்தக்க ஆதாரங்கள் இலங்கை ராணுவத்திடம் ஏதும் இல்லாத நிலையில், இந்த ஆதாரங்களைத் திட்டமிட்டே புலிகள் விட்டுச் சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

அதாவது, பிரபாகரன் உருவமைப்பைக் கொண்ட ஒரு நபர் பயன்படுத்திய பொருட்களை விட்டுச் சென்று, பிற்பாடு பிரபாகரனுக்குப் பதில் அவருடைய சிதைந்த சடலத்தை பிரபாகரன் என்று நம்ப வைப்பதற்கான ஓர் உத்தி.

பதுங்கும் இடத்தை யார் கூறுவார்?:

பொதுவாக விடுதலைப் புலிகளின் இரண்டாம் நிலை தலைவர்கள் இருக்குமிடங்களே பரம ரகசியமாக இருக்கும். ஆனால், ஒரு சதுர கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் சுற்றி வளைக்கப்படும் வரை பிரபாகரன் இங்குதான் இருக்கிறார் என்பதைத் திரும்பத் திரும்ப புலிகள் கூறிக்கொண்டிருந்தனர். இது பெரிய அளவிலான சந்தேகங்களை எழுப்புகிறது.

அந்த அமைப்பின் அரசியல் தொடர்பாளர் நடேசன் உள்ளிட்ட ஊடகத் தொடர்பாளர்கள் மட்டுமின்றி, அரசுப் படையினரிடம் சரணடைந்த புலிகள் இயக்கத்தைச் சார்ந்தவர்களும்கூட இதையே திரும்பத் திரும்பச் சொன்னார்கள்.

போரின் கடைசி இலக்கே பிரபாகரன்தான் என்ற சூழலில், பிரபாகரனைப் பாதுகாப்பதற்காகவே ஒரு சிறப்புப் படையையே நிறுவும் அளவுக்கு அவருடைய உயிரில் அக்கறையுடைய புலிகள், அவர் இருக்குமிடத்தை எப்படி அலட்சியமாகப் பறைச்சாற்றுவார்கள்?

ஆகையால், ராணுவத்தை திசைத் திருப்புவதற்காகவே புலிகள் திட்டமிட்டுச் செயல்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. தங்கள் தந்திரத்துக்கு உறுதி சேர்க்கும் வகையிலேயே நடேசன் உள்ளிட்ட இரண்டாம் நிலைத் தலைவர்களை போர்க்களத்திலேயே இருக்குமாறு செய்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

மரணச் செய்தி - இரு தரப்புகளின் நிர்ப்பந்த சூழல்:

இந்தப் போரின் வெவ்வேறு காலகட்டங்களிலும் இலக்குகளை மாற்றி மாற்றி அறிவித்தாலும், உண்மையில் இலங்கை அரசின் இறுதி இலக்கு பிரபாகரன்தான். போர்க் காலகட்டத்தின் இடையே நடைபெற்ற தேர்தல்களிலும் இதைப் பிரதான முழக்கமாக முன்வைத்தே இலங்கை அதிபர் ராஜபக்ஷ வெற்றிகளைக் குவித்தார்.

எனவே, வெறும் நிலப்பரப்பைக் கைப்பற்றியதோடு போரை முடித்துக்கொண்டதாக அறிவித்தால், அரசியல் ரீதியாக அவருக்குப் பெரும் பின்னடைவு ஏற்படுவதோடு விடுதலைப் புலிகள் இயக்கத்தை வேறறுத்துவிட்டதாக முன்னெடுக்கப்படும் பிரசாரமும் முழு வெற்றி பெறாது.

ஆகையால், இலங்கை அரசுக்கும் ராணுவத்துக்கும் பிரபாகரன் மரணத்தின் மீது வலுவான சந்தேகங்கள் இருந்தாலும், தற்போதைய சூழலில் அப்படியொரு அறிவிப்பை வெளியிட வேண்டிய நிலையிலேயே அரசுத் தரப்பு இருக்கிறது.

இது ஒருபுறமிருக்க, விடுதலைப் புலிகளும் இப்படியொரு நிர்ப்பந்தத்திலேயே இருக்கின்றனர். முக்கியமான காரணம், போர்ச் சூழலிலிருந்து விடுபடுவதாகும். முன்னதாக, அமெரிக்காவில் புதிய அரசு பொறுப்பேற்றதுமே அமெரிக்க அணுகுமுறையில் மாற்றங்களை அவர்கள் எதிர்பார்த்தனர். அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்தனர். இங்கு எதிர்பார்த்த மாற்றம் ஏற்படாவிடில் மேற்கொள்ள வேண்டிய காரியங்களை முன்கூட்டியே திட்டமிட்டிருந்தனர். போர்ச் சூழலில் புதிய வாய்ப்புகள் ஏதுமற்ற நிலையில், சில காலத்துக்கு பதுங்கியிருப்பதே நல்லது என்று அவர்கள் கருதினர். இந்நிலையில், பிரபாகரனின் மரணச் செய்தி ராணுவ நடவடிக்கைகளிலிருந்து தப்ப உதவுவதோடு, உலகின் கவனத்தையும் தமிழ் மக்களின் அவலத்தை நோக்கித் திருப்ப முடியும் என்று அவர்கள் நம்புகின்றனர்.

முடிவுகளைத் தீர்மானித்த ஆனந்தபுரம்:

இந்தப் போரின் தொடக்கத்திலிருந்தே ராணுவம் உள்ளே புக அனுமதிப்பதை புலிகள் ஒரு தந்திரமாகப் பயன்படுத்தினர். சில ஆண்டுகளுக்கு முன் யாழ்ப்பாணத்தில் இதேபோன்ற உத்தியைத்தான் அவர்கள் பின்பற்றினர். இலங்கை ராணுவம் முழுவதையும் உள்ளேவிட்டு, திடீரென ஊடறுப்புத் தாக்குதல் மூலம் ஏறத்தாழ 40,000 வீரர்களை அவர்கள் சுற்றி வளைத்தனர்.

அப்போது சர்வதேச நாடுகளும் இந்தியாவில் ஆட்சியிலிருந்த பாஜக தலைமையிலான அரசு இப்பிரச்னையில் தலையிட்டதன்பேரில், இலங்கை வீரர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இம்முறையும் இதே போன்ற ஒரு பாரிய தாக்குதலுக்கு புலிகள் திட்டமிட்டிருந்தனர். அதற்காக அவர்கள் ஒன்றுகூடிய இடம் ஆனந்தபுரம். ஒரு சிறிய பிரதேசத்தில் புலிகள் அமைப்பின் முக்கியமான களத் தளபதிகள் பலர் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட புலிகள் பெரும் தளவாடங்களுடன் குவிந்திருந்த இந்தச் செய்தியை "ரா' அமைப்பின் மூலம் இலங்கை ராணுவம் அறிந்ததாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து ராணுவம் முன்னெடுத்த பாரிய தாக்குதலில் புலிகள் சுற்றி வளைக்கப்பட்டனர். ஏப்ரல் முதல் வாரத்தில் நடந்த இத்தாக்குதலில் ராணுவத் தரப்பில் சுமார் 15,000 வீரர்கள் வரை ஈடுபடுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. கடும் போரின் இறுதியில் முக்கிய கள தளபதிகள் உள்பட ஏறத்தாழ அங்கு கூடியிருந்த அனைத்துப் புலிகளும் கொல்லப்பட்டனர்.

இத்தாக்குதலுக்குப் பின்னரே, புலிகளின் மாபெரும் வீழ்ச்சி தொடங்கியது எனலாம். கிளிநொச்சி கைவிட்டுப்போன பின்னர், ஏறத்தாழ மூன்று மாதங்கள் வரை புதுக்குடியிருப்பில் கடுமையாகப் போராடிய புலிகள் இத்தாக்குதலுக்குப் பின்னரே முற்றிலுமாக ஒடுங்கிப் போயினர்.

கிழக்குக்குத் தப்பினார் பிரபாகரன்?:

ஆனந்தபுரம் வியூகம் தோல்வியடைந்த பின்னர், முடிவை புலிகள் ஓரளவுக்கு யூகிக்கத் தொடங்கிவிட்டனர். இதனால், கடல் வழியாக பிரபாகரன் தப்பிக்கத் தயாராக இருப்பதாக புலிகளே தகவல்களைக் கசியவிட்டனர். ராணுவத்தின் ஒட்டுமொத்த கவனமும் கடல் பரப்பின் மீது குவிந்திருந்த நிலையில், ஏப்ரல் மத்தியில் கிழக்குப் பகுதிக்கு பிரபாகரன் தப்பிவிட்டதாகக் கூறப்பட்டது.

இலங்கையின் கிழக்குப் பகுதி விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்டு விட்டாலும், இன்னமும் அங்கு அவ்வப்போது கொரில்ல தாக்குதல்களை நடத்திக்கொண்டுதான் இருக்கின்றனர் புலிகள். குறிப்பாக யாலா காட்டுப் பகுதியில் ஏராளமான புலிகள் பதுங்கி இருக்கின்றனர்.

ஆகையால், ஏப்ரல் மத்தியில் கிழக்குப் பகுதிக்கு பிரபாகரன் தப்பியிருக்கலாம் என்று இலங்கை புலனாய்வுத் துறையே வலுவாகச் சந்தேகிக்கிறது. இன்னொருபுறம் சில மாதங்களுக்கு முன்னரே அவர் வெளிநாடுகளுக்குத் தப்பியிருக்கலாம் என்றும் சந்தேகமும் அவர்களிடம் இருக்கிறது.

உலகம் முழுவதும் தொடர்புகள்:

மேலெழுந்தவாரியாக பார்க்கும்போது ஒட்டுமொத்த புலிகள் அமைப்பும் ஏதோ முல்லைத்தீவுக்குள்ளேயே முடக்கப்பட்டுவிட்டது போன்றும் பிரபாகரனுடன் அந்த அமைப்பே அழிந்துவிட்டதுபோல தோன்றினாலும் உண்மை அதுவல்ல. உலகம் முழுவதும் புலிகள் அமைப்பு பரந்து விரிந்திருக்கிறது. இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், சில ஆப்பிரிக்க நாடுகள் என்று உலகம் முழுவதும் இன்றளவும் மறைமுகமாகச் செயல்படும் ஏராளமானோர் அந்த அமைப்பில் இருக்கின்றனர். வலுவான பொருளாதாரப் பின்னணியும் ஆதரவளிக்க ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தமிழர்களும் இருக்கின்றனர்.

இது தவிர, பிரபாகரன் குடும்பத்தினர் தொடர்பான சந்தேகங்களும் எழுகின்றன. குறிப்பாக, வெளிநாட்டில் அவருக்கு இன்னொரு மகன் இருப்பதாக நீண்ட காலமாகக் கூறப்பட்டுவந்தாலும் அவர் எங்கு இருக்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை. அதேபோல, அவருடைய மனைவி, மகள் ஆகியோருடைய தற்போதைய நிலையும் தெரியவில்லை.

இந்நிலையில், பிரபாகரன் மரணச் செய்தியை அவரைப் பின்தொடரும் நிழல்களே உறுதிப்படுத்த வேண்டும்; அல்லது காலமும் வரலாறும் உறுதிப்படுத்தலாம்

ஆதிசிவம்@சென்னை

தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பத்திரமாக உள்ளார்

முல்லைத்தீவு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பத்திரமாக உள்ளார், உயிருடன் உள்ளார். ஆனால் அவர் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவமும், அரசும் பொய்ப் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன என்று விடுதலைப் புலிகள் இயக்கம் முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளதால், பிரபாகரன் விவகாரத்தில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து விடுதலைப் புலிகளின் வெளிவிவகார புலனாய்வுத்துறையின் தலைவர் அறிவழகன் தமிழ்நெட் இணையதளத்திற்கு அளித்துள்ள பேட்டியில்,

தேசியத் தலைவர் உயிருடனும் நலமுடனும் உள்ளார்.

எமது பாசத்துக்குரிய தேசியத் தலைவர் தமிழ் மக்களை எதிர்காலத்தில் சரியான தருணத்தில் தொடர்பு கொள்வார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு உலகு எங்கும் பரந்து விரிந்து ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் ஆதரவுக் குரலை அடக்கி ஒடுக்கும் முகமாக இலங்கை அரசு, தமிழீழ தேசியத் தலைவர் தொடர்பான பொய்ப்பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடுவதில் முனைப்பாக உள்ளது.

உலக தமிழ் சமுதாயத்தினர் இந்த பொய்ச் செய்திகளை நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளார்.

இன்று தமிழ்நெட் இணையதளத்திற்கு இந்தப் பேட்டியை அளித்துள்ளார் அறிவழகன். இலங்கையில் உள்ள தமிழ்நெட் இணையதள செய்தியாளரை ரகசிய இடத்திலிருந்து தொடர்பு கொண்டு இதைத் தெரிவித்துள்ளார் அறிவழகன். பாதுகாப்பு காரணங்களுக்காக தனது இருப்பிடத்தை தெரிவிக்க அவர் மறுத்து விட்டார்.

பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பல்வேறு புலிகள் ஆதரவாளர்களும் கூறி வருகின்றனர், செய்திகள் வந்தவண்ணம் உள்ளது. இருப்பினும் விடுதலைப் புலிகள் தரப்பில் அதிகாரப்பூர்வமாக எந்த வார்த்தையும் இதுவரை இல்லாமல் இருந்தது.

இந்த நிலையில் முதல் முறையாக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக தமிழ்நெட் செய்தி கூறியிருப்பது பிரபாகரன் விவகாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தலைவர் பிரபாகரன் நலம்

மூத்த உறுப்பினர்கள் பலர் வஞ்சகமாக கொல்லப்பட்டுள்ளனர்": செ.பத்மநாதன் [செவ்வாய்க்கிழமை, 19 மே 2009, 09:08 மு.ப ஈழம்] [வி.நவராஜன்]

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருப்பதாகத் தெரிவித்திருக்கும் அந்த இயக்கத்தின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன், ஆனால், தூரதிர்ஷ்டவசமாக தமது இயக்கத்தின் பல மூத்த உறுப்பினர்கள் வஞ்சகத்தனமாகக் கொல்லப் பட்டிருக்கின்றனர் எனவும் குறிப்பிட்டிருக்கின்றார். "சிறிலங்கா அரசாங்கம் போரில் வெற்றி பெற்றிருப் பதாகப் பிரகடனப் படுத்தலாம். ஆனால் இது ஒரு வஞ்சகத்தனமான வெற்றி என்பதை சிறிலங்கா அரசாங்கம் புரிந்துகொள்ளவில்லை. தமிழ் மக்களின் நம்பிக்கையை சிறிலங்கா அரசாங்கம் முழுமையாகவே இழந்துவிட்டது" எனவும் 'தமிழ்நெட்' இணையத்தளத்துக்கு வழங்கிய பேட்டியில் செ.பத்மநாதன் தெரிவித்திருக்கின்றார்.
அவரின் பேட்டியின் முக்கிய விபரங்கள் வருமாறு:

இந்தப் போரில் வெற்றி பெற்றிருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் பிரகடனப்படுத்தியிருக்கின்றது. விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டுள்ளதாகவும் அறிவித்திருக்கின்றது. இந்தப் போரில் உண்மையிலேயே சிறிலங்கா வெற்றிபெற்றுள்ளதா?

சிறிலங்கா அரசாங்கம் நிரூபிக்க முடியாத ஒரு உரிமை கோரலை வெளியிட்டிருக்கின்றது. எமது தேசியத் தலைவர் உயிருடனும் நலமாகவும் உள்ளார் என்பதை மட்டும் என்னால் நிச்சயமாகக் கூற முடியும். ஆனால், எமது அமைப்பின் பல மூத்த உறுப்பினர்களும் தலைவர்களும் உயிரிழந்திருக்கின்றனர் அல்லது துரோகத்தனமாகக் கொல்லப்பட்டுள்ளனர் என்பது உண்மை. இது மிகவும் தூரதிர்ஷ்டமானது. ஆனால், எமது மக்களுடைய விருப்பங்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்படும் வரையில் எமது போராட்டம் தொடரும்.

சிறிலங்கா இராணுவம் தமக்கு ஒரு இராணுவ வெற்றி கிடைத்திருப்பதாகப் பிரகடனம் செய்யலாம். ஆனால் அது ஒரு வஞ்சகத்தனமான வெற்றி என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. தமிழ் மக்களுடைய நம்பிக்கையை இவர்கள் முற்றாகவே இழந்துவிட்டனர்.

தற்போதைய நிலைமைகளின் அடிப்படையில் பார்க்கும்போது விடுதலைப் புலிகளின் எதிர்காலம் எவ்வாறு அமையும்?

தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு இராணுவ வழிமுறைகளில் அல்லாமல் ஒரு அரசியல் தீர்வைக் காண்பதற்கான முயற்சிகளையே முன்னெடுக்க வேண்டும் என்பதை நாம் எமது முன்னய அறிக்கைகள் பலவற்றிலும் தெளிவாகத் தெரிவித்திருந்தோம். எமது மக்களுடைய உயிர்களைப் பாதுகாப்பதற்காகவே இந்த நிலைப்பாட்டை நாம் எடுத்தோம். தமிழ் மக்கள் மீது குண்டுகளை வீசியும், எறிகணைகளால் தாக்குதல் நடத்தியும் அவர்களைப் படுகொலை செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் போரைப் பயன்படுத்துவதை தொடர்ந்தும் அனுமதிக்க நாம் விரும்பவில்லை.

இந்த விவகாரத்தில் தலையிட்டு தாக்குதலைத் தடுத்து நிறுத்துமாறு அனைத்துலக சமூகத்தை நாம் கேட்டுக்கொண்ட போதிலும், இதனைக் கருத்திற்கொள்ளாமல் தாக்குதல் நடவடிக்கையை தொடர்வதிலேயே சிறிலங்கா அரசு குறியாக இருந்தது. எமக்குக் கிடைத்துள்ள தகவல்களின்படி வெள்ளைக்கொடிகளை ஏந்தியவாறு சரணடைய முன்வந்த எமது போராளிகளும் தலைவர்களும் அனைத்துலக நடவடிக்கைகள் அனைத்தையும் மீறும் வகையில் ஈவிரக்கமற்ற முறையில் சுட்டுக் கொல்லப் பட்டிருக்கின்றார்கள். இந்த விடயத்தில் ஒரு பலமான நிலைப்பாட்டை எடுத்து சிறிலங்கா அரசாங்கத்தை இணங்கச் செய்வதற்கும் அனைத்துலக சமூகம் மறுத்துவிட்டது.

இந்த நிகழ்வுகளையிட்டு நாம் மிகவும் வருந்துகின்றோம். ஆனால், இலங்கையில் உள்ள தமிழர்களின் எதிர்காலமும் தமிழ்த் தேசியப் பிரச்சினையும் தீர்வு எதுவும் இன்றி தொடர்ந்திருக்கப் போகின்றது.
தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான தீர்வை முன்னெடுப்பதற்கான தமது பிரதிநிதிகளாக விடுதலைப் புலிகள் அமைப்புக்கு தமது ஆணையை மக்கள் வழங்கியிருக்கின்றனர். இவ்வாறு மக்கள் எமக்கு அளித்துள்ள ஆணையின் அடிப்படையில் பொருத்தமான மாற்றுத் திட்டங்களையிட்டுப் பரிசீலனை செய்வதற்கு எமது அமைப்பு தயாராக இருக்கின்றது.

நீங்கள் அரசியல் தீர்வு ஒன்று தொடர்பாகப் பேசுகின்றீர்கள். ஆனால் கொழும்பு வெளிப்படுத்தும் உணர்வுகளும், தமிழ் மக்களுடைய விருப்பங்களைப் புரிந்துகொள்ளாதவாறு நாட்டின் ஏனைய பகுதிகளில் காணப்படும் மனநிலையும் இதற்கு ஏற்றதாக உள்ளதா?

சிங்கள மக்களிடம் இருந்து வெளிப்படும் உணர்வுகளும் அவர்களின் போக்கும் துரதிர்ஷ்டமானதாகவே இருக்கின்றது. அந்த நாட்டில் தமிழர்கள் சம உரிமை கொண்ட குடிமக்களாக கருதப்பட்டால் அவர்கள் கெளரவத்துடன் நடத்தப்பட வேண்டும். ஆனால், அரசாங்கமும் அதன் இராணுவத்தினரும் பேரினவாதத்தை ஊக்குவிக்கும் வகையிலேயே தமது செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன. இது, இனங்களுக்கு இடையேயான பிளவுகளை மேலும் அதிகப்படுத்துவதற்கே வழிவகுப்பதாக இருக்கும் என்பதுடன், பகை உணர்வுக்கு முடிவைக் கொண்டுவருவதற்கும் தடையாகவே இருக்கும்.

'விடுதலைப் புலிகளுக்குப் பிற்பட்ட காலம்' எனப் பேசப்படுகின்றது. இந்த நிலையில் விடுதலைப் புலிகளால் மக்களை எவ்வாறு அணிதிரட்டி அதற்கான தலைமையை வழங்க முடியும்?

எமது தேசியப் பிரச்சினை ஆசியாவின் நீண்டகாலப் பிரச்சினைகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகின்றது. தற்போது உருவாகியிருக்கும் நிலைமைகளுக்கு இசைவாக எமது தந்திரோபாயங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பது எமது தலைமைக்குத் தெரியும். புலம்பெயர்ந்த தமிழர்கள் விடுதலைப் புலிகளுக்குப் பின்னால் அணி திரண்டு தமது தீவிரமான ஆதரவை உலகம் முழுவதிலும் வெளிப்படுத்தியிருந்தமையை நீங்கள் பார்த்திருப்பீர்கள். வன்னியில் இடம்பெற்றுள்ள கொடூரம் தமிழர்களிடையேயான ஒற்றுமையை மேலும் பலப்படுத்தியிருக்கின்றது.
இதனைத் தனித்துநின்று சாதிக்க முடியாது என்பது எமக்குத் தெரியும். தமிழர்களின் நலன்களையும், அவர்களுடைய எதிர்காலத்தையும் உறுதிப்படுத்துவதற்காக இலங்கையிலோ அல்லது வெளிநாட்டிலோ தமிழர்கள் அல்லது தமிழ் அரசியல் கட்சிகள் மேற்கொள்ளக்கூடிய பங்களிப்பை நாம் வரவேற்கின்றோம். இதனை அடைவதற்காக இந்தியாவில் உள்ள தமிழ்க் கட்சிகள் உட்பட அனைத்துக் கட்சிகளுடனும் இணைந்து செயற்படுவதற்கு நாம் விரும்புகின்றோம்.

தமிழர்களின் இந்த தேசியப் பிரச்சனையின் அடிப்படையில் பல தமிழ்க் கட்சிகள் முன்னர் ஆயுதம் ஏந்திய போராட்டத்தை மேற்கொண்டிருந்தன. அவர்கள் அந்தக் கோட்பாடுகளுக்கு இப்போதும் கெளரவம் கொடுப்பார்கள் என நாம் நம்புகின்றோம். இந்த நிலையில் அதனை அடைவதற்காக இணைந்து செயற்படுவதற்கு அவர்கள் முன்வருவார்கள் என நாம் நம்புகின்றோம்.

பிரபாகரன் தப்பித்துச் சென்றது எப்படி?

- நக்கீரன் புலனாய்வுக் கட்டுரை!
-காமராஜ் (இணையாசிரியர்,நக்கீரன்)

ஊடகங்களில் ஈழம் பற்றிய செய்திகள் தாறுமாறாக வெளியாகிக்கொண்டே இருந்தன. இந்தியாவில் தேர்தல் முடிவுகளை மக்கள் அறிந்துகொண்டிருந்த நேரம். மே 16-ந் தேதி சனிக்கிழமையன்று வன்னிக் காட்டில் பாரிய அளவிலான திட்டம் ஒன்றிற்குத் தயாராகியிருந்தனர் விடுதலைப் புலிகள்.

நெருங்கி வரும் சிங்கள ராணுவ வளையத்தை ஊடறுத்துத் தாக்கி, புலிகளின் முக்கியத் தலைவர்கள் வெளியேறுவது என்பதுதான் அந்தத் திட்டம். புலிகளுக்கேயுரிய போர் வியூகங்களின்படி நடந்த இந்த ஊடறுப்புத் தாக்குதலில் 100க்கும் அதிகமான சிங்கள ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில், பிரபாகரனின் சமகாலத் தலைவரான சொர்ணம் இந்தத் தாக்குதலில் ராணுவத்தினரால் கொல்லப்பட, புலிகளின் முயற்சி தோல்வியடைந்தது.

களத்தில் இழப்புகள் சகஜமானதுதான் என்பதைப் புலிகள் அறிவார்கள். ஆனால், தங்களின் இலட்சியமான தமிழீழத் தாயகம் அமைவதற்கு எதை இழக்கவேண்டும் எதைக் காப்பாற்ற வேண்டும் என்பதிலும் அவர்கள் கவனமாக இருப்பார்கள். அதனால், மே 17-ந் தேதியன்று புலிகளின் மூத்த தளபதிகள் அனைவரும், தங்களுக்கு வழக்கமாகக் கட்டளையிடும் பிரபாகரனிடம், கோரிக்கை வடிவில் ஒரு கட்டளை பிறப்பித்தனர் என்கிறார்கள் தொடர்பில் உள்ள வட்டாரத்தினர்.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் இங்கிருந்து வெளியேற வேண்டிய தருணம் இது. ஏணென்டால், சிங்கள ராணுவம் தனது பாரிய படைகளோடு நெருங்கி விட்டது. இது இந்தப் போரின் இறுதிக்கட்டம். இதிலிருந்து தலைவர் அவர்கள் மீண்டால்தான் அடுத்த கட்ட போராட்டத்தை முன்னெடுக்க முடியும். நம்முடைய இலட்சியமான தமிழீழத்தை வென்றெடுக்க முடியும் என்று தளபதிகள் சொன்னதை பிரபாகரன் ஏற்றுக் கொள்ளவில்லையாம். நமது மண்ணின் விடுதலைக்காகத்தான் நான் போராடுகிறேன். அதனால் கடைசிவரை இந்த மண்ணில்தான் இருப்பேன் என பிரபாகரன் உறுதியான குரலில் கூற, தளபதிகள் அவரிடம் நீண்ட நேரம் வாதாடியுள்ளனர். இந்த மண்ணில் உங்கட மகன் நின்று போராடட்டும். எங்கட தலைவராகிய நீங்கள் பாதுகாப்பான இடத்துக்குப் போயாக வேண்டும். அப்போதுதான் இந்தப் போராட்டம் எழுச்சியோடு தொடரும் என்று தங்களுடைய கோரிக்கைக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள்.

தளபதிகளின் கோரிக்கையை யோசித்த பிரபாகரன், தனது மகன் சார்லஸ் அந்தோணியை ஈழமண்ணில் இருக்கச் செய்து போரை தொடர்ந்து நடத்தச் சொல்லிவிட்டு, தளபதிகள் கூறுவதுபோல, அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற நீண்ட யோசனைக்குப்பின் சம்மதித்துள்ளார்.

இதையடுத்து, மே 17-ந் தேதி ஞாயிறன்று இந்தியாவின் ஆங்கில ஊடகங்களில் ஈழநிலவரம் குறித்து சிங்கள அரசு பரப்பிய தகவல்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த நேரத்தில், புலிகள் ஒரு பெருந் தாக்குதல் திட்டத்திற்குத் தங்களைத் தயார்படுத்தியிருந்தனர் என்கிறது கள நிலவரம். மிகச் சரியாக வியூகம் வகுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட அந்தத் திட்டம் இதுதான் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
5000 கிலோ வெடிமருந்துகளை தங்கள் உடலில் கட்டிக்கொண்டு 30-க்கும் அதிகமான கரும்புலிகள் ஊடறுப்புத் தாக்குதல் நடத்துவது என்ற திட் டத்தின்படி இருவரணி, மூவரணியாக கரும்புலிகள் பிரிந்து, முன்னேறி வந்த சிங்கள ராணுவத்தினர் மீது தற்கொலைத் தாக்குதலை நடத்தினர். விடுதலைப்புலிகளின் மற்ற படையணியினரும் சரமாரியாக சுட்டுக்கொண்டே ராணுவத்தை எதிர்த்து வீரச்சமர் புரிந்தனர்.

தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வந்த சிங்கள ராணுவம் இதனை எதிர்பார்க்க வில்லை. தங்கள் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் தலைவரைப் பாது காப்பதற்கான ஊடறுப்புத் தாக்குதலில் ஈடுபட்ட புலிகளை ராணுவத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை. இருதரப்பிலும் கடும் சண்டை நடந்த அவ்வேளையில், வெடிமருந்துகளுடன் பாயும் புலிகளைக் கண்டு ராணுவம் சிதறியது. இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி, பிரபாகரனை அங்கிருந்து பாதுகாப்பாக கொண்டு சென்றனர் தளபதிகள்.

புலிகளின் வசமிருந்த கடல்பகுதியில் போர்த்துகீசியர்கள் காலத்தில் கட்டப் பட்டிருந்த கோட்டை ஒன்று உண்டு. அந்தக் கோட்டைக்குள் பிரபாகரனை அழைத்துச் சென்றனர். அந்தக் கோட்டையின் கீழ்ப் பகுதியில் பழையகாலத்து சுரங்கப்பாதை உள்ளது. அந்த சுரங்கப்பாதை வழியாக பிரபாகரனை முள்ளிவாய்க்கால் கடற் பகுதிக்கு அழைத்துச்சென்றனர். அங்கே கடற்புலிகளின் படகு தயாராக இருந்தது. அதில் பிரபாகரனை ஏறச் செய்தனர்.
அதேவேளையில், வன்னிக்காட்டில் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியது. அப்போது, இன்னொரு தற்கொலைப் படையும் படையணியும் வீரம் செறிந்த தாக்குதலைத் தொடர்ந்தது. மீண்டும் ராணுவத்தினர் சிதற, அந்தத் தருணத்தில் பொட்டு அம்மான் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார். அப்போது திறம்படக் களமாடியவர் சார்லஸ் அந்தோணி. புலிகளின் தாக்குதலில் சிதறி ஓடுவதும், மீண்டும் ராணுவம் தாக்க வருவதுமாக வன்னிக் களம் அதிர்ந்து கொண்டிருந்த நிலையில், கடற்புலிகளின் தளபதியான சூசையை பாதுகாப்பாக வெளியே அனுப்பும் முயற்சி மேற்கொள்ளப் பட்டது.

தன் குடும்பத்தின் மீது அதிகப் பாசம் கொண்டவர் சூசை. அவரது மனைவியும் 17 வயது மகளும் ராணுவத்தின் பிடியில் சிக்கி சில நாட்கள்தான் ஆகின்றன. மனதை கல்லாக்கிக்கொண்டு, இலட்சி யத்தின் அடுத்த கட்டத்தை அடைவதற்காக பாதுகாப்பாக வெளியேறினார் சூசை.

புலிகளின் அடுத்தடுத்து 23 தற்கொலை தாக்குதல் சம்பவங் களால் இரண்டாயிரத்திற்கும் அதிகமான சிங்கள ராணுவத்தினர் செத்து விழுந்தனர். இந்தத் தாக்குதல்களை முன்னின்று நடத் திய பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோணி, சிங்கள ராணுவத்தின் தாக்குதலுக்குள்ளாகி களப்பலி யானார். புலிகளின் கடைசிநேர அதிரடித் தாக்குதல், சிங்கள ராணுவத்தின் 58-வது டிவிஷனை நிலைகுலைய வைத்தது. புலிகள் அடிக்கத் தொடங்கிவிட்டார்கள் என்ற பயபீதியில் ராணுவத்தினர் சிதறி ஓடினர்.வன்னிக்காடு புகை மண்டலமானது. கடைசி இலக்கை நெருங்கிவிடலாம் என நினைத்த ராணுவத்தின் கண்களை கரும்புகை மறைத்து, முன்னேற் றத்தை முடக்கியது.
இதனால் பிரபாகரனையும் பொட்டு அம்மான், சூசை ஆகி யோரையும் பாதுகாப்பாக வெளியேற்றுவது சாத்திய மானது. அவர்கள் தனித்தனி படகில் ஒருவர் பின் ஒருவராகப் பயணித்தனர். கடற்புலிகள் பயன் படுத்தும் படகுகளின் வேகம் சிங்கள ராணுவத்தை மிரள வைக்கக் கூடியது. உதாரணத்திற்கு, ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்குச் செல்ல வேண்டு மென்றால் 12 நிமி டங்களில் அந்தப் படகின் மூலமாகச் சென்று விட லாம். மின்னல் பாய்ச்சலில் செல்லும் அத்தகைய படகுகளில் பிரபாகரனும் முக்கியத் தளபதிகளும் பயணித்து, இலங்கையி லிருந்து கிழக்குத் திசை நோக்கி 3 மணி நேரப் பய ணத்தில் பாதுகாப்பான இடத்தை அடைந்துள்ளதாக கள நிலவரங் கள் தெரிவிக்கின்றன.

சிங்கள கடல் எல்லைக்குட்பட்ட ராணுவக் கப்பல்களை ஏமாற்றி விட்டுச் செல்வது புலிகளுக்கு கைவந்த கலை. அதே நேரத்தில், சர்வதேச கடல் எல்லையில் இலங்கைக்காகத் தீவிரக் கண்காணிப்பை மேற்கொண்டிருக்கும் இந்தியக் கடற் படைக் கப்பல்களின் கண்ணில் மணலை அள்ளிக்கொட்ட முடியுமா என்ற தயக்கம் புலிகள் தரப்பிலேயே இருந் திருக்கிறது. ஆனால், இந்தியக் கடற்படைக்கு ஏற்கனவே உரிய உத்தரவுகள் இடப்பட்டிருந்தன. இலங்கையிலிருந்து வெளியேறும் படகுகளைப் பிடித்துக் கொடுப்பது நமது வேலையல்ல என்பதுதான் அந்த உத்தரவு. பலவித பிரஷர்களால் இந்த உத்தரவு இடப்பட்டிருந்தது. அதனால், அந்த மின்னல் வேகப்படகு சீறிச் சென்றபோது, மேலிடத்து உத்தரவுக்கேற்ப இந்தியக் கடற்படை தனது செயல்பாடுகள் எதையும் மேற்கொள்ளவில்லையாம்.

ஞாயிறன்று புலிகள் மேற்கொண்ட இந்த வெற்றிகரமான ஊடறுப்புத் தாக்குதலுக்குப் பிறகுதான், திங்கட்கிழமையன்று காலையில் கடைசி நிலப்பரப்பையும் பிடிப்பதற்கான கொடூரத்தாக்குதலை சிங்கள ராணுவம் மேற்கொண்டது. பீரங்கிகள், எறிகணைகள் ஆகியவற்றை அதிகளவில் பயன்படுத்தி தாக்குதலை நடத்தியபடியே முன்னேறிய ராணுவம், பிரபாகரன் தங்கியிருப்பதாகத் தங்களுக்கு தகவல் வந்த பகுதியில் சகட்டுமேனிக்குத் தாக்குதல் நடத்தி கரும்புகை மண்டல மாக்கியது. எஞ்சியிருந்த புலிகளையும் அப்பாவி மக்களையும் சிங்கள ராணுவத்தின் ஆயுதங்கள் உயிர் குடித்தன.

அந்தத் தாக்குதலின்போதுதான், குண்டு துளைக்காத கவசம் கொண்ட ஒரு ஆம்புலன்ஸ் வண்டியில் பிரபாகரனுடன் பொட்டு அம்மான், சூசை ஆகியோர் தப்பிக்க முயன்றதாகவும் அந்த வண்டிக்கு முன்னால் ஒரு வாகனத்தில் வந்த புலிகள், ராணுவத்தை நோக்கித் தாக்குதல் நடத்தியதாகவும், பதில் தாக்குதலாக ராக்கெட் லாஞ்சர்களை ராணுவம் ஏவியபோது, பிரபா கரனும் தளபதிகளும் சென்ற ஆம்புலன்ஸ் வண்டி தாக்கப்பட்டு மூவரும் கொல்லப் பட்டதாகவும் சிங்கள அரசு மீடியாக்களுக் குப் பரப்பியது. அதனை இந்தியாவின் ஆங்கில சேனல்கள் நொடிக்கொரு முறை பரப்பிக் கொண்டிருந்தன.

ஞாயிறு இரவிலும் திங்கள் காலை யிலும் சிங்கள ராணுவம் நடத்திய கொடூரத் தாக்குதலில் புலிப்படையினர் பெரு மளவில் பலியாயினர். பிரபாகரன் உள்ளிட்ட அனைத்து தளபதி களின் கதையையும் முடித்துவிட்டோம் என சிங்கள அரசு கொக்கரித்துக் கொண்டிருந்தது. புலிகளை முற்றிலும் ஒழித்துவிட்டதாக பிரணாப் முகர்ஜியைத் தொடர்புகொண்டு ராஜபக்சே தெரிவித்தார்.

பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என இந்திய வெளியுறவுத்துறையும் நம்பியது. இதனை அத்துறையின் செய்தி தொடர் பாளரே பிரஸ் மீட்டில் தெரிவித்தார். வன்னிக்காட்டில் சிதறிக் கிடந்த புலிகளின் உடல்களை ராணுவத்தினர் வரிசையாக அடுக்கி வைத்திருந் தனர். சில உடல் கள் கருகியிருந்தன. பிரபாகரன் உள் ளிட்ட புலிகளின் முக்கியத் தலைவர் களை அடையாளம் காண்பதற்காக கருணாவை கொழும்பிலிருந்து தனி ஹெலிகாப்டரில் அழைத்து வந்தது சிங்கள ராணுவம். புலிகளால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் இருந்த கருணா, அவர் கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டார்கள் என்ற தகவலைக் கேட்டு, உற்சாகமாகத்தான் காட்டுப்பகுதிக்கு வந்தார். வரிசையாகக் கிடத்தி வைக்கப் பட்டிருந்த சடலங்களைப் பார்த்த அவருக்கு அதிர்ச்சி.

சிங்கள ராணுவம் கொன்றதாகச் சொல்லப்பட்ட புலிகளின் தளபதிகளில் ஒருவரின் உடலைக்கூட கருணாவால் அங்கு பார்க்க முடியவில்லை. உதட்டைப் பிதுக்கிவிட்டுத் திரும்பிய கருணா, “மொக்கச் சிங்களனுங்க கோட்டை விட்டுட்டானுங்க’ எனத் தனது சகாக்களிடம் சொல்லி யிருக்கிறார்.

இந்த நிலையில், செவ்வாயன்று காலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அதிபர் ராஜபக்சே, விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றி எதுவும் சொல்லாதது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது. பகல் 12 மணியளவில், நந்திக்கடல் பகுதியில், தலையில் சுடப்பட்ட பிரபாகரனின் உடல் கிடந்ததாக சிங்கள ராணுவம் அறிவித்து, தான் எடுத்த சில க்ளிப்புங்கு களை மீடியாக்களுக்குக் கொடுத்தது.

பிரபாகரனின் தோற்றத்தை விட மெலிந்திருந்தது உடல். அவர் கையில் எப்போதும் கட்டியிருக்கும் வாட்ச் இல்லை. கழுத்தில் கயிறு அணிந்து பாக் கெட்டில் சய னைடு குப்பி வைத்தி ருப்பது வழக்கம். ஆனால், சிங்கள ராணுவம் காட்டிய படத்திலோ சயனைடு குப்பி இல்லை. ஐடென்ட்டி கார்டு காட்டப்பட்டது. இப்படி பல முரண்பாடுகளைக் கொண்ட க்ளிப்புங்கு களைக் காட்டியதுடன், மதியம் கண்டு பிடிக்கப்பட்ட உடலை ஒரு சில மணிநேரத்தில் டி.என்.ஏ சோதனை மூலமாக உறுதிப்படுத்தி விட்டதாகவும் சிங்கள அரசு தம்பட்ட மடித்தது.

தண்ணீரில் கிடந்த உடல் எனச் சொல்லப்பட்ட நிலையில் கைகள் மட்டும் ஊறியிருக்க, முகம் நன்கு ஷேவ் செய்யப்பட்ட நிலையில் மொழுமொழுவென இளவயது பிரபாகரன் போல் இருந்தது. இது எப்படி சாத்தியம் என்பதை தசாவதாரம் படத்தில் மாஸ்க் அணிந்த கமலை பத்து கெட்டப்புகளில் பார்த்த தொழில்நுட்பம் அறிந்தவர்களால் விளக்க முடியும் என்கிறார்கள் தடயவியல் துறையினர்.

சிங்கள அரசின் பிரச்சாரத்தை ஊடகங்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பிக் கொண்டிருந்த வேளையில், நக்கீரனின் தொடர்ச்சியான முயற்சிகளின் மூலம் கிடைத்திருக்கும் உறுதி யான தகவல், உலகத் தமிழர்களின் நேசத்திற்குரிய விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பதுதான். பிர பாகரனின் மனைவி, மகள், இரண்டாவது மகன் ஆகியோர் பாதுகாப்பாக வெளிநாட்டில் உள்ளனர்.

தன்னுடைய பாதுகாப்பு ஏற்பாடுகளை சரிவர ஏற்படுத்திக்கொண்டபிறகு , பிரபாகரனே ஊடகத்தில் தோன்றி உரையாற்றுவார். அதுவரை சிங்கள ராணுவம் தனது தரப்புச் செய்திகளை பரப்பிக்கொண்டிருக்கும். பிரபாகரன் ஊடகங் களில் உரையாற்றும்போது சிங்கள அரசின் மாஸ்க் முகம் அம்பலத்திற்கு வரும் என்கி றார்கள் மிகமிக முக்கியமானவர்கள். நக்கீரனுக்கு கிடைத்துள்ள இந்தத் தகவல், ஆயிரம் மடங்கு நம்பகத்தன்மை வாய்ந்தது என்பதை வாசகர்களிடம் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.


-காமராஜ்

இணையாசிரியர்,
நக்கீரன்

09 April 2009

பிரபாகரன் மகனும் விகடன் கட்டுரையும்

இலங்கையை அதிர வைத்துள்ள பிரபாகரன் மகனும், விகடன் கட்டுரையும்!

சென்னை: ஆனந்த விகடனின் 30 ஆண்டு கால இலங்கைக்கான ஏஜென்ட் ஸ்ரீதர்சிங் நேற்று பயங்கரவாத தடுப்பு காவல் துறையினரால் நேற்று கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்படக் காரணம் விகடனில் வெளியாகியுள்ள ஒரு பரபரப்புக் கட்டுரைதான்.

'பிரபாகரன் மகன்' எனும் தலைப்பில் வெளியாகியுள்ள அந்த அதிரடிக் கட்டுரையை இங்கு தருகிறோம்

விகடன் கட்டுரை ..

சார்லஸ் ஆன்டனி - 20 ஆண்டுகள் கழித்து சிங்கள அரசாங்கத்துக்கு மீண்டும் ஒரு புலி சொப்பனமாக மாறியிருக்கும் பெயர்!

அன்று இருந்த ஆன்டனி, பிரபாகரனின் ஆத்மார்த்தமான நண்பன். இன்று இருக்கும் ஆன்டனி, உயிருக்குயிரான மகன்!

சார்லஸ் ஆன்டனியைப் பிரபாகரனால் மறக்க முடியாது. 25 ஆண்டுக்கு முன்னால், சாவகச்சேரி காவல் நிலையத்தைக் கைப்பற்றிய சம்பவம்தான் ஜெயவர்த்தனே அரசாங்கத்துக்குப் புலிகள் மீது பெரிய அச்சத்தை ஏற்படுத்தியது.

ஒரு பஸ்ஸைக் கடத்தி, அதில் சார்லஸ் தலைமையிலான புலிப் படை காவல் நிலையத்தை நோக்கி வந்தது. இயந்திரத் துப்பாக்கிகள் முழங்க உள்ளே நுழைந்த சார்லஸ், அங்கு ஆயுத அறை எங்கே இருக்கிறது என்று தேடினார்.

ஒரு ரிவால்வர், 28 துப்பாக்கிகள், இரண்டு இயந்திரத் துப்பாக்கிகள் என இருந்ததை அள்ளிக்கொண்டு வெளியேறினார்கள்.

சார்லஸைக் குறிவைத்துத் தேடியது சிங்கள ராணுவம். யாழ்ப்பாணத்துக்குப் பக்கத்தில் மீசாலை என்ற இடத்தில் அவர் தங்கி இருப்பதாகத் தகவல் கிடைக்க… போய் இறங்கினார்கள்.

பனை மரங்களுக்குள் ராணுவம் பதுங்கியிருக்க, வெட்டவெளியில் மாட்டிக் கொண்டனர் சார்லஸூம் இரண்டு போராளிகளும். முதல் குண்டு நெஞ்சில் பாய்ந்தது. உயிரோடு தான் பிடிபடக் கூடாது என்று நினைத்த சார்லஸ், ‘என்னைக் கொன்றுவிடு. எந்தப் புலியையும் ராணுவம் உயிரோடு பிடிக்கக் கூடாது’ என்று சக போராளிக்கு உத்தரவு போட்டார். அவன் சம்மதிக்கவில்லை. மீண்டும் கட்டாயப்படுத்தி கெஞ்சினார் சார்லஸ். கடைசியில் அழுதுகொண்டே சுட்டான் அவன்.

‘பிரபாகரன் இந்த அளவுக்கு உடைந்துபோய் நான் பார்த்ததில்லை’ என்று கிட்டு சொல்லும் அளவுக்கு அந்த மரணம் பிரபாகரனைப் பாதித்தது. ஆன்டனியை மறக்க முடியவில்லை அவரால். இரண்டு ஆண்டுகள் கழித்து தனக்கு மகன் பிறந்தபோது, ‘சார்லஸ் ஆன்டனி’ என்று பெயர் வைத்தார். மீசாலையில் சுட்டு வீழ்த்தப்பட்ட சார்லஸ் மீண்டு வருவான் என்று சிங்கள ராணுவம் கனவிலும் நினைத்திருக்காது. சாதாரணமாக சைக்கிளில் போய் இயக்கத்தை வளர்த்த பிரபாகரன், இன்று விமானத்தை வைத்து சிங்கள அரசுக்குச் சிக்கல் கொடுத்துவரும் குடைச்சலின் பின்னணியில், அவரது மகன் சார்லஸ் இருப்பதாகச் சந்தேகப்படுகிறது சிங்கள அரசு.

விமானக் குண்டுவீச்சில்தான் சார்லஸின் வாழ்க்கையே ஆரம்பிக்கிறது. இன்று சார்லஸூக்கு 23 வயது. அவர் பிறந்த காலங்களில்தான் சிங்கள ராணுவம் அதிகமாக விமானப் படைத் தாக்குதலைத் தொடங்கியது. இதிலிருந்து எப்படித் தப்பிக்க வேண்டும் என்று புலிகள் மக்களுக்குச் சொல்லிக் கொடுத்தார்கள். ‘குண்டுவீச்சில் இருந்து பாதுகாப்பு’ என்ற புத்தகம் போட்டு வீடு வீடாகக் கொடுத்தார்கள். அம்மா மதிவதனியுடன் பெரும்பாலும் பதுங்கு குழிகளில்தான் வளர்ந்தார் சார்லஸ். புதுக்குடியிருப்புப் பள்ளியில் தொடக்கக் கல்வி படித்தார். அட்வான்ஸ் லெவல் வரை படித்ததாகச் சொல்கிறார்கள். அதாவது, இங்கு நம் ப்ளஸ் டூ போல. ஜெனரல் சர்டிஃபிகேட் ஆஃப் எஜுகேஷன் என்று இதற்குப் பெயர்.

இதை அவர் முடிக்கும்போது இலங்கையில் போர்ச் சூழல் குறைந்து ரணில் விக்கிரமசிங்கே ஆட்சிக் காலம் ஆரம்பமானது. எனவே, தன்னை உயர் படிப்புக்காக வெளி நாட்டுக்கு அனுப்பிவைக்க மகன் ஆசைப்பட்டுக் கேட்கிறார். ‘ அது பாதுகாப்பானதல்ல’ என்று பிரபாகரன் நினைக்கிறார்.

கொழும்பில் படிக்க அனுப்பலாமா என்ற யோசனை. மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் விண்ணப்பம் வாங்கி இருக்கிறார்கள். ஆனால், அதையும் வேண்டாம் என்று முடிவெடுக்கிறார்கள். ஆனால், மகனது படிப்புக்குத் தடை போட பிரபாகரனுக்கு மனமில்லை. காரணம், சார்லஸின் டெக்னாலஜி ஆர்வம்.

சின்ன வயதில் இருந்தே எதையாவது பிரித்து மேய்வதில் ஈடுபாடு காண்பித்திருக்கிறார். போர்ப் பயிற்சிகளைவிட, போர் ஆயுதங்களைக் கையாளுவது, அது பற்றி படிப்பதில்தான் ஆர்வம் அதிகம் இருந்திருக்கிறது.

முதலில் ஏற்பட்டது கப்பல் ஆர்வம். படகுகள் கட்டும் பிரிவில் ஈடுபாடு காட்டியிருக்கிறார். சில மாதங்களில் கம்ப்யூட்டரைக் கையாளும் ஆர்வமாக அது மாறியிருக்கிறது. அதற்கு ஏற்ற மாதிரி ஆஸ்திரேலியாவில் இருந்து கம்ப்யூட்டர் படித்த 8 பையன்கள் கிளிநொச்சிக்குள் வந்திறங்கினர். அவர்கள் சார்லஸூக்குக் கற்றுக்கொடுத்தனர்.

அந்த எட்டு பேரும் பிரபாகரனால் வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டவர்கள். கிளிநொச்சியில் இருந்து படிப்பில் ஆர்வமான பையன்களை பிரபாகரன் தேர்ந்தெடுத்து, பல ஆண்டுகளுக்கு முன்னால் ஆஸ்திரேலியா அனுப்பி வைத்தாராம்.

அவர்கள், அங்குள்ள மொனாஸ் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் படித்ததாக சிங்களப் பத்திரிகை ‘தி பொட்டம்லைன்’ எழுதுகிறது. சார்லஸூக்கு கம்ப்யூட்டர் கற்றுக்கொடுத்த ஆசான்கள் இவர்கள்தானாம். இதைத் தொடர்ந்து தகவல் தொழில்நுட்பப் பிரிவில் சார்லஸ் வலம் வந்தார்.

அடுத்ததாக, கிளிநொச்சிக்கு வந்து இறங்கியதுதான் இப்போது கலக்கிக்கொண்டு இருக்கும் வான் படை. இளம் நீல நிற வரிப்புலிச் சீருடையும் ‘வானோடி’ என்று பொறிக்கப்பட்ட சின்னத்தையும் பொருத்தி ஒரு படை கட்ட வேண்டும் என்பது பிரபாகரனின் பல்லாண்டுக் கனவு.
அவருடன் அப்பையா அண்ணை என்று ஒருவர் ஆரம்ப காலத்தில் இருந்திருக்கிறார். அவர்’நான் விமானம் செய்யப் போறேன்’ என்று சில வேளைகளில் ஆர்வம் காட்டி இருக்கிறார். அப்போது, எல்லாரும் அவரைக் கிண்டல் செய்வார்களாம்.

கடற்படையில் வேலை பார்த்த தனது நண்பன் டேவிட் மூலமாக ‘கடற்புலி’களை ஆரம்பித்த பிரபாகரன், வான் படைக்கு ஒரு நண்பரைத் தேடினார். சங்கர் கிடைத்தார். கனடாவில் ஏரோநாட்டிக்ஸ் படித்தவர். ஏர் கனடாவில் வேலை பார்த்தவர். முதல் கட்டமாக பழைய விமானம் வாங்கப்பட்டது.

மாவீரர் துயிலுமிடம், வற்றாப்பளை அம்மன் கோயில் ஆகிய இடங்களில் 10 ஆண்டுகளுக்கு முன் இந்த விமானத்தை வைத்துப் பூத் தூவினார்கள். ‘பிரபாகரன் வைத்திருக்கும் விமானம் பூ தூவத்தான் லாயக்கு’ என்று சிங்களத் தளபதிகள் காமென்ட் அடித்தார்கள்.

‘விமானங்களை வாங்குவதற்கு முன் இயக்குவதற்கு ஆட்களைத் தயார் பண்ணுங்கள்’ என்று சங்கர் சொல்ல, ஒரு டீம் பிரான்ஸ், மலேசியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ‘சம்பந்தப்பட்ட நாட்டில் கொண்டுபோய்விட வேண்டியது எங்கள் வேலை.அங்கேயே ஏதாவது வேலை பார்த்துப் படித்து முடிக்க வேண்டியது உங்களது சாமர்த்தியம்’ என்ற அடிப்படையில் 20 பையன்கள் அனுப்பப்பட்டார்கள்.

வெளிநாடு வாழ் ஈழத் தமிழர்களும் உதவ, படிப்பை முடித்து 2002-ல் இந்தக் குழு கிளிநொச்சி வந்து இறங்கியது. இவர்கள் விமானப்படை சம்மந்தமான தொழில்நுட்பங்களை சார்லஸூக்கு ஊட்டினார்கள்.

அவர்களுக்கு தீனியாக சிறு விமானங்கள் தயாராக இருந்தன. ஒரு ஆள் மட்டும் பயணிப்பவை. செக்கோஸ்லோவேகியா நாட்டின் ‘சிலின் இசட் 143 எல்’ ரக விமானங்கள் இவை.

நாங்கள் புலிகளுக்கு விற்கவில்லை என்று அந்த நாடு மறுக்கிறது. வாங்கியதை அப்படியே பயன்படுத்தாமல், அதில் பல மாறுதல்களைச் செய்துள்ளார்களாம். இங்குதான் சார்லஸின் முக்கியப் பங்கு இருந்ததாகச் சொல்கிறார்கள். இப்போது வான் படையை ரத்னம் மாஸ்டர் என்பவர் வழிநடத்தி வருகிறாராம். சிறு விமானத்தை அதிக பயன்பாடு உள்ளதாக மாற்றும் வேலையை சார்லஸ் டீம் பார்த்து வருகிறது.

600 கி.மீ தூரம் போய் திரும்பத்தான் அதில் எரிபொருள் நிரப்ப முடியும். அதாவது ஒரு முறை கொழும்பு போய்விட்டுத் திரும்ப முடியும்.

விமானத்தில் குண்டு நிரப்பிக்கொண்டு போய் ஓர் இடத்தைத் தாக்க வேண்டும் என்று முடிவெடுக்கும்போது, அவ்வளவு எடையைக் கொண்டுசெல்ல இந்த விமானங்கள் வசதிப்படவில்லையாம்.

எனவே, சுமார் 240 கிலோ எடைகொண்ட குண்டுகளைப் பொருத்தும் பலம்கொண்டதாக மாற்றும் காரியங்களை சார்லஸ் டீம் பார்த்ததாம். அதே போல், ரேடாரின் கண்ணுக்குப் படாமல் தப்பிக்க வைக்கவும் இவர்களது குழு பாதை அமைத்துக் கொடுத்திருக்கிறது.

சமீபத்தில் நடந்த தாக்குதலுக்காக இரவு 8.30-க்குக் கிளம்பிய புலிகளின் விமானத்தை 9.20-க்குத்தான் சிங்களப் படை அறிய முடிந்திருக்கிறது.

அதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இத்தனைக்கும் சண்டை அதிகமாக நடக்கும் புதுக்குடியிருப்புக்குத் தென் மேற்குப் பகுதியில் இருந்துதான் விமானங்களைக் கிளப்பியிருக்கிறார்கள்.

ஒரு விமானம் வீழ்த்தப்பட்டது. இன்னொன்று வருமான வரிக் கட்டடத்தின் 3-வது மாடிக்கும் 12-வது மாடிக்கும் மத்தியில் புகுந்தது. 240 கிலோ குண்டு வெடித்ததில் அந்தக் கட்டடமே தீப்பிடித்து எரிந்தது.

புலிகள் வைத்திருக்கும் விமானத்தை ‘குரும்பட்டி மெஷின்’ என்று சிங்களவர்கள் கிண்டல் செய்வார்களாம். வளர்ச்சியின் ஆரம்பத்தில் இருக்கும் தேங்காய்க்குக் குரும்பு என்று பெயர். அந்தக் குரும்பை வைத்து இதுவரை எட்டு முறை குடைந்தெடுத்துவிட்டார்கள்.

அதுவும் குண்டுகளைக் கட்டிக் குதிக்கும் வான் கரும்புலிகள் வந்த பிறகு அச்சம் அதிகமாகி இருக்கிறது. ‘பலவீனமான இனத்தின் பலமான ஆயுதம்தான் கரும்புலிகள்’ என்று பிரபாகரன் சொல்கிறார்.

‘உன்னுடைய எதிரி உனக்கு எந்தக் கஷ்டத்தைக் கொடுத்தானோ, அதையே அவனுக்குத் திருப்பிக் கொடு’ என்பது இந்தக் கரும்புலிகளின் லட்சிய முழக்கமாம். ‘காற்றிலேறி விண்ணையும் சாடுவோம்’ என்று வான் புலிகளின் சட்டையில் எழுதப்பட்டிருக்கிறது.

அதுதான் கண்டம்விட்டுக் கண்டம் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது!

நன்றி: விகடன்

ஏற்கெனவே புலிகளின் விமான தாக்குதல் மற்றும் சார்லஸ் ஆன்டனியின் வான்படை வழிநடத்தும் திறன் போன்றவை குறித்து செய்திகள் வெளியிட்டதாலேயே உதயன் மற்றும் எதிரொலியின் பிரதம ஆசிரியர் ந.வித்யாதரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Quelle - Thats tamil